கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில்

தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் நால்வர் (ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்) பெருமக்கள். அவர்களின் திரு அவதாரத்தால்தான் சைவமும், தமிழும் ஒருசேரப் புத்தொளி பெற்று தழைத்து வள
கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில்

தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் நால்வர் (ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்) பெருமக்கள். அவர்களின் திரு அவதாரத்தால்தான் சைவமும், தமிழும் ஒருசேரப் புத்தொளி பெற்று தழைத்து வளர்ந்தது. அச்சான்றோர்களின் அளப்பரிய சாதனைகளைப் பின் வந்தவர்கள் நினைத்து நினைத்து உள்ளம் உருகி, பக்திப் பாக்களைத் தந்த அந்நால்வரையும் தமது பாக்களாலேயே வழிபாடு செய்தனர்.

அப்படிப்பட்டவர்களுள் தலைமை சான்றவர், "கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். இவர், "கவி சார்வ பெüமா', "கற்பனைக் களஞ்சியம்', சிவப்பிரகாச சுவாமிகள், "நன்னெறி சிவப்பிரகாசர்', "துறைமங்கலம்' சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். அந்நால்வருக்கும் அவர் எழுப்பிய கவிதைச் சொற்கோயில்தான், "நால்வர் நான்மணி மாலை' என்ற பக்திப் பனுவல்.

திருச்செந்தூர் நீரோட்டக யமக (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா வகை) அந்தாதி, திருவெங்கை உலா, திருவெங்கை அலங்காரம், நால்வர் நான்மணி மாலை, சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணிமாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோணசைல மாலை, சீகாளத்திப் புராணம், திருவெங்கைக்கோவை, நெஞ்சுவிடு தூது, சிவஞான பாலையர், திருக்கூவ புராணம் போன்ற பக்தி நூல்கள் இவர் இயற்றியதாக அறியக் கிடைக்கின்றன. இறைவனுக்கு, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட வார்க்கப்பட்ட கற்பனை மிகுந்த அற்புதச் சொற்கோயில்கள் இவரது அனைத்துப் படைப்புகளும்.

"நால்வர் நான்மணி மாலை'யில் சிவப்பிரகாசரின் கற்பனைச் சொல்லோவியங்கள் மிக அற்புதமானவை. நால்வர் பெருமக்களையும் நான்கு மணி (முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்) மாலைகளாக்கி, நெஞ்சுருகிப் பாடியுள்ளார்.

சம்பந்தரை வெண்பாவிலும், அப்பரைக் கலித்துறையிலும், சுந்தரரை விருத்தப்பாவிலும், மாணிக்கவாசகரை அகவற்பாவிலும் போற்றிப் பரவுகிறார் சிவப்பிரகாசர்.

96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று நான்மணிமாலை. நால்வர் பெருமக்கள் மீது நான்மணி மாலை என்ற இலக்கணம் அமையப் பாடப்பட்டதால் இந்நூல் "நால்வர் நான்மணி மாலை' என்ற பெயர் பெற்றது.

முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளை முறையே கோர்க்கப்பட்ட மாலை போன்று வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா (அகவற்பா) என்னும் நால்வகைப் பாக்களை நிரலே நிறுத்தி, அந்தாதித் தொடை இலக்கணம் பொருந்தப் பாடப்படுவதால் இது நான்மணிமாலை என்று வழங்கப்படுகிறது. இதில் நாற்பது செய்யுள்களே இருக்க வேண்டுமென்ற வரைமுறையும் உள்ளது.

""வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல்

பின்பேசும் அந்தா தியினாற் பதுபெறின்

நன்மணி மாலை யாமென நவில்வர்''

என்பது இலக்கண விளக்க நூற்பா.

வாழ்க்கையில் நிகழ்ச்சி காரண, காரிய அமைப்புடையவை. இறையருள் வீழ்ச்சிக்கும் காரண, காரிய அமைப்பு உண்டு. இவைகளை உட்கிடையாகக் கொண்டு அமைக்கப் பெற்றதே அந்தாதித் தொடை என்பர்.

