
கஸ்தூரிரங்கன் "தினமணி கதிர்' ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற "வானம் வசப்படும்' என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.
1988-இல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றபோது, "தினமணி'யில் மாதம் இருமுறை இரண்டு ஆண்டுகள் தவறாமல் கட்டுரைகள் எழுதியது அவர் தந்த ஊக்கத்தினால்தான். என்னுடைய ஐந்தாண்டு போலந்து அனுபவத்தைப் பயணக் கட்டுரைகளாக எழுத நினைத்தபோது, அதை நாவலாக எழுத யோசனை சொன்னவரும் அவர்தாம். அது "ஏசுவின் தோழர்கள்' என்ற தலைப்பில், கதிரில் வந்தபோது அவருடைய யோசனையின் அருமை எனக்குப் புலப்பட்டது.
மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர், எழுத்துச் சாதனையாளர் சுஜாதாவைக் கண்டெடுத்தவர் (இருவரும் பள்ளி நண்பர்கள்). ஆக பன்முகங்களை உடைய நண்பர் கி.கஸ்தூரிரங்கன், இறுதி மூச்சு இருந்த வரை பழுத்த காந்தியவாதியாகவும், ஆன்மிக நாட்டமுடையவராகவும் இருந்து வாழ்ந்ததுதான் மாபெரும் சாதனை.
"சொல் குறுக நிமிர் கீர்த்தி' என்பான் கம்பன். இது கஸ்தூரிரங்கனுக்கு மிகவும் பொருந்தும்.
(கஸ்தூரிரங்கன் மறைந்தபோது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தினமணியில் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.