புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 106: கேள்விக்குறியான புலிகளின் பாதுகாப்பு!

ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் சட்டம் ஒழுங்கு இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் விடப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் குறிப்பிட்டுள்ள நிலையில், கிழக்கில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:37 pm

ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் சட்டம் ஒழுங்கு இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் விடப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் குறிப்பிட்டுள்ள நிலையில், கிழக்கில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரயில்வே பாதையை ஆய்வு செய்ய ஒரு குழு வந்தது. சிலிப்பர் கட்டைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய சிலிப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டன. குறிப்பிட்ட தூரம் ரயில் ஓட்டியும் காட்டப்பட்டது.

அதேபோன்று வான்சேவை துவங்கிற்று. சென்னையிலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் விமானப் போக்குவரத்தை நடத்த இந்திய அமைதிப்படை நிர்வாகம், ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் வசித்த யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைவாழ் தமிழர்கள் தங்களது இல்லம் திரும்பவே இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம், ஆயுதங்களைக் கையளித்த நிலையில், அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்திருந்தது. தங்களது போராளிக் குழுவினருக்கு கவிஞர் காசி ஆனந்தன் அரசியல் வகுப்பு நடத்தப் பணிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழமுரசு, உதயன் பத்திரிகைகளில் காரசாரமான மரபு சார்ந்த விமர்சனங்கள் இடம்பெற்றன. அப்பத்திரிகைகளின் விமர்சன இலக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயல்பாடுகள் குறித்தே அதிக அளவில் இடம்பெற்றன.

வன்னிப் பகுதிகளில் "த்ரீ ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட ஈஎன்டிஎல்எஃப், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ இயக்கத் தவர்கள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தூண்டப்பட்டார்கள். அத்தகையவர்களுள் பிரபலமானவர்கள் பிளாட் இயக்க உறுப்பினரான சங்கிலி(கந்தசாமி)யும், ஈஎன்டிஎல்எஃப் ராஜனும் ஆவார்கள்... (ஆதாரம்: முறிந்தபனை : பக் 168)

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதம் கையளித்த சூழ்நிலையில், மற்ற இயக்கங்களும் ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்துவிட்டதாகச் சொன்ன நிலையில், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களிடையே தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் பிரபாகரன், லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கை 15-8-1987அன்று சந்தித்தபோது, சில புகார்களைத் தெரிவித்தார். அதுகுறித்து தனது நூலில் தீபிந்தர் சிங் குறிப்பிடுவதாவது:

""எங்களை ஆயுதங்களைக் கையளிக்கச் சொல்லிவிட்டு, அது நடந்த பின்னர், "ரா' அமைப்பு, பிற ஆயுதக்குழுக்களான டெலோ, ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈஎன்டிஎல்எஃப் இணைந்த "த்ரீ ஸ்டார்' என்கிற அமைப்பை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு மோதல்களை நடத்தி வருகிறது'' என்று தெரிவித்தார். இந்தப் புகார்கள் கடுமையானவை. இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தினேன்.

அங்கிருந்து வந்த தகவல்கள் புகாரை உறுதிப்படுத்துவதாக இல்லை. எனவே, பிரபாகரனிடம் இந்தப் புகார் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தபோது, அவரோ புகாரில் உறுதியாக இருந்தார். பிற இயக்கங்களிடையே "ரா' அமைப்புக்கு உறுதியான தொடர்புகள் இருக்கின்றன என்றார். மேலும் தகவல்கள் கிடைக்கும்வரை காத்திருக்கும் நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள போராளிகளைக் காவல் பணியில் ஈடுபடுத்தலாமா என்று யோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் அந்த சமயத்தில் யாழ்ப் பகுதிகளில் காவல் நிலையங்கள் மூடப்பட்டு அந்தப் பணி உள்ளிட்ட சிவில் நிர்வாகத்தை விடுதலைப் புலிகளே செய்து வந்தனர். தற்சமயம் இந்தப் பணியையும் அமைதிப்படையே செய்யவேண்டும் என்றபோது, உள்ளூர்வாசிகளை அதில் ஈடுபடுத்துவது சரியானதாக இருக்க முடியும் என்பதையும்விட, விடுதலைப் புலிகளுக்கு மாற்று வேலை வழங்கினதாகவும் ஆகும் என்று தீபிந்தர்சிங் நினைத்தார். ஆனால், ராணுவத் தலைமை அவரது முதல் பணி ஆயுதங்களைப் பறிப்பதுதான் என்று நாகரிகமாக மறுத்துவிட்டது.

பிற போராளி அமைப்புகளுக்கு "ரா' அமைப்பு திரும்பவும் ஆயுதங்கள் அளித்ததை தீபிந்தர்சிங் நிராகரித்த நிலையில், இதற்கான ஆதாரத்தை மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் விடுதலைப் புலிகள் அளித்ததாக அப்போது செய்திகள் வெளியாயின.

இந்தச் சம்பவம் குறித்து ஹர்கிரத் சிங் தான் எழுதிய நூலில், ""விடுதலைப் புலிகள் ஆயுதக்கையளிப்பை ஆகஸ்டு 21-ம் தேதி முடித்தார்கள். இந்த நேரத்தில் பிரதமர் அலுவலக உத்தரவின் பேரில், "ரா' அமைப்பு பிற போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் வழங்குகிறது என்கிற புகாரையடுத்து, தலைமை அலுவலகத்துக்கும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மற்றும் அவரது ராணுவ ஆலோசகருக்கும் அறியப்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அளித்த வீடியோ ஆதாரத்தை இந்தியத் தூதருக்குப் போட்டுக் காட்டினேன். அந்த வீடியோ காட்சிகளில் "ரா' அதிகாரிகள் வழங்கியதாகச் சொல்லப்படும் ஆயுதங்களில் இந்தியக் குறியீடுகள் இருந்தன.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தவிர்த்து, மற்ற குழுக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டதானது, குழுக்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியது. யாழ்ப்பாணம் அமைதிப்படை முகாமுக்கு விடுதலைப் புலிகள் வந்து, "இவ்வாறு பிற குழுக்களுக்கு ஆயுதம் அளிப்பதால் எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 150 பேருக்கு கிளிநொச்சியில் பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் "ரா' ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எங்களது போராளிகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது' என்று மீண்டும் புகார் தெரிவித்தனர்.

"இந்திய அரசு இதுபோன்ற சூழ்நிலையை ஏன் உருவாக்கவேண்டும் "ரா' அமைப்பு பிரதமர் ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தல் பேரில் நடந்துகொள்வதாகச் சொல்லப்படுவதை உண்மையில் பிரதமர் அறிவாரா? பிரதமர் ராஜீவ் காந்தியின் குரலாகச் செயல்படும் இலங்கையின் இந்தியத்தூதர் இதைத் தடுக்க ஏன் முன்வரவில்லை? இதன் விளைவுகள் என்னவாகும் என்பது அவர் அறியாததா?' என்றும் ஹர்கிரத் சிங் அடுக்கடுக்காக பல கேள்விகளை தனது நூலில் எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.