

ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் மூலம் என் இதயம் நிறைந்தது என நடிகை ப்ரீத்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.
வழக்கமாக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், இம்முறை தனியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, அதற்கு ஏற்ப பலூர், கேக், அரங்கம் என அனைத்தையும் ஒரே வண்ணத்தில் அலங்கரித்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.
விதவிதமான உடைகளில் புகைப்படங்களைப் பதிவிடுவது நடிகைகளின் வழக்கமாக இருந்தாலும், பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தனக்கான புரமோஷன் பட்டியலில் ப்ரீத்தி ஷர்மா சேர்த்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
புகைப்படங்களை வித்தியாசமான முறையில் பதிவிட்டு அவர் தெரிவித்திருப்பதாவது:
''என் இதயம் நிறைந்தது. உங்கள் எல்லையற்ற அன்பு, பிரார்த்தனை, பிறந்தநாள் வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்தது.
ஒவ்வொரு பிறந்தநாள் வாழ்த்து செய்தியும், ஸ்டோரியும், அழைப்பும் சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்குப் பெரியது. தனிப்பட்ட முறையில் பலருக்கும் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால், மன்னிக்க வேண்டுகிறேன்.
ஆனால், அனைவரின் குறுஞ்செய்திகளையும் புன்முறுவலுடன் படித்தேன். நீங்கள் என் பிறந்தநாளை நம்ப முடியாத அளவுக்கு இனிமையானதாக மாற்றியுள்ளீர்கள்.
இதனை என்றுமே என்னுடன் எடுத்துச்செல்வேன். என் பயணத்தில் என் மீது இரக்கம் கொண்டு அன்பு செலுத்தும் அத்தனை பேருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ப்ரீத்தி ஷர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களைக் கவர்ந்த ப்ரீத்தி சர்மா
திருமணம் என்னும் தொடரின்மூலம் சின்ன திரையில் ப்ரீத்தி ஷர்மா அறிமுகமானார். சித்தி -2 தொடரில் ராதிகாவுடன் நடித்து கவனம் பெற்றார். மலர் தொடரிலும் நாயகியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி சீரியல் நடிகையாக உள்ள இவருக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.