நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
இப்படம் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்ததோடு விஜய்யின் மார்கெட்டையும் உயர்த்தியது. வித்யா சாகர் இசையமைப்பில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப் பாடலாக இன்றும் நீடிக்கிறது.
தற்போது, அதிகரித்துவரும் ரீ ரிலீஸ் டிரெண்டில் கில்லியும் களமிறங்கியுள்ளது. ரசிகர்களின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுவெளியீட்டிலும் வசூலில் அசத்தி வருகிறது கில்லி!
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வசூலில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரசிகர்கள், கில்லி மறுவெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர். இப்படம், மறுவெளியீட்டிலும் வசூல் சாதனையைப் படைக்கும் என்றே கருதப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பிளாக்பஸ்டரான கில்லி, மீண்டும் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் இடத்திற்குச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.