விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி, சிறகடிக்க ஆசை ஆகிய இரு தொடர்கள் ஓராண்டை நிறைவு செய்துள்ளன. இதில் சிறகடிக்க ஆசை தொடர் டிஆர்பியில் முதல் 10 தொடர்களில் ஒன்றாக இடம்பெற்றுவிடுகிறது.
மகாநதி தொடரும் மற்ற தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த டிஆர்பி பெறுகிறது. இந்த இரு தொடர்களும் தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை திவ்யா கணேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, அனந்தராமன், ருத்ரன் பிரதீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு நடிகை பிரதீபா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் திரைப்படங்களில் நடிப்பதால், மகாநதி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது இந்தத் தொடர் 5.13 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. தந்தையை இழந்த 4 சகோதரிகளின் கதை என்பதால், மகாநதி தொடர் இன்னும் பல மாதங்களுக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சிறகடிக்க ஆசை தொடரும் விஜய் தொலைக்காட்சியில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்தத் தொடரும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரை திருமணம் செய்துகொள்ளும் பூக்கடையில் பணிபுரியும் பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களும் சவால்களுமே சிறகடிக்க ஆசை தொடரின் கதை.
சிறகடிக்க ஆசை தொடரில் நடிகை கோமதி பிரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார்.
சிறகடிக்க ஆசை தொடர் 8.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இது இந்த மாதத்துக்கான நிலவரம். கடந்த சில மாதங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை தொடர் இருந்தது.
வணிக ரீதியிலும் மக்கள் மத்தியிலும் சிறகடிக்க ஆசை தொடருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ். குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார்.