நடிகை யாமி கௌதமின் கணவரும் இயக்குநருமான ஆதித்யா தார் தயாரித்த படம் ஆர்டிகள் 370. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பை வழங்கியது.
மிகவும் சர்ச்சைக்குரிய இந்தக் கதையை படமாக எடுத்திருக்கிறார் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே. தயாரித்து இருக்கிறார் யாமி கௌதமின் கணவர் ஆதித்யா தார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்போல இந்தப் படமும் ஒரு பக்க சார்பாக பிரச்சார திரைப்படம் ஆக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தார் பேசியதாவது:
இது பிரச்சாரப் படமா எனக் கேள்வி கேட்குறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த ஆளும் அரசு தேர்தலில் வெற்றிபெற ஒரு சிறிய படம் தேவையில்லை. அவர்கள் நமக்காக ராமர் கோயிலை கட்டியிருக்கிறார்கள். இதற்காக நமக்கு 500 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதனால் அவர்கள் ஓட்டுகாக நாம் தேவைப்படப்போவதில்லை. இந்தப் படம் நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டோம் எனக் கூறினார்.
இந்தப் படம் பிப்.23ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் யாமி கௌதம், பிரியா மணி நடித்துள்ளனர்.