""முந்திய மோனை முதலா முழுவதும் ஒவ்வாறு

விட்டால் செந்தொடை நாம் பெறும்''

என்பது யாப்பிலக்கணம். எதுகை, மோனை முதலிய தொடைகள் முழுவதும் ஒவ்வாறு வந்தால் அதற்குச் செந்தொடை என்று பெயர்.

சிவப்பிரகாசர், மாணிக்கவாசகப் பெருமானுக்கு அமைத்த ஆசிரியப்பாவில் மூன்று, நான்கு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மோனை, எதுகை விதிகளைக் கடந்தே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்பாவும் - முத்தும்:

வெண்பா, உத்தம இலக்கணம் உடையது; வெண்சீரே வருதல் வேண்டும்; செப்பலோசை அமைய வேண்டும். சைவசமய உண்மைகளை நிலைநாட்ட முற்பட்டதே திருஞான சம்பந்தர் தேவாரம். ஒரு பொருள் இருக்கிறது என்பதை நிலைநாட்டவும், அதன் இலக்கணத்தை வரையறுக்கவும் முற்படுவது முதற்காரியமாகக் கருதப்படும். உண்மையையும், இலக்கணத்தையும் "செப்புதல்' என்ற அடிப்படையில் சைவ சமயத்தை நிலை நாட்டப் புகுந்த திருஞான சம்பந்தரை வெண்பாவால் - செப்பலோசையால் பாடிப்பரவியுள்ளார்.

முத்து எனப்படுவது கறையிலாத மழைநீர். ஆவணி "சுவாதி'யில் சிப்பியின் வயிற்றில் புகுந்து கட்டித்தன்மையதாக ஆன ஒருபொருள். கரையற்ற தெய்வ நலம் ஒன்றே மனிதக் குழந்தையாகி, தெய்வ அமுதமே உண்டு, தெய்வ இலக்கணத்தையே பேசியதால், முத்து, ஞானசம்பந்தப் பெருமானுக்கு இணைப்புடையதாயிற்று. இறைவன், சம்பந்தருக்கு முத்துச்சிவிகையும், முத்துப் பந்தரும் அளித்தமை இதனால்தான்!

கட்டளைக் கலித்துறையும் - பவளமும்:

"கலி' என்ற சொல்லுக்குச் "செருக்கு' என்றும் "மகிழ்ச்சி' என்றும் இருபொருளுண்டு. முதற்சீரின் இறுதி அசையாகிய காய், இரண்டாம் சீரின் மூல அசையாகிய நிரையுடன் சேரும்போது, மெத்தென்று ஓடிவரும் அருவி, தடையாக உள்ள கல்லின்மேல் மோதி எழும்போது உண்டாகும் ஓசையைப் போல ஒலிக்கும்; இதுவே துள்ளலோசை. செருக்கை நிலைநாட்ட இவ்வோசை பயன்படுத்தப்படும். இதற்கு மாறாக மகிழ்ச்சியால் தோன்றும் கலிப்பா வகைகளும் உண்டு. வாழ்க்கையில் உத்தம இலக்கணத்தோடு வாழ்ந்து, பேரின்ப வாழ்வை இவ்வுலக வாழ்விலேயே பெற்றும், பெறுமாறு அறிவுறுத்தியும், சமணர்களின் செருக்கை அடக்கியும் நின்ற நாவுக்கரசர், இலக்கண நெறியோடு அமைத்து கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டுள்ளார்.

கடலினுள் இருந்தாலும் கடலின் தன்மையை ஏற்றுக்கொள்ளாது இருப்பதும், பழுத்தல் இன்றி காயாகவே நிற்றலும் பவளத்தின் இயல்புகள். இவ்வுலகில் இருந்தாலும் இவ்வுலகியல் நெறிக்கு அடிமைப்படாமல் இருந்து காட்டியவர் நாவுக்கரசர். காயின் தன்மை புளிப்பு; அது பழமாக மாறியபின் இனிக்கும். புளிப்புத் தன்மைத்தாகிய இம்மனித உடலிலேயே இனிப்புத் தன்மையை-பேரின்பத்தை ஏற்று, இன்பம் துய்த்து வாழ்ந்த திருநாவுக்கரசர் காயாகவே நிற்கும் பவளத்தோடு இணைக்கப்பட்டார். செம்மைக்கு உதாரணமாக நிற்கும் பவளம் வாழ்வின் இலக்கணத்திற்கு உதாரணமாக நின்ற நாவுக்கரசருக்கு இணையாயிற்று.

