இன்றைய பான் இந்திய வணிக சினிமாக்களில் நாயகன் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்குகூட நாயகிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
ஆனால், 1980-களின் இறுதியில் பாலிவுட் படங்களில் நடிக்க பிரபல நடிகையொருவர் நட்சத்திர நடிகர்களைவிட அதிக சம்பளம் பெற்றார் என்றால் நம்ப முடியுமா? அதுவும் அந்த நடிகை தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்றவர் என்றால் கிள்ளித்தான் பார்க்க வேண்டும்.
நடிகை ஸ்ரீதேவிதான் இந்த பெருமைக்குச் சொந்தக்காரர். 1990-களின் துவக்கத்தில் இன்றைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ரூ. 50 - ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவி 1993 ஆம் ஆண்டு வெளியான, ‘ரூப் கி ராணி சரோன் கா ராஜா’ (roop ki rani choron ka raja) படத்தில் நடிக்க முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் பெற்று ஒட்டுமொத்த பாலிவுட்டையே அன்று திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.
இதையும் படிக்க: நடிகர் அஜித்துடன் இணைந்து நடிப்பேன்: விஜய் சேதுபதி
அவ்வளவு பெரிய சம்பளம் ஆண் நடிகர்களுக்கே கிடைக்காதபோது அதனைப் பெற்ற ஸ்ரீதேவிக்கு அப்போது 30 வயதுதான்.
தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு ஹிந்தி திரையுலகம் மிகப்பெரிய வாழ்க்கையையே அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதாரம் மற்றும் புகழ் ரீதியாக அன்று ஸ்ரீதேவி அடைந்த உச்சத்தை இன்றைய நடிகைகளால்கூட எட்டமுடியவில்லையே!
சுவாரஸ்யமாக, ஸ்ரீதேவிக்கு ரூ. 1 கோடி சம்பளத்தை வழங்கியது தயாரிப்பாளர் போனி கபூர். இவர் ஸ்ரீதேவியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்கிற மகள்கள் உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு துபையில் ஸ்ரீதேவி உயிரிழந்ததைத் தொடர்ந்து இரண்டு மகள்களும் அடுத்த சில ஆண்டுகளிலேயே சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகைகளாக இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.