பிரேமதாசாவின் பேச்சுத் தொடர்பாக வே.பிரபாகரனைச் சந்திப்பது என்பது 1987-ஆம் ஆண்டு அமைதிப் படையுடனான போர் ஏற்பட்ட பிறகு ஏற்பட்ட நிலைகளை நேரில் அறிவதே பாலசிங்கம் தம்பதியின் முக்கிய நோக்கமாக இருந்தது. வன்னிப் பகுதி அமைதிப் படையின் முக்கிய இலக்காகும். இந்தக் காட்டுக்குள் இருந்துதான் பிரபாகரன் தனது ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். எனவே காட்டுக்குள் இருந்து பிரபாகரனை வெளியே இழுக்கும் நோக்கத்துடன் வான் வழியாக டன் கணக்கில் வெடிமருந்துகள் வீசப்பட்ட பகுதி இது.
சிறப்பு அதிரடிப் படை, காடுகளில் புகுந்து தாக்கும் இன்னொரு சிறப்பு அதிரடிப் படை என காட்டினுள் புகுந்து அமைதிப் படை, தாக்குதலை நடத்தியது. அவர்கள் களைத்துப் போகவும், வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தொடர் தாக்குதல் -இவ்வாறாக கிழக்குக் கரையான முல்லைத் தீவிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலும், வடகிழக்கில் கிளிநொச்சி வரையிலும் ஆயிரமாயிரம் துருப்புகள் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு மற்றும் தேடல் முயற்சிகள் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்ட பகுதியாகும் இது.
பிரபாகரனைப் பிடிக்கும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமைதிப் படை தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த முறை ஹெலிகாப்டர் முல்லைத் தீவில் உள்ள அலம்பில் காடுகளில் தரையிறங்கியது. இதன் அருகேதான் பிரபாகரன் தங்கியிருந்த 1:4 என்கிற குறியிடப்பட்ட தலைமைப் பாசறை இருந்தது. (சுதந்திர வேட்கை, பக். 302).
அமைதிப் படையின் உளவுப் பிரிவு இந்தப் பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததால் எந்தவகைத் தாக்குதலுக்கும் எதிர்கொள்கிற நிலையில் புலிகள் அங்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பேச்சுவார்த்தைக் குழுவினரை மகளிர் பிரிவு தளபதி சோதியா தனது குழுவினருடன் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
இந்தப் பயணம் குறித்து அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகையில் இந்தப் பாதை அவ்வளவு சுலபமாக இல்லையென்றும், தடமில்லா காட்டுப் பகுதி சிற்றாறுகள், முட்செடிகள் நிறைந்திருந்த பகுதி என்றும் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி நீரிழிவு நோய் காரணமாக பாலசிங்கத்தால் அதிக தூரம் நடக்க முடியவில்லை என்றும், எனவே இரு கழிகளின் இடையே தொட்டில் போல கட்டி, அதில் அவரை அமர வைத்துப் போராளிகள் தோளிலே தூக்கிச் சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலசிங்கம் குழுவினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அப்போதைய மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கருக்கு வழங்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால், கவனமாக அவர்கள் நடந்து செல்லவும் பணிக்கப்பட்டிருந்தது.
வழியெங்கும் குண்டுவீச்சுக்கு ஆளான மரங்கள் முறிந்தும், நீர்நிலைகள் கலங்கியும் காட்சியளித்த சூழ்நிலையில், திடீரென விடுதலைப் புலிகள் சீருடையில் காணப்பட்டனர். அருகில்தான் பாசறை என்பது புலப்பட்டது. ஆனால் பாசறை அடையாளமே தெரியவில்லை. ஓரிடத்தில் அவர்கள் நின்றபோது அந்த இடத்தில் எதிரிகள் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருமறைக்கப்பட்ட வடிவில், பிரபாகரனின் பாசறை அமைந்திருந்தது. சுற்றிலும் புதிய போராளிகளுக்குப் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பகுதியில் பெண் போராளிகளுக்கு உயர் பயிற்சியும் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தி அந்தப் பயிற்சியை அளித்தார்.
