வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஒரு பார்வை

பட்டியல் சமூகத்தவர்கள் அனுபவித்த தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட, முதலில் 1955-இல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம்' தனியாகக் கொண்டுவரப் பட்டது.


பட்டியல் சமூகத்தவர்கள் அனுபவித்த தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட, முதலில் 1955-இல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம்' தனியாகக் கொண்டுவரப் பட்டது. பின்பு அது குடியுரிமை பாதுகாப்புச் சட்ட'மாக உருமாறியது. அதில் பட்டியல் சமூகத்தவருக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால், பட்டியல் சமூகத் தலைவர்கள் பலரின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் அரசால் 1989-இல் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' கொண்டுவரப் பட்டது. 
அதிலும் பல குறைபாடுகள் இருந்தன. அந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கே பல ஆண்டுகள் ஆயின. பல தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஆங்காங்கே முட்டுக்கட்டைகள் போட்டு தடுக்கப்பட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து கடைசியாக 1995-இல் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தும்கூட பட்டியல் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. வழக்குகள் அதிகமாக பதிவானாலும்கூட அதை நீர்த்துப்போகும் அளவிற்கு மாநில அரசாங்கம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் இருந்தன.
இந்தியா முழுவதும் தொடர்ந்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தில் இன்னும் கடுமையான ஷரத்துகளைச் சேர்த்து வலிமைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்தன. அப்போது ஆண்ட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் இது வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் தொடர்ந்து ஆண்ட 10 ஆண்டுகளில் அச்சட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. 
கடைசியாக, தங்கள் ஆட்சி முடியும் நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக சில ஷரத்துகளைச் சேர்த்து 2014 பிப்ரவரில் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியது.
2014 மே மாதம் பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. ஆட்சி அமைத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பாஜக அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத் திருத்த மசோதா'வை 2015-இல் கொண்டுவந்தது. பாஜகவின் சமூகநீதி அமைச்சர் தாவர்சந்த் கெலாட் 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் புதிய திருத்தங்களை நிறைவேற்றினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015, அதே டிசம்பர் மாதம் அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து மத்திய அரசிதழில் 2016 ஜனவரி 1-ஆம்தேதியே அறிவிப்பு வெளியானது. ஜனவரி 26-ஆம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. 
பாஜக அரசு கொண்டு வந்த புதிய திருத்தங்கள், பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாய மக்கள் வெளியில் தெரியாமல் அனுபவித்து வந்த கொடுமைகளைக் களையும் வகையில் அமைந்தன.
1. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
2. அந்த சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் இருப்பார்கள்.
3. வன்கொடுமை வழக்குகளை இரண்டு மாதத்திற்க்குள் இந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும்.
4. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் மேல்முறையீட்டுக்குப் போனால் மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
5. அரசு ஊழியர்கள், பட்டியல் சமுதாய மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவில்லை என்றால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும்.
6. பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து வருடம் வரை சிறைதண்டனை.
7. ஒட்டுமொத்த ஆதிக்க சாதியினர் செய்யும் ஊர் விலக்கம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஊருக்கே ஒட்டுமொத்தமாக அபராதம் விதிக்கப்படும்.
8. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமுதாயத்திற்கு பாதுகாப்பும் மறுவாழ்வும் ஏற்படுத்தித் தருவது மாநில அரசின் பொறுப்பாகும்.
9. வன்கொடுமை வழக்குகளில் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
10. செருப்பு மாலை போடுவது, கட்டாயப்படுத்தி மலம் அள்ளச் சொல்லுவது போன்ற குற்றங்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பாஜக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களாக, கூடுதலாக வன்கொடுமை குற்றங்களாக சேர்த்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, வன்கொடுமை வழக்குகள் சாதாரணமான வழக்குகளாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். இனிமேல், வன்கொடுமை சட்டத்தின் கீழ், வன்கொடுமை வழக்குகளைப் பதியாத காவல்துறையினருக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும். 
பாஜக அரசு சட்ட திருத்தங்களைக் கடுமையான ஷரத்துகளுடன் கொண்டுவந்ததுடன் நிற்காமல், அதைத் தொடர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபட்டது. எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தை இந்திய மாநிலங்கள் கடைப்பிடிக்க 17-2-2016 மற்றும் 3-6-2016 ஆகிய தேதிகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூகநீதித்துறை முதன்மைச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இச்சட்டத்தை ஆய்வு செய்யும் 24-ஆவது கூட்டம் தாவர்சந்த் கெலாட் தலைமையில் 2018 ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது.
மார்ச் 20, 2018 அன்று உச்சநீதிமன்றம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் ஒரு தீர்ப்பை வெளியிட்டது.
1. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு தொடக்க விசாரணை நடத்தப்பட்டு ஏழு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
2. தொடக்க விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், கைது கட்டாயமல்ல.
3. குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவரின் நியமன நிர்வாகத்தின் அனுமதியின் பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.
4. அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில், அவர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு மட்டுமே கைது செய்யப்படலாம்.
5. கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று இச் சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், இந்திய உச்சநீதிமன்றம், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.
6. வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறை சாதியை வளர்ப்பதற்கு பங்காற்றுவதாக அமைந்துவிடக்கூடாது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கும் எதிர்மறையாக பாதிப்பு ஏற்படும். இது பற்றிய கவலைகளை எழுப்புவது அவசியமாகும். 14-16 சட்டப்பிரிவு உட்பட அரசியலமைப்பு சட்டம் அதன் முன்னுரையில் சாதி அல்லது மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பட்டியல் சமூகத்தவருக்கு பேரிடியாக அமைந்தது. ஏற்கெனவே புகார் கொடுத்தாலும் அதை எடுத்துக்கொள்வதில்லை எனும்போது இப்படிப்பட்ட தீர்ப்பு பட்டியல் சமூகத்தவருக்கு பாதிப்பாகவே அமையும் என்று கருதி பல்வேறு போராட்டங்கள் வடமாநிலங்களில் நடத்தப்பட்டன. 
மத்திய பாஜக அரசின் சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் உடனடியாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் என்றே கருதுகிறேன். எனவே அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்வதே சரியான முடிவாக இருக்கும்' என்று குறிப்பிட்டார். மார்ச் 28-ஆம் தேதி மத்திய அமைச்சர் தாவர்சந்த் மற்றும் பாஸ்வான் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நிலைமை விளக்கினர். 
இதன் காரணமாக, ஏப்ரல் 2-ஆம் தேதியே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் 3-ஆம்தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவரையும், அரசு ஊழியரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு விரோதமானது, அரசியலமைப்புச் சட்டம் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு வழங்கிய சிறப்புரிமைகளை இந்தத் தீர்ப்பு நீர்த்துப்போகச் செய்யும். எதிர்காலத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தத் தீர்ப்பினால் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட'த்தில் உச்சநீதிமன்றம் நீக்கிய கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெற செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்வதற்கு பாஜகவின் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தன. கேரளமும் தமிழ்நாடும்கூட சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தன. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களோ சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட வைக்கவில்லை.

கட்டுரையாளர்:
மாநிலத் தலைவர், 
எஸ்சி அணி, பாரதிய ஜனதா கட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com