
அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த வானத்தைப் போல தொடர் 1134 எபிஸோடுகளுடன் நிறைவடைந்தது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8.30 மணிக்கு வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
காதல், திருமணச் சிக்கல், மாமியார் - மருமகள், தாய் வளர்ப்பில் வளரும் மகள்களின் போராட்டம் என ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு மத்தியில் அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பானது.
இதனால் ஒளிபரப்பான தொடக்கத்திலிருந்தே பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. கடந்த 2020 டிசம்பர் முதல் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல தொடர், கடந்த இரு ஆண்டுகளாக டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதல் 5 இடங்களில் ஒன்றாகவே நீடித்து வந்தது.
வானத்தைப் போல தொடரில் அண்ணன் பாத்திரத்தில் நடித்து சின்ராசுவாக நடித்துவந்த தமன் குமாருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கத் தொடங்கினார். தங்கை பாத்திரத்தில் துளசியாக நடித்து வந்த ஸ்வேதாவுக்கு பதிலான நடிகை மான்யா நடிக்கத் தொடங்கினார்.
ஒரு தொடரின் முதன்மை பாத்திரங்களே மாற்றப்பட்ட நிலையிலும் வானத்தைப் போல தொடர் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது. புதிய நடிகர்களும் அண்ணன் - தங்கையாக ரசிகர்கள் மனதில் பதிந்ததால், வானத்தைப் போல தொடர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முன்னணி தொடராக இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வானத்தைப் போல தொடர் முடிவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்களில் நடித்து வந்த நடிகர், நடிகைகளும் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில், தற்போது 1,134 எபிஸோடுகளுடன் வானத்தைப் போல தொடர் நிறைவு பெற்றது.
பிரிந்து இருந்த அண்ணன் - தங்கை குடும்பம் சேர்ந்துவிட்டதைப் போன்றும், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து, அந்தக் குழந்தைகள் ஒற்றுமையுடன் வளர்வதைப் போன்றும் நேர்மறையாக தொடர் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முழுக்க முழுக்க அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வானத்தைப் போல தொடர், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சின்னத்திரையில் என்றும் நினைவில் நிற்கும் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.