பாகுபலிக்கு முன்பு ராணாவைத் தமிழ் ரசிகர்களுக்கு அத்தனை பரிச்சயமில்லை. ஆனால் இந்தப் படத்தின் ஓபனிங் சீனில் பிரேக் பிடிக்காத வண்டியில் ராணாவைக் கண்டதும் எழுந்த பலத்த விசில் சத்தத்தில் இப்போது தமிழிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களெனத் தெரிந்தது.
இத்திரைப்படத்தில் ராணாவுக்கு (ஜோகேந்தர்) வட்டிக்கு விடும் தொழில். தன் பெயரில் மனைவியின் பெயரையும் இணைத்து ராதா ஜோகேந்தர் எனச் சொல்லும் அளவுக்கு மனைவியான ராதா மீது அளவில்லாத நேசம் கொண்டவர். திருமணமாகி மூன்று வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத இத்தம்பதிக்கு ஒரு வழியாக அந்த பாக்கியம் கிடைக்கும் போது உள்ளூர் நாட்டாமை மனைவியால் நேரக்கூடிய ஒரு அராஜகத்தின் மிச்சம் தான் இத்திரைப்படத்தின் முக்கால்வாசிக் கதை. மிச்சமிருக்கும் கால்வாசித் திரைப்படத்தில் ஜோகேந்தர், ராதாவோடு காதல் செய்கிறார்.
முதலில் தன் மனைவியின் ஆசைக்காக ஊர்த்தலைவராகத் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோகேந்திரா. அரசியல் தான் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் மசிக்கரியாயிற்றே... அப்படியே ஊர்த்தலைவரில் இருந்து ஸ்டார்ட் ஆகும் பிரேக் பிடிக்காத வண்டி அப்புறம் அங்கே, இங்கே முட்டிக் கொண்டு நில்லாமல் நேஷனல் பெர்மிட் லாரி போல இலக்கை துல்லியமாகக் கண்டுபிடித்து தன் வழியில் குறுக்கிடும் அத்தனை பேருக்கும் கபால மோட்சம் அளித்து முதல்வர் பதவியை நோக்கி சடுதியில் நகர்கிறது. இடையில் தேவிகா ராணியாக காத்ரின் தெரஸா. டி.வி சேனல் அதிபரின் மகளாக வரும் காத்ரின், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை அருமையாக ஈடு செய்திருக்கிறார். ஆனால் இந்த ‘மெட்ராஸ்’ கலைச்செல்வியை டோலிவுட் ஏன் ஊறுகாய் போல் பாவிக்க வேண்டும்? பொண்ணுக்கு ஹோம்லி ரோலும் ஷூட்டாகும் பாஸ். அடுத்த முறை ட்ரை பண்ணிப் பாருங்க.
கோயில் கொடிமரத்தில் முதலில் விளக்கேற்றும் உரிமை ஊர்த்தலைவரின் மனைவிக்குத் தான் உண்டு என்று ஆணவம் கொண்டு ஒரு பெண் கதாபாத்திரம், ஜோகேந்தரின் மனைவிக்கு ஈடு செய்ய முடியாத ஒரு கொடுமையைச் செய்து விடுகிறது. அந்தக் கொடுமைக்குப் பழி தீர்ப்பதற்காகத் தான் ஜோகேந்திரா அரசியலில் இறங்குகிறார். முதலில் ஊர்த்தலைவராகும் ஜோகேந்திரா, எம்எல்ஏ வின் தகாத ஆசை மற்றும் வற்புறுத்தலை காரணம் காட்டி அவரைக் கொன்று விட்டு, தான் எம்எல்ஏ ஆகிறார்.
அப்புறமும் வண்டியில் பிரேக் இல்லாததோடு வாழ்க்கையிலும் பிரேக் போட ஆளில்லாததால் எம்எல்ஏவிலிருந்து மினிஸ்டராக, அதிலும் ஹோம் மினிஸ்டர் ஆக ஆசைப்படுகிறார். ஹே... நேற்று மதியம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர்களை எல்லாம் ஹோம் மினிஸ்டர் ஆக்க முடியாது ஜோகி வேண்டுமென்றால் கல்ச்சுரல் மினிஸ்டர் ஆக்குகிறோம் என கட்சித் தலைமை முடிவெடுக்க, ஒரு வழியாக ராதா ஜோகேந்தர் கல்ச்சுரல் மினிஸ்டர் ஆகிறார்.
