தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்குப்பதிவு - ஜனநாயகக் கடமை!

தேர்தல் என்பது வெறும் இடதுகை ஆள்காட்டி விரலின் நகக் கண்களில் மையிட்டுக் கொண்டாடும் வைபோகம் அல்ல, இது நாட்டின் வளர்ச்சிக்கு விதை ஊன்றும் உன்னத விழா.

News image

வாக்குப்பதிவு - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:58 pm

ச. ரபீக்

தமிழகத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

தேர்தல் என்பது வெறும் இடதுகை ஆள்காட்டி விரலின் நகக் கண்களில் மையிட்டுக் கொண்டாடும் வைபோகம் அல்ல, இது நாட்டின் வளர்ச்சிக்கு விதை ஊன்றும் உன்னத விழா.

சுதந்திரம் மட்டுமல்ல வாக்குரிமையும் சும்மா கிடைத்துவிடவில்லை. இன்று பதினெட்டு வயது வந்த இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றுள்ளோம். இங்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பேதமின்றி வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை முன்பு இவ்வாறாக இல்லை. வயது வந்தோர் வாக்குரிமைக்கு முன்பு, வசதி படைத்தோருக்கு மட்டுமே வாக்குரிமை வாய்த்திருந்தது. பெண்கள் வாக்குரிமையிலிருந்து விலக்கப்பட்டவர்களாய் இருந்தனர்.

பண்டைய குடவோலை முறை என்று அறியப்பட்ட பானை வாக்கு முறையில் தேர்தல் நடைமுறை தொடங்கியிருப்பினும், தற்போது உள்ள தேர்தல் நடைமுறை முதலில் வித்திடப்பட்டது 1920-இல் நடைபெற்ற நேரடி பொதுத் தேர்தல் மூலம்தான். இதற்குக் காரணமானது மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் பரிந்துரை. அதன் அடிப்படையில் நடைபெற்ற நாட்டின் முதல் நேரடித் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் உரிமையற்றவர்களாய் இருந்தனர்.

மேலும், இந்தத் தேர்தலில் வாக்காளர் வாக்களிக்க வயது 21-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னாளில் இந்த வயது வரம்பு 18-ஆக குறைக்கப்பட்டது. 1920 பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட வாக்கு முறையே அந்தத் தேர்தல்களில் இருந்தது.

உலகின் பல ஜனநாயக நாடுகளில் வாக்களிக்கும் வயது 18-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைக்க பிரபல சட்ட அறிஞர் வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழு பரிந்துரை செய்ததது. அதன் பின்னர், இந்திய அரசமைப்பின் 61-வது சட்டத் திருத்த 1988-ன் படி வாக்களிக்கும் வயது 18 ஆனது. இந்த சட்டம் 1988-இல் நிறைவேற்றப்பட்டாலும் 1989-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதிதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்களின் தலைமையைத் தேர்தெடுக்கும் உரிமையைப் பெற்றனர்.

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு 18 வயது நிரம்பிய பிறகு வாக்குரிமையை அளித்துள்ளன. சில நாடுகள் அவற்றிலிருந்து மாறுபட்டே நிற்கின்றன. குறிப்பாக, ஆர்ஜென்டீனா, கியூபா, ஈக்வடார் போன்ற நாடுகளில் 16 வயதிலேயே வாக்குரிமை அளிக்கப்படுகிறது. கிழக்கு தைமூர், கிரீஸ், இந்தோனோசியா போன்ற நாடுகளின் குடிமக்கள் 17 வயதில் வாக்குரிமையைப் பெறுகின்றனர். தைவானில் வாக்குரிமைக்கான வயது 20. லெபனான், குவைத் மற்றும் ஓமனில் வாக்குரிமை 21 வயதில் அளிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக வயதில் வாக்குரிமையை அளிக்கும் நாடு ஐக்கிய அரசு அமீரகம்தான்; இங்கு 25 வயதை நிறைவு செய்தால்தான் வாக்குரிமை அளிக்கப்படும்.

இளம் தலைமுறையினருக்கு அளிக்கப்படும் வாக்குரிமை என்பது, அவர்கள் நலனைப் பாதுக்காக்கும் கருவியாகவும், அவர்களை அரசமைப்பின்பால் ஈர்க்கச் செய்யும் வழிமுறையாகவும் கருதி அளிக்கப்பட்டது. மேலும், குழந்தைகளின் உரிமை குறித்த ஐ.நா. சபை உடன்படிக்கையின்படி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகளே என்ற வாதத்தின் மறை வாதமாக 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வயது வந்தோர் எனக் கருதி அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைக்க பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் இளம் தலைமுறையினர் தங்களின் அரசியல் பங்களிப்புக்கான அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் எதிர்கால திட்டங்களில் அரசியல் தலைமைகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அவை குறைக்கப்பட்டுள்ளன. இதனால், வளர் இளம் தலைமுறையின் வளர்ச்சி குறித்து அரசியல் கட்சிகள் தனி கவனம் செலுத்தவும் அவர்களின் எதிர்காலம் குறித்த திட்டங்களைச் செயல்படுத்தவும் முடியும் என சட்ட முன்னோடிகள் கருதியிருக்கலாம்.

இன்று இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது, வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் உள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 முதல் 19 வயதுள்ள முதல் வாக்காளர்களின் எண்ணிக்கை 12,51,742; அதே போன்று 20 முதல் 29 வயதுள்ள இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,05,31,653; ஆக, இளம் தலைமுறையினர் மொத்த வாக்கு எண்ணிக்கை சுமார் 1.18 கோடி ஆகும். இது மொத்தமுள்ள வாக்காளர்களில் 21 சதவீத வாக்காளர்களைக் கொண்டது. அதாவது, தமிழகத்தில் ஐந்தில் ஒரு வாக்காளர் இளம் தலைமுறை வாக்காளர். அண்மையில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளில் சுமார் 73 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு முக்கியத்துவம் பெற்ற வாக்குகளாக களத்தில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் தேர்வு இளம் தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது; அதே போன்றுதான் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலும், இதில் இளம் தலைமுறையினர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தும் வாக்குகள்தான் ஜனநாயகத்தின் தேர்ச்சியை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு இளம் தலைமுறை வாக்காளருக்கும் இந்தத் தேர்தல் நாள் ஒரு தேர்வு நாள். இதில் தேர்வை (தேர்தலை) தவறவிட்டால் மறுவாய்ப்புக்கு ஐந்தாண்டு காத்திருக்க நேரிடும். எனவே, தேர்தல் நாளில் ஜனநாயகக் கடமையை நிறைவு செய்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.