நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் உடன் மும்பையில் மார்ச்.1ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது. திருமணம் எப்போது என விரைவில் அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.
தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் வரலட்சிமி சரத்குமார் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் விழிஞ்சம் கடல் பகுதியில் 2021ம் ஆண்டு 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வரலட்சிமியின் உதவியாளர் என தகவல் வெளியாகியது.
என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்த வதந்திகள் மீண்டும் இணையத்தில் வரத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் சரத்குமார் தன்னுடைய ச.ம.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதாகக் கூறியிருந்தார். அன்றிலிருந்து அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில் அவரது மகளான நடிகை வரலட்சுமியின் பழைய செய்திகளும் மீண்டும் பரவி வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து நடிகை வரலட்சிமி தனது எக்ஸ் பக்கத்தில் ஆவேசமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நமது அறிவார்ந்த செய்தி நிறுவனங்கள் வேறு செய்திகள் இல்லாததால் பழையப் பொய்யான செய்திகளை மீண்டும் சுற்றலில் விட்டுள்ளார்கள். நமது அறுமையான செய்தியாளர்களே, குறிப்பாக சுய பிரகடனம் செய்யும் செய்தி நிறுவனங்கள், உங்களது கட்டுரைகளில் ஏன் உண்மையான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சினிமா நடிகர், நடிகைகளிடம் உள்ள குறைகளைப் பார்ப்பதை கைவிடுங்கள். நாங்கள் எங்களது வேலையான நடிப்புத் தொழிலினை செய்கிறோம், மக்களை மகிழ்விக்க நினைக்கிறோம். ஏன் நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யலாமே?!
உண்மையிலேயே கவனம் கொள்ள வேண்டிய 1000 பிரச்னைகள் இருக்கின்றன. நாங்கள் அமைதியாக இருப்பதால், பலவீனமானவர்கள் என நினைக்காதீர்கள். அவ மதிப்பு வழக்குகளும் தற்போது டிரெண்டிங்கில்தான் இருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். நம்மைப் பெருமைப்பட வைக்கும் நிஜமான செய்திகளை வழங்குங்கள் எனக் கூறியுள்ளார்.