
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
71 ஆவது தேசிய விருது விழாவில், மலையாள நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் மோகன் லாலை கௌரவிக்கும் விதமாக, கேரள அரசின் சார்பில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி “மலையாளம் வனோலம், லால்சலாம்” எனும் பெயரில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் மோகன் லாலை சிறப்பிக்கும் இந்த விழாவிற்கான இலச்சினை, நேற்று (செப். 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
மேலும், 100 ஆண்டுகளைக் கடந்த மலையாள திரையுலகில் நடிகர் மோகன் லால் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாக கேரள கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார்.
இத்துடன், முக்கிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தப் பாராட்டு விழாவில் நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மெனன், லிஸ்ஸி மற்றும் பாடகர்கள் சுஜாதா மோகன், சுவேதா மோகன், சித்தாரா கிருஷ்ணகுமார், ஆர்யா தயாள், மஞ்சாரி, ஜோட்ஸ்னா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.