புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 105: ஒப்பந்தம் மீது சந்தேகம்!

ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கையளிப்பில் விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ப்ளாட், டெலோ இயக்கங்களும் பங்குபெற்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:35 pm

ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கையளிப்பில் விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ப்ளாட், டெலோ இயக்கங்களும் பங்குபெற்றன. (முறிந்த பனை பக்-164) இந்த நிகழ்ச்சிகள் ஒரு விழாவினைப்போன்று ஏற்பாடு செய்யப்பட்டு, விரிவான அளவில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்கப்பட்டன. இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளின் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த விளம்பரம் தேவையாக இருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் சில வாகனங்கள் நிறைய ஆயுதங்களைக் கொண்டுவந்து பலாலியில் இறக்கியது. அதில் சிலிண்டர் வடிவ ஆயுதங்களும் இருந்தன. தீபிந்தர்சிங், இந்த சிலிண்டர் வடிவில் இருப்பது என்னவென்று வினவியபோது குண்டுவீசப் பயன்படும் 175எம்.எம். மோர்ட்டார் என்று தெரிவித்தனர். இவை உள்ளூர் தயாரிப்பு என்றதும் அவர் வியந்தார்.

ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகளில் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகக்குறைவு என்று ஜெயவர்த்தனா அபிப்பிராயப்பட, கைதிகள் விடுதலையிலும் சுணக்கம் தென்ப்பட்டது.

அதேபோன்று, மக்களும் போராளிகளும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவே அமைதிப்படை என்று முதலில் நினைத்தனர். ஆனால், நாளடைவில் கனரக ஆயுதங்களும் பீரங்கிகளும் வந்து இறங்கவும், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அமைதியை நிலைநாட்ட வந்த படைக்கு, இந்த கனரக ஆயுதங்கள் எதற்கு என்பது புரியாத புதிராக இருந்தது.

முதலில் மக்களது கோரிக்கைகளை கவனிப்பது போன்று செயல்பட்ட அமைதிப்படையின் போக்கு நாளடைவில் மாறத் தொடங்கியது. அப்படைக்கு, இந்திய-இலங்கை நலன்களே "குறி' என்பதும் வெளிப்டையானது.

இது குறித்து புஷ்பராஜா தனது நூலில், "இந்திய ராணுவம் இலங்கையில் தன்னைச் சமாதானப்படையாக எண்ணாமல் ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் இருக்கும் ராணுவம் போல வலம் வரத்தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகளின் கற்பனையும் இந்திய ராஜதந்திரிகளின் தவறான கணிப்பீடும் காரணங்கள் எனச் சொல்லலாம்... நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள் என்ற வாத்தியார்த்தனம் இந்தியாவிடம் இருந்தது. முக்கியமாக இந்திய உளவுப்பிரிவான "ரா' இலங்கைப் பிரச்னையில் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், ராஜதந்திரிகளையும் தவறான கணிப்பீடு கொள்ளவைத்தது' என்று குறிப்பிடுகிறார்.

அதுவே நாளடைவில் அமைதிப்படையின் செயல்பாடுகளிலும் காணப்பட்டது. ஆயுதங்களைப் பறித்தெடுப்பதில் காட்டப்பட்ட அக்கறை, இடைக்கால அரசு அமைப்பதில் காட்டப்படவில்லை. ஆயுதங்களைக் கையளிக்க 5 நாள்கள் அவகாசமும், இறுதி முடிவு எடுக்கப்படாத விஷயங்களை இந்தியாவும்-இலங்கையும் பேசி முடிவெடுக்க ஆறுவாரம் கெடுவும் அளிக்கப்பட்டது -ஒரு விநோதமான செயல்பாடு ஆகும். இந்தக் குறிப்புப்படி எந்தவிதமானப் பேச்சும் இரு அரசுகளுக்கிடையே நடைபெறவில்லை.

மாறாக 13-வது திருத்தமாக ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேறியது. இந்தச் செயலை அப்போதைய வெளியுறவுச் செயலாளரான ஏ.பி.வெங்கடேஸ்வரன், "அதிகாரப் பகிர்வு செய்யாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய செயல்' (இந்து நாளிதழ்-13 ஆகஸ்டு 1987) என்று விமர்சித்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் 1.14-இன் ஷரத்துப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்கள் என்று குறிப்பிட்ட நிலையில், தமிழர் தாயகம் என்பதை மறுப்பதும் விநோதமான ஒன்றே.

