

நான் தினமணி கதிரில் ஓவியராகச் சேரும்போது ஆர்.ஏ.பத்மநாபன் தினமணி கதிரின் ஆசிரியர். தினமணி ஆசிரியர் ஏ.என்.எஸ். அவர்களை சுலபமாக சந்திக்க இயலாது. லிப்டில் சந்தித்தால் உண்டு. ஒரு நாள் நானும் தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனும் லிப்டில் போக வேண்டிவந்தது. அப்போது நான் அரும்பு மீசை வைத்திருப்பேன். அதைப் பார்த்த ஆசிரியர் சிவராமன் "சிலருக்குத்தான் மீசை நன்றாக இருக்கும். சிலருக்கு இருக்காது' என்றார்.
அவர் என்னைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மீசையை எடுத்துவிட்டேன். அதிலிருந்து இன்றுவரை மீசை வைக்கவில்லை. ஏ.என்.சிவராமனுக்கு பிறகு ஐராவதம் மகாதேவன் தினமணிக்கு ஆசிரியராக வந்தார். வந்தவுடன் தினமணியின் தலைப்பு மற்றும் எம்பளத்தை மாற்றும்படி என்னிடம் கூறினார். நான் தினமணி எம்பளத்தை மாற்றி எழுதினேன். அதைப் பாராட்டி ஒரு கடிதம் கொடுத்தார். அது மறக்க முடியாதது. தினமணி கதிருக்கு சாவி, கே..ஆர்.வாசுதேவன், நா. பார்த்தசாரதி ஆகியோரும் பொறுப்பாசிரியராக இருந்தனர். கஸ்தூரி ரங்கன் பொறுப்பாசிரியராக இருந்தபோதுதான் நான் படக்கதைகள் எழுதத் தொடங்கினேன். நகைச்சுவை சிறப்பிதழ் தயாரானபோது கஸ்தூரி ரங்கன் என்னிடம், நீங்களே நல்ல நகைச்சுவையாளர். எனவே, இச்சிறப்பிதழை நீங்களே தயார் செய்யுங்கள் என்றார். தினமணி கதிரில் எனது நீண்ட பயணத்தை மறக்க முடியாது.
- என். வைத்தியலிங்கம் (ஓவியர் தாமரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.