2023ஆம் ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் திருச்செல்வம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த தொடர் என்ற விருது, எதிர்நீச்சல் தொடருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் தனது குழுவினருடன் பெற்றுக்கொண்டார்.
எதிர்நீச்சல் தொடர் குறித்து பேசிய இயக்குநர் திருச்செல்வம், ஆண்டின் சிறந்த தொடராக எங்களின் தொடர் தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தனித்துவமாக வாழ வேண்டும். சுயமோடு வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வாழும் பெண்ணுக்கு அவை தடைபடும் போது, அவளுக்கு இடர்பாடுகள், சங்கடங்கள் உள்ளிட்டவை வரும். தடைகளைத் தாண்டி பெண்கள் மேலே வரவேண்டும். அதனை மையமாக வைத்துத்தான் எதிர்நீச்சல் தொடர் உருவானது.
இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே உங்களுக்குத் தெரிந்ததுதான். குறிப்பாக ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் மாரிமுத்து நம்மிடையே இப்போது இல்லை. அது எங்களுக்கு மிகப்பெரும் வருத்தமாக மாறிவிட்டது.
மாரிமுத்து குறித்து அப்போதே நிறைய பேசியாகிவிட்டது. இன்று இந்த ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை மாரிமுத்துவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மாரிமுத்துவின் நடிப்பால் எதிர்நீச்சல் தொடருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. தொடர்ந்து வெற்றிகரமாக பயணிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து டாப் 5 இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.