பாசறையில் கிட்டுவும் இருந்தார். யாழ்ப்பாணத் தடுப்புக் காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டபின் நேரடியாக இங்கு வந்து சேர்ந்து கொண்டதாக அடேல் குறித்துள்ளார். பொட்டு அம்மானும் அப்போது அங்கேதான் இருந்தார். தமது காயங்கள் முற்றாக குணம் அடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அவர் தளபதியாக இருந்து கொரில்லாப் போரை அமைதிப்படைக்கு எதிராக நடத்தி வந்தார். இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவரும் அழைக்கப்பட்டிருந்தார். கபில் அம்மான் என்கிற மூத்த போராளியும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
கொழும்பில் இதுவரை நடந்த சந்திப்புகளின் விளைவாக உருவான கருத்துகள் குறித்து பாலசிங்கம், பிரபாகரனுக்கு விளக்கினார். இதன் சாதக, பாதகமான அம்சங்களுடன் சேர்த்தே, எதிர்கால நன்மை கருதி பாலசிங்கம் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.
அமைதிப் படையை வெளியேற்றுவது குறித்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடைய மேடைப் பேச்சில் வெடித்தது மோதல். பிரேமதாசா, கொழும்பு நகரில் நடைபெற்ற பெüத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அமைதிப் படை ஜூலை இறுதிக்குள் இலங்கையை விட்டு வெளியேறுமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்க இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் இலங்கையில் சார்க் மாநாட்டை நடத்த இருப்பதால், அப்படி மாநாடு நடைபெறும்போது, இந்த நாட்டில் அந்நிய ராணுவம் இருப்பது எந்த வகையிலும் உயர்ந்ததாக இருக்க முடியது என்றும் பேசினார்.
இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தது இந்தியா, இந்தப் பேச்சை வலியுறுத்தி, ஜூன் 2 ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்திக்கு, பிரேமதாசா ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ராஜீவ் காந்திக்கு கோபத்தை வரவழைத்தாலும், அவர் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவு மற்றும் படைக்கலன்களை இரண்டு மாதத்தில் திரும்பெறுவது இயலாத ஒன்று' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதேநேரம் பிரதமர் ராஜீவ் காந்தி, பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "ஈபிஆர்எல்எஃப் அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் வரை அமைதிப் படையின் பணி முடிவுற்றதாக ஆகாது' என்றார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "படைகள் திரும்பப் பெறுவது குறித்து இரு அரசுகளும் கலந்து பேச வேண்டியதும் இருக்கும்' எனவும் தெரிவித்தார். (ஜூன் 14, 1989)
இந்த நிலையில்தான், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இரண்டாம் கட்ட பேச்சு ஜூன் 16 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தைக்கென பாலசிங்கம் உளளிட்டோர் மீண்டும் கொழும்பு வந்தனர். இம்முறை, இவர்களுடன் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் லாரன்ஸ் திலகர், எஸ். கரிகாலன், சமன் ஹசன், அபூபக்கர் இப்ரகீம் ஆகியோர்ஆவர். அதேபோன்று அரசுத் தரப்பிலும் மேலும் இரு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
முதல் கட்ட பேச்சில், பேச்சு நடத்துபவராக இருந்த அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது, இலங்கையிலிருந்து அமைதிப் படை வெளியே அனுப்புவதில் அதிபர் உறுதியாக இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் என்ன நோக்கத்திற்காகப் போடப்பட்டதோ அது நிறைவேறவில்லை என்றும், வடக்கிலும் தெற்கிலும் அமைதியற்ற சூழல் நிலவுவதாகவும், காலாவதியாகிவிட்ட ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் அமைதிப் படையும் வெளியேறத்தான் வேண்டும் என்று அதிபர் கருதுவதாகவும் அவர் தனது முன்னுரையில் வெளிப்படுத்தினார். வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கென ஒரு படையமைக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிபர் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இவையெல்லாவற்றையும் விட இந்திய அமைதிப் படை யாருடன் மோதுகிறதோ அவ்வமைப்பும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதிப் படை தேவையா என்பது குறித்து அதிபர் வினா எழுப்புகிறார் என்றும் தெரிவித்தார்.
ஹமீது மேலும் பேசுகையில், இந்தியாவின் நிலைமைகள் குறித்து, முந்தின கூட்டத்தில் கலந்துகொண்டபோது பேசியது போலன்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். இவை யாவும் விமரிசனங்களாகும்.
பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தமிழ் தேசிய ராணுவம் குறித்து இந்தியாவிடம் பேசும்போது குறிப்பிட வேண்டிய அம்சம் என எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
பேச்சின் இறுதியில், போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள், அரசு இரண்டும் சேர்ந்தே அதாவது கூட்டாக அறிவிப்பது என முடிவெடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