ஆசிரியவிருத்தமும் - மரகதமும்:

அகவலோசை, தழுவுவதாய் இனமென அமைந்த அமைப்புடையது இது. இறைவனை, நினைப்பற நினைந்து, அவன் மகிழடியிலேயே எத்தனை இடையூறுகள் வரினும் தளராது நின்ற மயிலின் தன்மை நம்பியாரூரரின் இயற்கை. ஆனால் நம்பியாரூரர் நம்போல் அவர்களும் வாழுமாறு எளிதில் இவ்வுலகம் போற்ற வாழ்ந்து காட்டிய செயல்களையும் மேற்கொண்டவராதலின், அவருக்கு "விருத்தம்' அமைத்தார்.

மரகதமும் மாணிக்கமும் மலைபடு பொருள்கள். மலையில் கிடைக்கப்படுபவை ஆயினும், மரகதம் கல் வகையைச் சார்ந்தது; மாணிக்கம் நீர்ப்பொருள் (விஷம்) கட்டிப்பட்டதால் அமையும் வகையைச் சார்ந்தது. இயல்பிலேயே கற்புத்தன்மை அமைய நின்று உலகினர்க்கு ஒளிவூட்டிய நம்பியாரூரர் மரகத மணியைச் சாரும் நிலைபெற்றார்.

அகவலும் மாணிக்கமும்:

ஞான நிலையை வெளிப்படுத்துவது மயில். மயிலின் ஓசையே அகவலோசை எனப்படும். நினைவின் முதிர்ச்சியே மயிலுக்கு உருவாக அமையும். தன்னை மறந்து பிறிதொன்றை நினைப்பற நினைந்து நிற்கும் நினைவின் தன்மையை வழியாகக் கொண்டு இறையருள் இன்பம் துய்த்த "அறிவாற் சிவமாம்' மாணிக்கவாசகப் பெருமானை, அகவலோசையில் அமைத்துப் பாடினார் சிவப்பிரகாசர்.

நீர்த் தன்மையாயிருந்தும் தம்முடைய ஒழுக்கத்தினால் மாணிக்கத் தன்மையைப் பெற்ற மாணிக்கவாசகரை, மாணிக்கம் என்ற மணியைக் கொண்டு பாடியுள்ளார்.

  இந்நூலை "துதிநூல்' என்றும் "புகழ்நூல்' என்றும் கொள்வர் பலர். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் இந்நூலை, "ஓர் ஆராய்ச்சி' என்று கூறுகிறார். ""என்பாட்டுக்கு நீயும் அவனும் ஒப்பீர் எப்படியினுமே'' என்ற வரிகளில் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  வரலாறுகளில் காணப்படும் சிக்கல்கள், தத்துவ உண்மையில் கொள்ள வேண்டிய கருத்துகள், அறவழியும், அருள்வழியும் மோதும் நிலையில் எழுகின்ற மாறுபாடுகள் போன்றவற்றை எடுத்துக்கூறி விளக்கி, சிக்கல்களை நீக்கியுள்ளார்.

கற்பனையும், உவமையும், உருவகமும், எதுகை மோனையும் அமையப்பாடி, நால்வர் பெருமக்களான நான்கு சைவ மணிகளுக்கும் நான்கு சொற்கோயில்கள் கட்டியுள்ளார் சிவப்பிரகாசர். இந்நூலில் உள்ள 40 பாக்களில் ஒன்றிரண்டை மட்டும் படித்தால் போதாது. அனைத்துப் பாக்களையும் நிரல்பட படித்துச் சுவைக்க வேண்டும்! கற்பனைக் களஞ்சியத்தின் கவித்திறனுக்கு நால்வர் நான்மணி மாலை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com