ஜூலை 26 1987-இல் யு.என்.பி.யின் பொதுக்குழுக் கூட்டத்தில் "இணைப்பு என்பதும், வாக்கெடுப்பு என்பதும் நாடகம்தான் என்றும், தமிழர்களின் குழுக்களே இதனை முறியடித்துவிடுவர்' என்றும் ஜெயவர்த்தனா பேசியதின் மூலம் இந்த ஏமாற்று நாடகம் அம்பலத்துக்கு வந்தது. அதுமட்டுமல்ல, ""இவ்வொப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்னவென்றால், பயங்கரவாத இயக்கத்துக்கு அது ஒரு முடிவைக் காணும்'' என்றும் ஜெயவர்த்தனா குறிப்பிட்டாரே தவிர, இடைக்கால அரசு பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இதுபற்றியும் இந்தியா எந்தக் கருத்தும் சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என்பது, அந்தப் பகுதி தமிழரின் தாயகம் என்பதைத் தவிர்ப்பதற்காகவும், தமிழர்கள் ஒன்றுபட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் சொல்லப்பட்ட சதி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  சுதந்திரத்துக்கு முன்பே தரிசு நிலம் மற்றும் உவர்நில மேம்பாட்டுத் திட்டத்தின்பேரில் நிலத்தைக் கையகப்படுத்தி அவை பிரித்தளிக்கப்பட்டது. அதில் தமிழர்களைவிடவும், சிங்களவர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டார்கள் என்பதும், நாளடைவில் கிழக்குப் பகுதியின் நெற்களஞ்சியப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை வன்முறை மூலமும், அரசு திட்டங்கள் மூலமும் வெளியேற்றி, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்கள் என்பதும் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தக் குடியேற்றங்களை முதன்முதலில் சுதந்திர இலங்கையில் ஆரம்பித்துவைத்தவர் சேனநாயக்கா. அவர், அப்போது தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதினார். முதலாம் பராக்கிரமபாகு தமிழர்களை வீழ்த்தி, சிங்கள ராஜ்ஜியத்தை உருவாக்கி, அங்கே பெüத்தத்தை விதைத்தவன் ஆவான்.

சேனநாயக்காவும் வெள்ளைச் சால்வை அணிந்து, பெüத்த சின்னங்கள் முன்பு தரையில் விழுந்து வணங்கியதோடு, அச்சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்துசென்று சிங்கள-பெüத்த மேலாண்மைக்கு வித்திட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் அவர் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்.

இதன் காரணமாக, கோல்புரூக் காலத்தில் (1833) மூன்று சிங்கள மாகாணங்கள் என்றிருந்த நிலையில், ஏழு மாகாணங்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பிரதேசமாக இரு மாகாணங்களாக, கரையோரமுள்ள பகுதிகளாக மட்டுமே அமைந்தன. ஒட்டுமொத்த இலங்கையில் அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் சிங்கள மாகாணங்கள் போக, மீதமுள்ள இரண்டு தமிழ் மாகாணங்களையும் சிதைக்கும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றம் அவ்வப்போது நடைபெற்றது.

தமிழ் மாகாணங்களில் விவசாய-குடிநீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அங்கே அதிக அளவில் சிங்களவரைக் குடியேற்றினார்கள். விவசாய நிலப்பகுதி தவிர்த்து வடக்கில் அமைந்துள்ள காட்டுப்பகுதியும், கிழக்கில் உள்ள வேடர் பிரதேசங்களையும் குடியேற்றம் விட்டுவைக்கவில்லை.

1950-களில் அல்லை, காந்தளாய் மற்றும் கல் ஓயா குடியேற்றங்களில் இன விகிதாச்சாரம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. திருகோணமலையில் யான் ஓயா, மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுரு ஓயா, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலி ஓயா ஆகியவற்றிலும் இதே பாகுபாடுதான். சிங்களவர்களுக்கு மட்டும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் இயற்கை அதிகரிப்பு கணக்கிடப்பட்டு ஒரு குடும்பத்துக்கு மூன்று நான்கு என காணித்துண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவ்வாறு உருவாக்கப்படும் குடியேற்றத் திட்டங்களில் அந்த ஊரின் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. (உ-ம்) நொச்சிகுளம்-நொச்சியாகம, அம்பாறை-திகாமடுல்ல, அம்பலாங்கொடை-அம்பலாங்கொடம்ல, மணல் ஆறுத்திட்டம்-வெளி ஓயா, கோமரங்கடவை-கோமரங்கடவல, முதலிகுளம்-மொரவெவ.

கெண்ட் பண்ணை-டாலர் பண்ணை முதலியவற்றில் தமிழர்களே பெரும்பான்மை. அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திவிட்டார்கள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணம் முன்பு திருகோணமலை, மட்டக்களப்பு என இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அதிரடியாக மட்டக்களப்பில் சிங்களவரை அதிக அளவில் குடியேற்றி அம்மாவட்டத்தைப் பிரித்து, அம்பாறை மாவட்டம் எனப் புதிதாக, உருவாக்கி சிங்களப் பெயராகவும் அறிவித்துவிட்டார்கள்.

இவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பாக நடந்த குடியேற்றங்களில் பத்து சதவிகிதக் குறிப்புகள் மட்டுமே. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 2.4 ஷரத்துப்படி, வன்முறையால் வெளியேறிய அல்லது வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என்பதாகும்.

ஆனால் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை அங்கே குடியமர்த்த முயற்சி எடுக்காது, சிங்களவர்களைக் குடியமர்த்துவதில் அரசு தீவிரம் காட்டியது. அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமைதான். குடியேற்ற விஷயத்தில் அரசு திட்டமிட்டுத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. இதனால் தமிழர்கள் மத்தியில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது சந்தேகம் எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.