
நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார்.
தற்போது, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. தயாரிப்பு நிறுவனமும் காந்தாவை செப். 12 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “அன்பும் மதிப்பும் மிக்க ரசிகர்களே... எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதிலிருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.
எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவை வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம்.
இதற்காக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கமல் செயலால் கண் கலங்கிய ஊர்வசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.