இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிப்.16 ஆம் தேதி சைரன் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தில், ஜெயம் ரவியின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெயம் ரவியிடம் அவரது ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆனால், அந்நிகழ்வில் கலந்துகொண்ட ரசிகர் ஒருவரால் ஜெயம் ரவியை நெருங்க முடியவில்லை. இதனால், வருத்தப்பட்ட ரசிகர் எக்ஸ் தளத்தில், “நான் உண்மையிலேயே உங்களை வெறுக்கிறேன் ஜெயம் ரவி அண்ணா. நெருக்கமான ரசிகர்கள் மட்டுமே உங்களுக்குத் தேவைப்பட்டால் எதற்காக அனைத்து ரசிகர்களையும் அழைத்தீர்கள். மிக மோசமான நாள். இந்த மாதிரியான நடத்தையை இனி உங்களிடம் பார்க்கக் கூடாது.” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவி, “ மன்னித்துவிடுங்கள் சகோதரரே. நான் அனைவரிடமும் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். எப்படி உங்களைத் தவறவிட்டேன் எனத் தெரியவில்லை. சென்னை வாருங்கள். உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன். வெறுக்காதீர்கள், அன்பைப் பரப்புங்கள்.” எனப் பதிலளித்துள்ளார்.