அண்மையில் நடைபெற்ற திரிபுரா மாநில தேர்தலில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோற்கடிக்கப்பட்டு, பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, மாநிலத்தில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில், 'அடுத்து தமிழகத்தில் ஈ.வெ.ரா. சிலைக்கு' என்று பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே முகநூல் பதிவு நீக்கப்பட்டதோடு, வருத்தமும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பாஜகவின் முன்தோன்றலான பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் சியாம்பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் தலையிட்டு சூட்டைத் தணிக்க முற்பட்டார். ஆனால், காரசார விவாதம் தொடர்ந்தது.
அரசியல்ரீதியாக ஒரு சித்தாந்தமோ அல்லது கட்சியோ தோற்கடிக்கப்படும்போது, அதன் அடையாளங்களையும், சிலைகளையும் உடைப்பது கடந்த இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் தொடங்கிவிட்டது. ரஷியாவில் ஜார் மன்னர் ஆட்சி அகற்றப்பட்டபோது, அவரது வீட்டு நாய்க்குட்டி கூட கொல்லப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக, 1980-களில் கம்யூனிஸம் வீழ்ந்தபோது, சோவியத் யூனியன் நாடுகளில் இருந்த பிரம்மாண்ட லெனின், ஸ்டாலின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இராக்கில் சதாம் உசேன் ஆட்சி முடிவு வந்ததும், அவரது சிலை ஆக்ரோஷமாக அகற்றப்பட்டது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி அவரது கட்சி தேர்தல் சின்னமான யானையைப் பெரிய சிலைகளாக வடித்திருந்தார். பேரவைத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும் அந்த யானைகள் காணாமல் போயின. ஆஃப்கனிஸ்தானில் பிரம்மாண்ட புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டது மத ரீதியானது என்றாலும், ஆட்சி மாற்றத்தின் விளைவே.
இந்தியா மீது படையெடுத்த முகலாயர்கள், கோயில்களையும் குறிவைத்தனர்.
நம் நாட்டிலேயே அரசர்கள் படையெடுத்துப் போரிட்டபோது கோயில்களை அழிக்கும் வழக்கம் தொடக்கத்தில் இருந்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால், பிற்காலத்தில் அது வழக்கொழிந்து, சிவனும், விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட அதிசயம் நிகழ்ந்ததும் இங்கேதான். அது மட்டுமல்ல. பிற நாட்டவர் வழிபடும் கடவுளரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பு இங்கிருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த பார்சி மதத்தினர் இங்குள்ள மக்களோடு இசைந்து வாழ்கின்றனர். உலகெங்கும் சிதறிய யூதர்கள் பிற நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் மரியாதையுடன் நடத்தப்பட்டதை நவீன யூதர் வரலாறு கூறுகிறது.
இந்த மண்ணிலேயே தோன்றிய பெளத்த, சமண மதங்கள் சூன்யவாதத்தைக் கொள்கையாக முன்வைத்து பிரம்மாண்டமாக வளர்ந்தன. வைதிக மதத்தை அசைத்துப் பார்த்தன. இன்று பெளத்தம் ஒருசில ஆசிய நாடுகளில் பெரிய மதமாகத் திகழ்ந்தாலும், இந்தியாவில் புத்தரை மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதுவோரும் உண்டு.
நாத்திகவாதத்தையும் ஆன்மிகத்தோடு கலந்து பார்த்தது இங்குதான். சார்வாகமும் சாங்கிய தத்துவமும் இந்து தத்துவ இயலின் கிளையாகிவிட்டன. நாத்திகத்தை வெளிப்படுத்தும் ஏராளமான ஆன்மிக இலக்கியங்கள் இருக்கின்றன. திருஞானசம்பந்தர் காலத்தில் 'நட்ட கல்லும் பேசுமோ?' என்று கேலி பேசியபோது, அதை எதிர்கொண்டதாக வரலாறு உண்டு. வால்மீகி ராமாயணத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கும், ராமருக்கும் நடைபெறும் விவாதத்தில் நாத்திகவாதம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துகள் கூறப்பட்டன. ஆத்திகவாதம் பேசப்பட்ட காலம் முழுவதும், நாத்திகவாதமும் பேசப்பட்டது. அதையும் வரவேற்ற பரந்த பண்பாட்டிற்குச் சொந்தமானவர்கள் நாம்.
ஆனால், முந்தைய எழுச்சிகளால் விளைந்த சலசலப்புகள் அளவுக்கு கடந்த நூற்றாண்டின் தமிழக நாத்திகவாதம் பேசப்படவில்லை. பெரிய, பெரிய சுனாமிகளையே சமாளித்த நம்மவர்களுக்கு, தோரணப் பிரசாரங்கள் எம்மாத்திரம்? நாத்திகத் தலைவரைப் புகழ்ந்துகொண்டே அவரது தொண்டர்கள் கோயில்களுக்கு சாரி, சாரியாகச் சென்றனர். திருவண்ணாமலை கிரிவலமும், சபரிமலை யாத்திரையும், பழனி பாத யாத்திரையும் பிரபலமானது, மிக சமீபத்திய ஆண்டுகளில்தான். வீதிகளில் கடவுள் சிலைகளை உடைத்து 'சிலைகளுக்கு உயிர் இல்லை' என்றவருக்கும் பெரிய பெரிய சிலைகள் எழுப்பப்பட்டன. அந்தச் சிலைகளும் மகத்துவம் பெற்று, சிலர் வழிபடவும் செய்தார்கள். தொண்டர்கள் பக்தர்களானார்கள்.
இந்து வழிபாட்டு இயலில் சிலை வழிபாடு கீழ்நிலைதான். உருவமற்ற கடவுளை வணங்குவதும், 'தத்-த்வமஸி' என தன்னையே கடவுளாக உயர்த்துவதுமே உயர்நிலையாகக் கருதப்பட்டது. அப்படி உணர்ந்தவர்களையே சமூகத்தில் உயர்நிலையிலும் வைத்தார்கள். இப்படித்தான் வழிபட வேண்டும் என்ற பிடிவாதமும் இங்கில்லை. சிலைகளை வழிபட்டவர்களை கீழ்நிலையில் பார்க்கவும் இல்லை. அனைவருக்கும் வழிபாடு சுதந்திரம் இருந்தது.
சிலைகள் இருக்கட்டுமே; இங்கு எல்லா சிலைகளும் வழிபடத்தக்கவையே, நாத்திகம் பேசியவர்களின் சிலைகள் உட்பட.