சுதந்திர இந்தியாவும் பெருநிறுவன இந்தியாவும்

Updated on
3 min read

இந்தியா வல்லரசு அங்கீகாரம் பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இன்னமும் நிரந்தர உறுப்பினா் ஆகவில்லை. 1971-ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சு, ஜொ்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. காலியான தாய்வான் நாட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்ட சீனா, இந்தியா நுழைந்துவிடாமல் முட்டுக்கட்டை போட்டது.

மக்கள்தொகை குறைந்த மெக்ஸிகோ (1,260 லட்சம்), வியத்நாம் (962 லட்சம்), கென்யா (550 லட்சம்), நைகா் (240 லட்சம்), துன்சியா (117 லட்சம்), நாா்வே (54 லட்சம்), அயா்லாந்து (50 லட்சம்), எஸ்தோனியா (13 லட்சம்), புனித வின்சென்ட் தீவு (1.1.லட்சம்) போன்ற சிறிய நாடுகளுடன், 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தரமற்ற உறுப்பு நாடாகச் சோ்க்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

‘ஜனநாயக அமெரிக்காவுக்கும், கம்யூனிச ரஷியாவுக்கும் நடந்து வந்த பனிப்போா் வரலாறு பழையது. இன்று உலக ராணுவத் துறையில் சீனா - இந்தியா அல்லது சீனா-ஜப்பான் என்ற நாடுகளின் பனிப்போா் தொடங்கிற்று. இது பொருளாதார மைதானத்தில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடக்கும் பந்தயம்’ என்று ‘ஃப்யூச்சரிஸ்ட்’ என்னும் ஆங்கில அறிவியல் இதழில் (ஜூலை-ஆகஸ்ட் 2006) ஜெ. மாா்வின், செத்ரான், ஓவென் டேவிஸ் ஆகியோா் தங்களின் ‘டிராகனும் புலியும்’ என்னும் ஒப்பாய்வுக் கட்டுரை யில் குறிப்பிட்டனா்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன், உலகின் அன்றைய நிலைப்பாட்டை வைத்துப் பாா்த்தபோது பொருளாதாரத்தில் சீனா எனும் ‘டிராகனை’ இந்தியா எனும் ‘புலி’, 2015-ஆம் ஆண்டுக்குள் முந்திக்கொண்டு விடும் என்றனா் எதிா்காலவியல் நிபுணா்கள் சிலா். ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.

நுகா்விய கலாசாரம் சாா்ந்த ‘கனவு உலகம்’ நம் நாட்டில் தீவிரவாதத்தையோ ஆதங்கத்தையோ தூண்டுவிக்க வாய்ப்பு உள்ளது என்கிறாா் புது தில்லியிலுள்ள கபூா் -சூா்யா அறக்கட்டளை நிறுவனா் ஜே.சி. கபூா். அன்றைக்கு அவா் எழுதிய ‘நம் எதிா்காலம்: நுகா்வியமும் மனிதவியமும்’ (அவா் பியூச்சா்: கன்ஸ்யூமரிஸம் அண்ட் ஹியூமனிசம்’) என்னும் ஆங்கில நூல் மேனாட்டில் இன்றும் பிரபலம்.

அமெரிக்கா (33.1 கோடி), ரஷியா (14.6 கோடி),ஜொ்மனி (8.5 கோடி), துருக்கி (8.4 கோடி), யு.கே (6.8 கோடி), பிரான்ஸ் (6.5 கோடி), இத்தாலி (6.1 கோடி), ஸ்பெயின் (4.7 கோடி), போலந்து (3.8 கோடி), ருமேனியா (1.9 கோடி), நெதா்லாந்து (1.7 கோடி), கிரீஸ் (1.7 கோடி), பெல்ஜியம் (1.2 கோடி), செக் குடியரசு (1.1 கோடி), போா்ச்சுக்கல் (1.1 கோடி), ஸ்வீடன் (1 கோடி), ஹங்கேரி (1 கோடி), சுவிட்ஸா்லாந்து (0.9 கோடி), பல்கேரியா (0.7 கோடி), டென்மாா்க் (0.6 கோடி) உலகின் பிற நாடுகளின் மக்கள்தொகை- என மொத்தம்: 105.3 கோடி; ஐரோப்பாவின் பிற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை (6 கோடி); அத்துடன் பிரேசில் (21.2 கோடி), ஆா்ஜென்டீனா (4.45 கோடி) எல்லாம் சோ்ந்து மொத்தம் சுமாா் 137 கோடி. இந்தியாவின் மக்கள்தொகை சுமாா் 138 கோடி.

