

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரில் இருந்து அந்தத் தொடரின் நாயகன் ரக்ஷித் விலகியுள்ளார்.
நடிகை ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் புதிய தொடரான பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசாக்கு ஜோடியாக ரக்ஷித் நடித்து வருகிறார்.
மேலும், இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார். தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
ஆல்யா மான்சா, பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். ரக்ஷித் பாடகராக நடிக்கிறார்.
பாரிஜாதம் தொடர் வரும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பாரிஜாதம் தொடரில் இருந்து அந்தத் தொடரின் நாயகன் ரக்ஷித் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரக்ஷித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “பாரிஜாதம் தொடரில் விஷால் என்ற பாத்திரத்தின் பயணத்திலிருந்து நான் விடைபெறுகிறேன்.
விஷால் வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல, என்னில் ஒரு பகுதி. அந்தப் பாத்திரத்தின் மூலம், என் வாழ்க்கையின் ஒரு அழகான பகுதியில் வாழ்ந்தேன். நான் நடித்த ஒவ்வொரு காட்சியும், நான் பேசிய ஒவ்வொரு வசனமும், என்னுடைய இதயத்திலிருந்து வெளிவந்தது.
என் அன்பான ரசிகர்களுக்கு - நீங்கள் விஷாலுக்குக் காட்டிய அன்பும், நீங்கள் அனுப்பிய செய்திகளும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு உண்மையாய் இருந்தன.
சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தொலைக்காட்சி மற்றும் தொடர்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.
என்னுடனான விஷாலின் பயணம் இங்கே முடிவடைந்தாலும், நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இது முடிவல்ல, புதிய தொடக்கம் மட்டுமே.
விஷால் மேடையை விட்டு செல்லலாம், ஆனால் உங்கள் மனதை விட்டு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.