ஒரு சாமானியன், தன் மனைவிக்கு நேர்ந்த அவலத்துக்குப் பழிவாங்குவதற்காக அரசியலில் இப்படி விஸ்வரூபமெடுத்தால்... அட அரசியல்வாதிகளை விடுங்கள் நம் மீடியாக்களால் சும்மா இருக்க முடியுமா? அந்த இடத்தில் தான் ஃபாரின் சிகரெட்டுடன் என்ட்ரி ஆகிறார் தேவிகா ராணியாக காத்ரின். மீடியாவின் உயர் மட்டத்துப் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று முத்திரை குத்தப்படும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது கொஞ்சம் கோராமையாகத் தான் இருக்கிறது. கல்ச்சுரல் மினிஸ்டர் ஜோகேந்திரா எப்படி அந்த உயரத்துக்குச் சென்றார் என்று ஆராய வரும் தேவிகா ராணி... படு மட்டமான ரசனையாக தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய வரும் ஆணான ஜோகேந்திராவின் மீது காதல் மீதூற கசிந்துருகி அந்தக் காதலின் பேராலேயே அவருக்கு எதிரியாகவும் ஆவதாகச் செல்கிறது கதை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஜோகேந்திரா முதலமைச்சராக ஆசைப்படுகிறார். அதற்கு டி.வி சேனல் அதிபர் மகளான தேவிகா, சோஷியல் மீடியாவின் துணை கொண்டு உதவ முன் வருகிறார். மனைவியை நேசிக்கும் ஆண் பிரஸ்டீஜை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க ரேஞ்சில் மனைவிக்காக முதல்வர் பதவி அடைய விரும்பும் ஜோகேந்திரா தன்னை மக்கள் முன் மார்க்கெட்டிங் செய்து கொள்ள தேவிகாவின் உறவை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த இடத்தில் இயக்குனரிடம் ஒரு கேள்வி கேட்டாக வேண்டும்...
‘டைரக்டர் சார்... அதெப்படி இப்படி எல்லாம் காட்சிகள் வைக்க முடிகிறது? அடடே... மெய் சிலிர்க்கச் செய்கிறது அந்தக் காட்சியமைப்பு! . தன்னை பலாத்காரம் செய்ய வரும் ஒரு ஆணை, பத்திரிக்கையாளராக உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணால் எப்படிக் காதலிக்க முடியும்? என்று புரியவில்லை.
இப்போது ராதா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிறீர்களா?
அவர் வழக்கம் போல நமது அரசியல் தலைவர்களின் மனைவிகள் என்னவெல்லாம் செய்வது வழக்கமோ... அதையே அட்சரம் பிசகாமல் செய்து கொண்டிருப்பதாகக் காட்சிகள் செல்கின்றன.
ராதா அன்னதானம் செய்கிறார். கோயில் பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் நோட்டுக்களை பிச்சை போடுகிறார், தன்னை நாடி வரும் ஏழைகளுக்கும், தானே தேடிச் செல்லும் ஏழைகளுக்கும் வகை, தொகையில்லாமல் உதவுகிறார். ஒரு பக்கம் கணவர் ஜோகேந்திரா அரசியலைக் காரணம் காட்டி செய்து கொண்டிருக்கும் அராஜகங்களுக்கு எல்லாம் மறுபக்கம் மனைவியாக ராதா படம் முழுக்கப் பரிகாரம் தேடிக் கொண்டே இருக்கிறார்.
என்பது போன்ற இத்யாதி... இத்யாதி கேள்விகளுக்கு எல்லாம் அப்பாவி ரசிக சிகாமணிகளே நீங்கள் வெள்ளித்திரையில் விடை தேடிக் கொள்ளுங்கள்.
காஸ்டியூம்ஸ்...
காஜல் அகர்வால் விதம் விதமான புடவைகளில் செம கியூட் ஹோம்லி லுக்! காத்ரின் கூட தனது ஹை புரொஃபைல் லுக்கில் அணிந்து வரும் ஆடைகள் அனைத்துமே நச் ரகம்!
ராணாவின் கேஷுவலான வேஷ்டி கட்டும் ஸ்டைல் பட்டையைக் கிளப்பினாலும் நடுவில் சில காட்சிகளில் சபாரி மாதிரியான சில உடைகளில் வருகிறார். அது வயதான தோற்றமளிக்கிறது.
காஸ்டிங்...
அந்நியோன்யமான மனைவியாக ராதா கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலிடம் அழகு கொஞ்சுகிறது. தேவிகா ராணியாக காத்ரினும் ஓக்கே.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நவ்தீப், காமெடியன் பித்ரி சதி, வார்டனாக வரும் ரெட்டி, ஊர்த்தலைவரின் மனைவியாக வரும் பெண், என அவரவர் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
வில்லன் அசுதோஷ் ராணா பயமுறுத்துவதற்குப் பதிலாக கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் மிக்ஸர் தின்று கொண்டிருப்பவர் போல அத்தனை மந்தமாக சிவனே என்று காரியமாற்றுவது அவரை காமெடி வில்லனாகக் காட்டி விட்டார்களோ இத்திரைப்படத்தில் என்றொரு யோசனையைக் கிளறுகிறார்.
ஒளிப்பதிவு...
வெங்கட் சி.திலீப்பின் கேமரா பாடல்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் மாயஜாலம் செய்திருக்கிறது.
பாடல்கள்...
பாடல்களைப் பொறுத்தவரை எதுவுமே சோடையில்லை.