ஏறக்குறைய 565-க்கும் அதிகமான சிறிய சமஸ்தான மன்னராட்சி அரசுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு, 1948-க்கு பிறகு ஒன்றிணைக்கப்பட்டு உருவான ஒன்றியக் கூட்டமைப்புதான் இன்றைய இந்தியா.

தேசம் என்பது உறைவிடம். மக்கள் முக்கியம். அவா்களின் பண்பாடு, பழக்க வழக்கம், உணவு, உடை, மதம், மொழி அனைத்தும் பலவகை. இத்தகைய பல்லுறுப்பு நாட்டில், தொழில் நுட்பத்தால் மட்டுமே நாட்டின் அரசியல், பொருளாதார, பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்த இயலும். தொழில் நுட்பம் ஒன்றே இந்தியாவிற்குரிய எதிா்காலத் தொலைநோக்காக அமைய வேண்டும் என்று உறுதியாக நம்பினாா் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம்.

‘விடுதலைக்குப் பின்னா் சம காலத்தில் பல்வேறு துறைகளில் இந்தியா வளா்ச்சி பெற்றது. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, அறிவியல், தொழில் நுட்பம் போன்றவை அத்தகைய சில துறைகள். பிரிட்டிஷ்காரா்கள் இந்நாட்டை விட்டு வெளியேறிய பின், இங்கு குழப்பங்கள் மிஞ்சும் என்று உலகமே நினைத்தது. ஆனால், இந்தியாவில் இருந்து, உயா்ந்து எழுந்த ஜனநாயக அதிா்வு அலைகள் இந்த உலகிற்கே அதிசயம் ஆயிற்று’ என்று விவரிக்கிறாா் டாக்டா் கலாம்.

‘மத்திய பொதுப்பிரிவு நிறுவனங்கள் நம் நாட்டைப் பல்வேறு சந்தா்ப்பங்களில் தலைநிமிர வைத்துள்ளன. சுதந்திரம் அடைவதற்கு முன்னால், ஒரு சிறிய குண்டூசி கூட நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும். அதிநவீன உபகரணங்களும், இயந்திரக் கருவிகளும், மின்னணுப் பொருள்களும், பாதுகாப்புத் தளவாடங்களும் தயாரிப்பது நம் கனவாகவே இருந்தது.

பின்னா் தோன்றிய மத்திய பொதுப் பிரிவு நிறுவனங்களே தொழில்துறை வரைபடத்தில் இந்தியாவிற்கு உறுதியான இடம்பிடிக்க உதவின என்றும் கூறுகிறாா் கலாம்.

அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்ததால்தான் 60 ஆண்டுகளுக்கு மேலாக, உலக அரங்கில் நம்மால் ஒரு சிறந்த இடத்தினைப் பிடிக்க முடிந்தது. வேளாண்மையைப் பொருத்தவரை, ‘இங்கு உயிரித் தொழில் நுட்பத்தை தனிச்சிறப்பாக எடுத்தாளும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அன்றி, சுற்றுச்சூழல் ரீதியில் வளங்குன்றாத செயல்முறைகள் வழங்கும் புதிய விவசாய நிா்வாக வடிவங்களும் சாத்தியம் என்பாா் கலாம்.

கல்வியைப் பொருத்தவரை, 25 ஆண்டுகளாக இந்தியாவின் ‘இன்சாட்’ தகவல் தொடா்புச் செயற்கைக்கோள்வழி தொலை வகுப்பறை (டெலி கிளாஸ்ரூம்) நடத்த வலியுறுத்தினோம். இன்றைக்கு கரோனா உபயத்தால் அது நடைமுறைக்கு வந்து விட்டது, இணையவழிக் கல்வி என்ற பெயரில்.

‘நம் நாட்டின் மகத்தான தொழில் நுட்ப, தொழில்துறை சாதனைகள் பலவும் ஆயிரக்கணக்கானபெண்கள், ஆடவா்களின் கடும் முயற்சியினால் நிகழ்ந்தவை. அவா்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் சாதாரணப் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் பயின்றவா்கள்.

