
மல்லேஸ்வரம்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. அவருடைய கணவர் கல்லறை அருகிலேயே அடக்கம் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவி இன்று காலை காலமானார். அவரது உடல், கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே அவரது மறைவுச் செய்தியறிந்த மக்கள் ஏராளமானோர், சரோஜா தேவி இல்லத்துக்கு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை முற்பகல் 11 மணி வரையிலும் மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, மல்லேஸ்வரம் அருகேயுள்ள கொடிஹள்ளி தோட்டத்தில் அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரை ஜாம்பவான்கள் மூவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என மூவருக்குமே ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் உள்பட பல்வேறு சிறந்த விருதுகளையும், தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அரசுகளின் சிறந்த விருதுகளையும் பெற்றவர் நடிகை சரோஜா தேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.