

சௌதி அரேபியாவில், நடைபெற்ற செங்கடல் சர்வதேச திரைப்பட விழாவில், “லாஸ்ட் லேண்ட்” படத்துக்கு சிறந்த திரைப்படம் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில், நடைபெற்று வந்த செங்கடல் (ரெட் ஸீ) திரைப்பட விழா இன்று (டிச. 13) நிறைவடைகின்றது. இதையடுத்து, விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ரோஹிங்கியா மொழியில் உருவான முதல் திரைப்படமான “லாஸ்ட் லேண்ட்” படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை, ஜப்பானைச் சேர்ந்த இயக்குநர் அகியோ ஃபுஜிமோட்டோ இயக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அகியோ ஃபுஜிமோட்டோவுக்கு, திரைப்பட விழாவின் நடுவரான ஹாலிவுட் இயக்குநர் சான் பேக்கர் விருதை வழங்கியுள்ளார். மேலும், இயக்குநர் அகியோவுக்கு ரூ.91 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா மக்கள் அந்நாட்டு அரசுகளால் பல ஆண்டுகளாகக் கொல்லப்பட்டும், கட்டாயமாக அவர்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். இதனால், பல்வேறு நாடுகளில் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
அவ்வாறு, அவர்களது நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் 9 வயது ரோஹிங்கியா சிறுமி அவரது இளைய சகோதரனுடன் மலேசியாவில் வசிக்கும் அவர்களது உறவினரைத் தேடி அகதியாகப் பயணம் மேற்கொள்ளும் கதைகளத்தில் இப்படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.