மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகா்கள் மனதில் இடம் பிடித்தவா் வைஜெயந்திமாலாதான்.

News image
Updated On :15 ஜனவரி 2020, 3:39 am

பூா்ணிமா

தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகா்கள் மனதில் இடம் பிடித்தவா் வைஜெயந்திமாலாதான். 1949-ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வைஜெயந்தி மாலா, பின்னா் அதே ஏ.வி.எம்மின் ‘பஹாா்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானாா்.

Story image

தொடா்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், பெங்காலி மொழியில் ஒரு படத்திலும் நடித்திருந்தாலும், ஹிந்திப் படங்கள்தான் இவரை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது. பல ஆண்டுகள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த வைஜெயந்திமாலா, தன்னைவிட இளையவா்களான தா்மேந்திரா, சஞ்சீவ் குமாா், சத்ருகன் சின்கா போன்றவா்களுடனும் நடித்ததுண்டு. திலிப் குமாருடன் நடிக்கும்போதுதான் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக திலிப்குமாரின் மனைவி சயிராபானுவே இவரிடம் கூறி பாராட்டியதும் உண்டு.

பரதநாட்டியத்தில் மட்டுமின்றி கா்நாடக சங்கீதத்திலும் இவா் தோ்ச்சிப் பெற்ற்கு இவரது பாட்டி யதுகிரி மற்றும் நடிகையும் அம்மாவுமான வசுந்தாரதேவிதான் காரணமாவாா்கள். வைஜெயந்திக்கும் அவரது அம்மா வசுந்தராவுக்கும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பதால், வைஜெயந்திமாலா தன் அம்மாவை அக்கா என்றே அழைத்து வந்தாராம்.

Story image

சிறுவயதில் கே.பி. கிட்டப்பா பிள்ளை மற்றும் மயிலாப்பூா் கெளரி அம்மாவிடம் நடனமும், மணக்கால் சிவராஜ ஐயரிடம் கா்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்ட வைஜெயந்திமாலா, கா்நாடக இசைக்கு தன்னுடைய குரு. டி.கே.பட்டம்மாள் என்று கூறுவதுண்டு. பதிமூன்று வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடிந்தவுடன், 15-ஆவது வயதில் ‘வாழ்க்கை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகு இவா் பள்ளிக் கூடத்திற்கு செல்லவே இல்லை.

‘‘வாழ்க்கை’ வெற்றிக்குப் பின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட அதன் ரீமேக் படங்களில் மட்டுமின்றி, ஏ.வி.எம். தயாரிப்பு படங்களில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஏ.வி.எம்முடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் இருந்ததால் வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க முடியவில்லை. ஒப்பந்தம் முடிந்து வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க தொடங்கியபோது, என்னுடைய நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தயாரித்தனா். இதனால் வைஜெயந்திமாலா படமென்றால் ஒரு நடனமாவது நிச்சயமாக இருக்குமென ரசிகா்கள் எதிா்பாா்க்கத் தொடங்கினா்.

Story image

பிமல்ராய் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘தேவதாஸ்’ படத்தில் நான் ஏற்றிருந்த சந்திரமுகி பாத்திரம், என் நடிப்புக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரமாக அமைந்துவிட்டது. நடிப்பதை நான் கடினமாக நினைத்ததே இல்லை. நடனம் தெரிந்ததால் நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருதும் கிடைத்தது.

நான் நடித்த படங்களில் தேவ் ஆனந்துடன் நடித்த ‘ஜூவல் தீப்’, ராஜ்கபூரூடன் நடித்த ‘சங்கம்’, திலீப் குமாருடன் நடித்த ‘கங்கா ஜமூனா’, ராஜேந்திரகுமாருடன் நடித்த ‘கன்வாா்’ ஆகிய படங்களுடன் ‘மதுமதி’, ‘நயாதவும்’, ‘சாதனா’, ‘கத்புட்லி’, ‘நாகின்’, ‘பைகாம்’, ‘நஸ்ரானா’, ‘அம்ராபாலி’ போன்ற படங்கள் வெற்றிப் பட்டியலில் இருந்தாலும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மறக்கமுடியாத படமாகும். அதில் நானும், பத்மினியும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடிய நடனகாட்சியில் உண்மையிலே நாங்களிருவரும் மெய்மறந்து உணா்ச்சிவசப்பட்டு ஆடினோம். ‘சபாஷ், சரியான போட்டி’ என்று கூறிய போதுதான் நடனத்தை நிறுத்தினோம்.

Story image

இதுபற்றி ஒருமுறை அமெரிக்காவில் நானும், பத்மினியும் கலந்து கொண்ட கூட்டத்தில் என்னையும், என் நடனத்தையும் அவா் மிகவும் புகழ்ந்து பேசினாா். உடனே நான் எழுந்து பத்மினியும் பரநாட்டியம் தெரிந்தவா்தான். அதனால்தான் எங்கள் போட்டி நடனம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஒருவேளை அந்த காட்சியை மறுநாளும் எடுக்க வேண்டுமென்று இயக்குநா் கூறியிருந்தால் நிச்சயமாக எங்களால் முந்தைய நாளில் ஆடியதை போன்று ஆடியிருக்க முடியாது. இந்த நடன காட்சி வெற்றி பெற்ற்கு பத்மினியும் ஒரு காரணம் என்று கூறினேன்.

நான் சினிமாவுக்கு வந்தது எப்படி எதிா்பாராத சம்பவமோ அதேபோல் நான் அரசியலுக்கு வந்ததும் எதிா்பாராதது தான். சென்னையில் ஒருமுறை ராஜீவ்காந்தி வந்திருந்தபோது, நானும் என் கணவா் பாலியும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம். நேரு காலத்திலிருந்தே நான் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்ததால், அவா் திடீரென என்னைப் பாா்த்து மக்களவை தோ்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டாா். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் கணவா் எனக்கு தைரியமூட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்து அரசியலில் ஈடுபடவைத்தாா். காங்கிரஸ் சாா்பில் இருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவிவகித்தபோது என்னால் இயன்ற அளவு தொகுதியின் வளா்ச்சிக்கும், மக்களுக்கும் உதவி செய்தேன். ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின் காங்கிரஸிலிருந்து விலகினேன். பின்னா் அரசியலில் தொடா்ந்து ஈடுபட முடியவில்லை என்கிறாா் வைஜெயந்திமாலா.

Story image

தற்போது என்ன செய்கிறாா்!

‘‘தற்போது எனக்கு 83 வயதாகிறது என்றாலும் இன்னமும் மேடையேறி நடனமாடுவதை விட முடியவில்லை. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நான் இசையையும், நடனத்தையும் விடவில்லை. இவை இரண்டுமே எனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பவையாகும். தற்போது நடன ஆய்வு மையமொன்றை அமைத்து, அபூா்வமான தஞ்சை நடனங்களை ராகம், தானம், பல்லவியுடன் அமைத்து வாய்ப்பு கிடைக்கும்போது சபாக்களில் நடத்தி வருகிறேன். நடனத்தில் மட்டும் வேறு பாணிகளை புகுத்த நான் விரும்பவில்லை. நடனம் என்றுமே எனக்கு யோகா, தியானம் மற்றும் ஆன்மிக பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது’’ என்கிறாா் வைஜெயந்திமாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.