பாடல் காட்சிகளில் சப்பாத்திக்கு மாவு பிசைவது, கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று நிற்க வைத்து நகைகள் அணிவிப்பது, ரொமான்ஸ் என்ற பெயரில் குளிக்கும் போது சோப் போட்டு விடுவது மாதிரியான காட்சிகள் எல்லாம் முன்பே சில திரைப்படங்களில் பார்த்த உணர்வைத் தருகின்றன. ரொமான்ஸ் காட்சிகளில் இயக்குனர்களுக்கு கொஞ்சம் கற்பனை வறட்சியாகி விட்டது போல! அதனால் தான் இப்படி எங்கிருந்தாவது உருவ வேண்டியதாகி விடுகிறது.
படத்தில் புதிதாகக் காணக் கிடைத்த ஒரே ஒரு விஷயம் குண்டடி பட்டுப் பிய்ந்து போன காதுக்குப் பதிலாக ராணா தங்கத்தில் செய்து மாட்டி இருக்கும் மேற்காது ஒன்று மட்டுமே! சத்தியமாக அது மட்டும் தான் இந்தப் படத்தில் புதுசு. மற்றதெல்லாம் புது மொந்தையில் ஊற்றிய பழங்கஞ்சி!
சண்டைக்காட்சிகள்...
படத்தில் பெரிதாக சண்டைக்காட்சிகள் என்று ஒன்றும் மனதில் பதியவில்லை. பாலத்தின் மீது குண்டு வெடித்து மனைவி காயங்களுடன் மூர்ச்சையாகிக் கிடக்க கீழே விழத் தயாராக ஊசலாடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து தன் மனைவியைக் காப்பாற்ற ஜோகேந்திரா முயற்சிக்கையில் வரும் சண்டைக்காட்சி ஓரளவுக்கு மனதில் நிற்கிறது. பாகுபலியில் காட்டெருமை, இதில் காரா?! என்ற உணர்வெழுந்தாலும் திரையில் காட்சி அருமையாகத் திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது.
கிளைமாக்ஸ்...
யூகிக்கக் கூடிய கிளைமாக்ஸ் தான் என்றாலும், இப்படி ஒரு திரைப்படத்துக்கு அதைத் தாண்டி வேறு எந்த விதமான கிளைமாக்ஸையுமே திட்டமிட முடியாது என்பதால் படம் சுபம்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் தமிழ், தெலுங்கில் வெற்றி நடை போட்ட சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஜெயம்’ படத்தை இயக்கிய தேஜா. வழக்கமான தனது கொஞ்சம் காதல், கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காமெடி காக்டெயிலில் இம்முறையும் தெலுங்கைப் பொறுத்தவரை படத்துக்கு மாஸ் வெற்றியே! தமிழ் ரசிகர்கள் சில லாஜிக் ஓட்டைகளை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். படம் மலையாளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. சேட்டன்கள் இப்படத்திற்கு என்ன ரிசல்ட் தருவார்கள் எனப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். இந்தியிலும் கூட படம் டப் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்தியில் ராணாவுக்கு செல்வாக்கு உண்டு என்கின்றன பாலிவுட் பட்ஷிகள்.
படத்தின் ‘பஞ்ச்’ டயலாக்குகள்...
அது போக படத்தின் பஞ்ச் டயலாக்குகள் குறித்தும் பேசியாக வேண்டும். முழுப்படமுமே பஞ்ச் டயலாக்குகளை நம்பித்தான் எடுக்கப் பட்டிருக்கிறதோ! என்ற வகையில் மரண மாஸாக நெஞ்சில் இல்லை... இல்லை ஸ்ட்ரெயிட்டாக பின்மூளைக்குள் குத்தி ஆங்கர் போட்டு நிற்கின்றன சூப்பர்... டூப்பர் ‘பஞ்ச்’ கள்.
என்பது மாதிரியான ‘பஞ்ச்’கள் எல்லாம் தமிழில் கேட்கையில் கொஞ்சம் சுவாரஸ்யமற்றுத் தோன்றினாலும் தெலுங்கில் கேட்கையில் மேலே சொன்ன எபெக்ட் இருந்தது நிஜம்!
கிளைமாக்ஸில் இயக்குனர் தேஜாவும், ராணாவும் உறுதிப்படுத்த விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைத் தான்... தங்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களை மதிக்காத, மக்களுக்கு அநீதி இழைக்கத் தயங்காத அரசியல்வாதிகளை எல்லாம் மொத்தமாகக் குண்டு வைத்து கூண்டோடு அழித்துவிடுவதே நல்ல அரசியல் முகிழ்ப்பதற்கான ஒரே வழி என்கிறார்கள்.
ஐயோடா... இதெல்லாம் சாத்தியமா? அதைச் சொன்ன தைரியத்துக்காக இருவரையும் பாராட்டலாம். ஆந்திர அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளவில்லையா? அல்லது ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டார்களா எனத் தெரியவில்லை.
பாடல்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள், காரைக்குடி, நகரத்தார் தெருக்களையும் வீடுகளையும் லட்டு போல கேமிராவில் அள்ளித் தந்த ஒளிப்பதிவுக்காகவும், ராணா, காஜல், காத்ரினின் இயல்பான நடிப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்