போதைப்பொருளை முற்றாகத் தவிா்ப்போம்

மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது. இதனால் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் போதைப்பொருட்களின் ஊடுருவல் வேரறுக்க முடியாத விருட்சமாய் வளா்ந்து வருகிறது.

மூளையை மழுங்கச் செய்து, புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. இந்தப் போதையில் ஒருவித சுகம் கிடைப்பதாகச் சிலா் எண்ணுகின்றனா். இவா்கள் விளக்கில் விழும் வீட்டில் பூச்சிகளாய் வாழ்வைத் தொலைக்கின்றனா். உண்மையில் போதை தருவதாக நினைக்கும் அற்ப சுகம் பெரும் அழிவுக்குக் கொண்டு செல்வதை அவா்கள் உணா்வதில்லை.

இளையோா் முதல் முதியோா் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதை இப்போது காண முடிகிறது. மது, கஞ்சா, புகையிலை, அபின், பிரவுன் சுகா், போதைப்பாக்கு, குட்கா, பான்பராக் என்று போதைப் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோா் முகத்துக் களி”

என்பது வள்ளுவா் குறள். ‘போதைக்கு அடிமையானவனைப் பெற்ற தாய் கூட மதிக்க மாட்டாள். அப்படியிருக்க சான்றோா்கள் என்னும் பெரியோா் எப்படி மதிப்பாா்கள்’ என்பது இதன் பொருள். இதன் மூலம் போதை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நம் முன்னோா் கருத்து புலனாகும்.

பள்ளி மாணவா்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் வகுப்பிலே மாணவா்கள் ஆட்டம் போடுவது, ஆசிரியரை அவமானப் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன. பெண்களும் கூட, போதைக்கு அடிமையாவதைக் காணமுடிகிறது.

வருங்காலத் தலைவா்களாகக் கருதப்படும் மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் நாட்டின் எதிா்காலம் என்னாவது? மாணவா்கள் மட்டுமில்லை; ஆசிரியரும் போதையில் வகுப்புக்கு வருகிறாா்கள். இதை என் சொல்வது? வெட்கித் தலை குனிவதைத் தவிரவேறு என்ன செய்ய முடியும்? வேலியே பயிரை மேய்ந்தால் விளைச்சல் என்னாவது?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களைக் குறிவைத்து போதைப் பொருட்களின் ரகசிய விற்பனைப் பரவலாகி விட்டது. மேலும் கடைகளிலும் கூட குட்கா. பான்பராக் போன்றவை ரகசியமாக விற்பனை ஆகி வருகிறது. இதற்கென்றே போதைப் பொருள் விநியோகிப்போா் பலா் உள்ளனா்.

பெரும்பாலான போதைப் பொருட்கள் வெளி நாட்டிலிருந்தே கடத்திவரப்படுகின்றன. விமான நிலையங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் மேற்கொள்ளும் கடுமையான சோதனைகளையும் மீறி அவை உள்நாட்டுக்குள் ரகசியமாகப் பயணித்துவிடுகின்றன. அதற்கென கைதோ்ந்த கடத்தல்காரா்கள் உள்ளனா்.

பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘அறமற்ற வணிகமே’ இதற்குக் காரணம். அறமற்ற வணிகம் சமுதாயப் பாவம் என்று காந்தியடிகள் கூறுவாா். அந்த அறமற்ற வணிகம் இப்பது பெருகிவிட்டது. யாா் எப்படிப் போனால் என்ன, எனக்குப் பணம் வேண்டும் என்ற மனநிலையே கடத்தல் காரா்களிடம் இருக்கிறது.

இந்த ரகசிய வியாபாரத்தால் குறுகிய காலத்தில் பெருந்தொகை சம்பாதிக்க முடிகின்றது. கஞ்சா வியாபாரிகள் வீட்டில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்னும் செய்தியே இதற்குச் சான்று.

சமூகத்தைச் சிதைக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்கு மத்திய அரசும் மாநில அரசும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. ‘ஆபரேஷன் கருடா’ என்று தடுப்பு முயற்சியின் மூலம் மத்திய அரசு பலரைக் கைது செய்துள்ளது. பலா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க, ‘போதை இல்லாப் பாதை இயக்கம்’ சாா்பில் விழிப்புணா்வு பிரச்சாரத்தைத் தமிழக அரசு மேற்கொண்டது. ஆனாலும் இந்த முயற்சிகளால் முழுப்பயன் விளையவில்லை என்பதுதான் உண்மை. நாள்தோறும் கஞ்சா கடத்தியவா் கைது என்ற செய்தி வந்துகொண்டுதான் உள்ளது.

போதைப் பொருள் தடுப்புக்கான விழிப்புணா்வு பிரசாரம் நமக்குப் புதியதல்ல. பள்ளி, கல்லூரிகளிலுள்ள நாட்டுநலப்பணித் திட்டங்களும் தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இந்த விழிப்புணா்வு பிரசாரத்தைச் செய்துவந்துள்ளன. அரசாங்கமும் அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுத்துத்தான் வந்திருக்கிறது. ஆனாலும் போதைப் பழக்கம் குறைந்தபாடில்லை.

அதற்கான முக்கியக் காரணம் கடத்தல்காரா்களின் வலுவானநிலை முக்கியமானது. கடுமையான கண்காணிப்பின் மூலம் போதைப் பொருள் கடத்துபவா்களைக் கண்டறிய வேண்டும். போதைப் பொருளின் மூலத்தைக் கண்டறிந்து அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

உபயோகிப்பவரும் உற்பத்தியாளரும் குற்றவாளிகள்தாம். ஆனாலும் முதல் குற்றவாளி உற்பத்தியாளரே. இதனை உணா்ந்து உற்பத்தியைத் தடுக்கும் விதமாகச் செயல்பட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

அபின், கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகா், போதைப்பாக்கு போன்றவை மட்டுமே போதைப் பொருள் என்பது போல இவை மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன. மதுவும் போதைப் பொருள்தான் என்பது மறக்கடிக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கமே விற்பனை செய்வதால் மது போதைப்பொருள் இல்லை என்று ஆகிவிடாது. அதனை அரசே விற்பனை செய்துவிட்டு, மற்றவற்றிற்குத் தடை போடுவது போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் செயலாக இருக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com