புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

உறுப்பு தானம் என்பது நம் உறுப்புகளை மட்டும் தானம் செய்வது. உடல் தானம் ஒருவர் இறந்த பிறகு முழு உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக் கல்விக்காக தானம் செய்வதாகும்.

News image

மாதிரிப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:03 am

உறுப்பு தானம் என்பது நம் உறுப்புகளை மட்டும் தானம் செய்வது. உடல் தானம் ஒருவர் இறந்த பிறகு முழு உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக் கல்விக்காக தானம் செய்வதாகும். உறுப்புகளைக் கொடுப்பவர், "தானம் செய்பவர்' என்றும், உறுப்பைப் பெறுபவர், "பெறுநர்' என்றும் அழைக்கப்படுகிறார். உறுப்புகளின் கொள்முதல் மற்றும் விநியோகத்தை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு முறைப்படுத்துகிறது.

தனி நபரின் வயது, ஜாதி, மதம், தற்போதைய அல்லது கடந்தகால மருத்துவ நிலை ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் உறுப்பு தானமோ, உடல் தானமோ செய்யலாம். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் உடல் உறுப்பு தானத்துக்கு குடும்பத்தினரின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இந்த நாடுகள் நன்கொடையாளர் தனது வாழ்நாளில் வெளிப்படையாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், இயல்பாகவே உறுப்பு தானத்தை அனுமதிக்கின்றன. இந்நாடுகளில் உறுப்பு தான விகிதம் அண்மைக் காலங்களில் இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மனித உறுப்பு மாற்றுச் சட்டம் (1994) சிகிச்சை நோக்கங்களுக்காக மனித உறுப்புகளை அகற்றுதல், சேமித்தல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை ஒழுங்குபடுத்துதல், மனித உறுப்புகளில் வணிகப் பரிவர்த்தனைகளைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றின் உறுப்பு தானத்தில் இந்தியா உலக அளவில் 3-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உறுப்பு தானம் விகிதம் 10 லட்சம் மக்களுக்கு 0.05 - 0.08 வரை உள்ளது. ஆனால், மேற்கத்திய நாடுகளில், இது சுமார் 70 முதல் 80 சதவீமாக உள்ளது.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் கூற்றுப்படி, 2017-ஆம் ஆண்டில் 176 உறுப்பு தானம் செய்பவர்களுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியிலும், அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம் 170 நன்கொடையாளர்களுடனும், ஆந்திரம் 150 நன்கொடையாளர்களுடனும் இருந்தன. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து 8-ஆவது முறையாக (2025-இல்) முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு வழங்கும் உறுப்பு தான கெüரவிப்பு நிகழ்வில் சிறந்த மாநிலத்துக்கான விருதையும் தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தேவையான உறுப்புகள் கிடைக்காத நிலையில் 5 லட்சம் பேர் இறக்கின்றனர். 2 லட்சம் பேர் கல்லீரல் நோயாலும், 50,000 பேர் இதய நோயாலும்,1.50 லட்சம் பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாலும் இறக்கிறார்கள். ஆனால், இதில் 5,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாகி வருகிறது. ஒரு லட்சம் பேர் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்காக ("கார்னியல் டிரான்ஸ்பிளன்டேஷன்') காத்திருக்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் நன்கொடையாளர்கள் 2 சிறுநீரகங்களில் ஒன்றையும், கல்லீரலின் 2 மடல்களில் ஒன்றையும், நுரையீரல் அல்லது நுரையீரலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி அல்லது குடலின் ஒரு பகுதியையும் தானம் செய்ய முடியும். கண் தானம் செய்பவர்கள் இறப்புக்குப் பிறகு 6 மணி நேரத்துக்குள் விழிவெண் படலத்தை தானம் செய்யலாம் (கருவிழி அகற்றப்பட மாட்டாது). நாட்டில் 2014-ஆம் ஆண்டைவிட தற்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் சுமார் 2.5 மடங்கும், இதய தானம் 6.5 மடங்கும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், 2023-இல் 12,526 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும், 4,173 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுமே செய்யப்பட்டுள்ளன. 2024-இல் 15,000-க்கும் மேற்பட்டவர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

நாட்டில் அடிக்கடி நிகழும் அதிகமான சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைபவர்கள் ஏராளம். இருந்தும் அவர்களில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து வெறும் 1,128 உறுப்பு தானங்களே பதிவாகியுள்ளன. மூளைச்சாவு காரணமாக உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

பெரும்பாலான புற்றுநோய் நோயாளிகள் இறந்த பிறகு, அவர்களது குடும்பத்தினர் கண்ணின் விழிவெண் படலத்தை (கார்னியா) தானம் செய்யலாம். ஆனால், இதற்கான முன்னெடுப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

எலும்பு, தோல், இதய வால்வுகள் போன்றவற்றின் திசுக்களை ஒருவர் இறந்து 24 மணி நேரத்துக்குள் தானம் செய்யலாம். உறுப்பு தானம் செய்வதன் மூலம் நம்மால் 7 நபர்களின் உயிரையும், திசு தானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்டவர்களின் உயிரையும் நம்மால் காப்பாற்ற முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாநில அரசுகளும் உடல்தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உடல் தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்குகளின் போது அரசு மரியாதை வழங்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்களிடையே இது குறித்த

போதிய விழிப்புணர்வு இல்லாமை,

மூடநம்பிக்கை, இறப்பு நேரத் துக்கம்

போன்றவை உறுப்புத் தானத்துக்கு

இடையூறுகளாக இருக்கின்றன.

இதைச் சார்ந்து, அரசுகளின் விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. ஆந்திர அரசின் ஜீவந்தான் சடல மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உறுப்பு தானம் செய்பவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள். பள்ளிகளும், அரசும், சமூக ஊடகங்களும், அரசு சாரா சமூக அமைப்புகளும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தலாம். உறுப்பு தானத்தையும், உடல் தானத்தையும் ஊக்குவிப்பதில் அக்கறை காட்டுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.