![எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?](http://media.assettype.com/dinamani%2F2024-05%2Fe4536510-8486-47c8-93a1-65319111c76c%2FScreenshot_2024_05_23_133116.png?rect=0%2C0%2C764%2C430&w=480&auto=format%2Ccompress&fit=max)
இன்று ஒரு திரைப்படம் 50 நாள்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டாலே அப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெற்றுள்ளது என அர்த்தம். அப்படி, பல நூறு நாள்கள் ஓடிய திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவர் சுதாகர்.
1978-ல் இயக்குநர் பாரதிராஜாவின், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சுதாகர். அப்படம் 365 நாள்கள் வரை திரையரங்குகளில் ஓடி, இந்தியளவில் பேசப்பட்ட படமானது. அதற்கு அடுத்த ஆண்டில் மாந்தோப்புக் கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, கரை கடந்த ஒருத்தி, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், சக்களத்தி என திரும்பிய பக்கமெல்லாம் சுதாகரின் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
1980-ல் மட்டும் 13 படங்களில் நாயகனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தமிழ் சினிமாவின் அடுத்த நட்சத்திர நடிகர் இவர்தான் என்கிற நிலையே உருவானது. பல திரைப்பட விநியோகஸ்தர்களும் சுதாகரின் படத்திற்கே முன்னுரிமை அளிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது. கிழக்கே போகும் ரயிலில் படத்தின் மூலம் சுதாகர் - ராதிகா இணை பிரபலமடைந்ததால் இருவரும் இணைந்து 11 படங்களில் நடித்தனர்.
சுதாகரின் திரை வாழ்வின் உச்சம் கண்ட ஆண்டுகள் இவைதான். அதன்பின், சில தோல்விப் படங்களால் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டவருக்கு தெலுங்கு சினிமா வரவேற்பைக் கொடுத்தது. காரணம், சுதாகர், நடிகர் சிரஞ்சீவியின் வகுப்புத் தோழர் என்பதால், சிரஞ்சீவி தன் படங்களில் வாய்ப்பளித்தார். துணை கதாபாத்திரமாக, நகைச்சுவை நடிகராக என அங்கும் ஆண்டிற்கு 10 படம் வரை நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
ஆனால், மீண்டும் தோல்விப் படங்களால் சுதாகர் மார்க்கெட் இழந்தார். மேலும், உடல் எடையும் அதிகரித்ததால் சினிமாவைவிட்டே விலக வேண்டிய நிலைக்குச் சென்றார். 1990-ல் நடிகர் ரஜினியுடன் இணைந்து ’அதிசயப் பிறவி’ படத்தில் நடித்தவர், அதன் பின் 2018-ல் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இப்போது 65 வயதாகும் நடிகர் சுதாகர், எந்தப் படங்களிலும் நடிப்பதில்லை. காரணம், உடல்நலச் சிக்கல்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழில் உச்ச நடிகராக இருந்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு முதுமையான தோற்றத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.