காக்குமா காப்பீடு?

மக்கள்தொகையைப் போலவே இருசக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 70 லட்சம் இருசக்கர மோட்டார் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாவதாகப் புள்ளிவிவரங்கள் த
Updated on
2 min read

மக்கள்தொகையைப் போலவே இருசக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 70 லட்சம் இருசக்கர மோட்டார் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 வாகனங்களின் எண்ணிக்கை பெருகப் பெருக விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால், அந்த விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இழப்பீடு கோரி  தாக்கல்  செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.

 விபத்துகளில் சொந்தங்களை இழந்து, நிர்கதிக்கு ஆளாகி நடுத்தெருவுக்கு வந்த   குடும்பங்கள் ஏராளம். விபத்துகளைக் குறைக்க அரசும் தனியார் அமைப்புகளும் எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இருப்பினும், விபத்துகள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

 இச் சூழ்நிலையில் விபத்துகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெறுவதற்கான வழியையாவது பிரகாசப்படுத்திக் கொள்ள வேண்டாமா?

 இப்போதெல்லாம் நகரங்கள், கிராமங்கள் என வேறுபாடின்றி மோட்டார் சைக்கிள்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வண்டியை ஓட்டுபவருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்காது; இல்லையென்றால் வண்டிக்கு ஆர்.சி. இருக்காது அல்லது காப்பீடு இருக்காது.

இப்படி ஏதாவது ஒன்று இல்லாவிட்டால்கூட, விபத்துக்கான இழப்பீட்டைப் பெற முடியாது.

 நான்குசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை இந்த மூன்று ஆவணங்களையும்  பெரும்பாலும் வைத்திருக்கின்றனர். இருசக்கர வாகனங்கள்தான் பிரச்னை. அதிலும் காப்பீடு இல்லாமல் இயக்கப்படுவதுதான் அதிகம்.

 புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு இப்போது ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் காப்பீட்டுக் கட்டணம் குறையும்.

 ஆனால், இந்த ஆயிரம் ரூபாய் என்பது நடுத்தரக் குடும்பத்தினரைப் பொறுத்தவரை ஒரு பெரும் சுமை. இதனாலேயே பலர் காப்பீட்டைத் தொடர்ந்து  எடுக்காமல் வாகனத்தைப் பயன்படுத்தி, விபத்தில் சிக்கினால் இழப்பீடு பெற வழியின்றித் தவிக்கின்றனர்.

 வாகனங்களுக்குக் காப்பீடு உள்ளதா என்பதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மட்டுமே உறுதிசெய்துவிட முடியாது. போக்குவரத்துக் காவலர்களும் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், எங்காவது காப்பீடு இல்லாமல் வாகனம் பிடிபடும்போது, ""கோர்ட்டுக்கு போனால் ரூ. 300; நேராக வீட்டுக்குப் போக வேண்டுமானால் ரூ. 100'' என கேட்டு "வாங்கி'க் கொண்டு வாகனத்தை விட்டுவிடுகின்றனர். அந்த  நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுத்தால், காப்பீட்டை இனிமேலாவது பெற  வேண்டும் என்ற எண்ணம் வாகன உரிமையாளருக்கு ஏற்படக் கூடும்.

 இந்தியாவில் இந்தக் காப்பீட்டுத் துறை இப்போது கோடிகள் புரளும் துறையாகிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பல இத் துறையில் கால்பதிக்கத் தொடங்கியுள்ளன. காப்பீட்டுத் திட்டங்கள் பல இருந்தாலும், வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

 "பணம் திருப்பிக் கொடுக்கப்படாத' இந்தத் திட்டத்தின் கீழ், இழப்பீட்டைப் பெறுவது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.

ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இழப்பீடு வழங்காமல் இருப்பதற்கான அத்தனை வழியையும் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. முறையாகக் காப்பீடு செலுத்தி வருபவர்களுக்கும் இதே நிலைதான்.

 காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைத்தல், இழப்பீடு பெறுவதற்கான வழியை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள், வாகன உரிமையாளர்கள் அனைவரையும் வாகனக் காப்பீடு செலுத்த ஊக்கப்படுத்தும்.

 புதிய மோட்டார் வாகனங்கள் வாங்கும்போது சாலை வரி ஆயுள் காலத்துக்கும் (15 ஆண்டுகள்) சேர்த்து வசூலிக்கப்பட்டு விடுகிறது. அதேபோல, காப்பீட்டுத்  தொகையையும் குறைத்து முதலிலேயே வசூலிக்கலாம்.

 "பணம் திருப்பித் தரப்பட மாட்டாது' என்பதற்கு மாறாக, 10 ஆண்டுகள் முறையாகக் காப்பீட்டுக் கட்டணம் செலுத்தியவருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் திருப்பி வழங்கலாம்.

இது ஒரு சேமிப்புபோல இருப்பதால் வாகன உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் காப்பீடு பெறுவதில் ஆர்வம் காட்டுவர்.

 குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 1,000 வாகனங்கள் வீதம் ஒரு குழுவாகச் சேர்த்து இழப்பீடு வழங்குவதை முறைப்படுத்தலாம்.

 மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கட்டண நடைமுறைகள் உள்ளன. அவற்றையும் முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

  காப்பீட்டு நிறுவனங்களில் திருப்பி வழங்கப்படாத தொகை (கிளைம் இல்லாத தொகை) ஏராளம்.

இதே நடைமுறை தொடர்ந்தால் அது காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் மென்மேலும் லாபத்தை அள்ளித்தருமே தவிர, பொதுமக்களுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது.

 வாகனக் காப்பீடுபோல மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. ஆண்டுக்கு இவ்வளவு செலுத்தினால் இத்தனை லட்சம் வரை மருத்துவச் சிகிச்சைக்கு காப்பீடாகப் பெறலாம் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால், அவை பயனாளிகளுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியது.

 "இன்சூரன்ஸ்' திட்டம் அருமையான திட்டம். ஆனால், அது மக்களைக் காக்கும் அளவு இருப்பதை "என்சூர்' செய்ய வேண்டியது அரசின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com