லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பிப்.5) நடைபெற்றது. இதில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷா, “சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இதற்கு ஒரு பரிசாகக் கிடைத்ததுதான் லால் சலாம். அதற்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி. இப்படத்தில் பேசப்பட்ட அரசியலை அவர் தெளிவுடன் இயக்கியிருக்கிறார்.
ரஜினி சார் மிகச்சிறந்த மனிதர். இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும்போது என் முன்னாள் மனைவி ரஜினியை செல்போனில் அழைத்தவர், ‘லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதில், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். நான் நடிப்பதில் உனக்கு சம்மதமா’ எனக் கேட்டிருக்கிறார். இதை, அவர் (முன்னாள் மனைவி) என்னிடம் சொன்னார். என் முன்னாள் மனைவி, ரஜினி சாரின் நண்பரின் மகள். அதனால், ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என பெரிய மனதுடன் ரஜினி சார் நடந்துகொண்டார். லால் சலாமால் நல்ல நட்புகள் கிடைத்தன. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். என் திரைப்பட வெளியீட்டில் முதல் முறையாக நிம்மதியாக தூங்கி, முதல்நாள் திரையரங்கம் செல்லப்போகிறேன்.
இதையும் படிக்க: ’இதனால் நிறைய இழந்துவிட்டேன்..’: விக்ராந்த்
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதாக எழுந்த புரளியில் நான் இந்தியாவும் பாரத்தும் ஒன்றுதான் என நினைத்து பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். ஆனால், இதைக் கண்ட பலரும் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். உண்மையில், எனக்கு அரசியல் அறிவு பூஜ்யம்தான். இந்திய குடிமகனாக அது தவறாக எனக்குத் தெரியவில்லை. இதனால், என்னை இந்திய எதிர்ப்பாளராக மாற்றிவிட்டார்கள். அவ்வளவு வெறுப்பு. எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரை ஒதுக்குவது சரியல்ல. இப்படம், அந்த வெறுப்பு இருக்கக் கூடாது என்பதைத்தான் பேசுகிறது.” எனக் கூறினார்.