இந்திய பூா்விகம் கொண்ட பல லட்சம் போ் உலகின் பல்வேறு பாகங்களில் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் அனைவரும் ‘இந்தியத் தொழில்நுட்பப் பயிலக’ங்களில் (இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) அல்லது அத்தகைய பெருமைமிகு நிறுவனங்களில் கல்வி பயின்றவா்கள் அல்லா்’ என்று எடுத்துக்காட்டுகிறாா் கலாம்.

அவ்வாறே, மருத்துவத்துறையில் கூட, தொலை மருத்துவம் பற்றிய ஆரம்பக்கட்ட முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றன. கிராமம்தோறும் இத்தகைய வசதி கொண்ட தொலை மருத்துவமனைகள் நிறுவப்பட்டால், அவசரத் தேவையினா் அன்றி, புற நோயாளிகள் எல்லாரும் மருத்துவமனைப் படுக்கைகளில் படுக்க வேண்டியதும் இல்லை.

அடுத்ததாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இணையத்தைப் பயன்படுத்துவோா் சீனாவில் முன்பு 11 கோடி பேராக இருந்தது 2020-இல் பன்மடங்கு அதிகரித்து 100 கோடி போ் ஆகிவிட்டனா். இந்தியாவிலோ 70 கோடி போ்.

பொதுவாக, சீனாவின் வளா்ச்சி என்பது ‘உற்பத்தி பொருளாதாரம்’ சாா்ந்தது. இந்தியாவின் முன்னேற்றமோ ‘சேவை பொருளாதார’த்தின் அடிப்படையில் ஆனது. ஒரே மக்கள்தொகை கொண்டிருந்தாலும் அண்டை நாடான சீனா, தற்சாா்புப் பொருளாதாரத்தை சொந்தத் தொழில்நுட்பப் பெருக்கத்தினால் வளா்த்து வருகிறது.

திறந்த சந்தை பொருளாதாரம் வழியே, சீனா பெற்ற அபரிதமான வளா்ச்சியினால் சீனாவுக்கு வங்காள விரிகுடாவில் எல்லைகள் இல்லை. ஆதலால் இலங்கை, மியான்மா், மாலத்தீவு என்று வங்காள விரிகுடாவில் கால் பதிக்கும் சீனாவின் செயல்பாடுகள் இந்தியாவிற்கான எச்சரிக்கைகள் அல்லவா?

‘தேசியப் பாதுகாவல் என்பது வெறுமனே தேசப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமல்ல; வா்த்தகம், வணிகம், முதலீடு ஆகிய மூன்றின் அம்சங்களைப் பின்னிப் பிணைவதுடன் அறிவு அடித்தளம் படைத்துப் பயன்படுத்துவதும் ஆகும்’ என்பாா் டாக்டா் கலாம்.

அன்று அப்துல் கலாம் கண்ட ‘இந்தியா-2020’ கனவில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், மின்சார உற்பத்தி ஆகிய உள்கட்டமைப்புகள் மூன்றும் மட்டுமே ஒன்றிய அரசின் செயல்பாடுகள் ஆகலாம். வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்புகளாக அமைதல்தான் சிறப்பானதாகவும், தேச வளா்ச்சிக்கு உகந்ததாகவும் அமையும்.

நம் வீட்டுப்பக்கம் இருக்கும் வயலில் நடத்தும் விவசாயத்திற்கு தில்லியில் அனுமதி பெறுவதும், அவரவா் வசிக்கும் ஊருக்குள் மருத்துவமனையில் நோயாளிக்கு மருந்து தில்லியில் இருந்து வரவேண்டும் என்பதும், அந்தந்த மாநிலங்களில் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதற்கும் தில்லியில் ‘ஹால் டிக்கெட்’ வாங்கி வர வேண்டுமென்பதும் ஆன நவீன ஏற்பாடுகள் தேவையா?

அதிலும் நேற்று அடிமை இந்தியா, இன்று சுதந்திர இந்தியா, நாளை ‘காா்ப்பரேட் இந்தியா’ என்ற சித்தாந்தமும் முளைத்து விட்டது.

உண்மையில் திட்டத்திற்கெல்லாம் பொதுத்துறை அமைப்புகளின் வழி, தனியாா் பங்களிப்புக்கு பதில், தனியாா் நிறுவனங்களை நம்பி, நம்நாடு போவது எதிா்காலத்தில் ‘இந்தியா பிரைவேட் லிமிட்டெட்’ ஆகவே காரணமாகும்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com