‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

தேவை வழிகாட்டி!

தமிழகத்தில் தற்போது 12,000}க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) பதிவாகி இருக்கின்றன.

News image
Updated On :24 ஜூலை 2026, 5:57 am IST

- சுஹைல் அகமது

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். வங்கி வசதி இல்லாத காலத்திலேயே தமிழகத்திலிருந்து இலங்கை, பர்மா, மலேசியா என பல நாடுகளுக்கும் பணம் சுற்றி வந்தது. அந்தக் காலத்தில் "முதலீட்டு ஞானம்' என்பது படித்தவர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை.

திருப்பூரின் நெசவாளர்கள் கூட்டு முதலீடு செய்தார்கள்; சிவகாசியின் அச்சுத் தொழிலாளர்கள் சேர்ந்து நிறுவனங்கள் உருவாக்கினர்; கரூரின் கைத்தறி வியாபாரிகள் வார்த்தைக்கு மதிப்பளித்து கோடி ரூபாய் கொடுத்தார்கள்.

தமிழகத்தில் தற்போது 12,000}க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) பதிவாகி இருக்கின்றன. இளைஞர்களிடம் யோசனைகளுக்கு பஞ்சமில்லை. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து இதுவரை ஒரே ஒரு யூனிகார்ன் நிறுவனம்தான் உருவாகியிருக்கிறது. கர்நாடகத்தில் நிறைய நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன.

இந்த வேறுபாடுகளுக்கான காரணங்களை ஆராய்ந்தால் புத்தாக்க நிறுவனங்களுக்கு முதலீட்டைப் பெறுவதற்கான வழிமுறைகள் தெரிந்தவர்கள் நம்மிடம் குறைவாக இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

இந்தியாவில் செபி பதிவு பெற்ற புத்தாக்க நிறுவனங்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட சிறப்பு முதலீட்டு நிதிகள்1,200-க்கும் அதிகமாக செயல்படுகின்றன. இவற்றில் பதிவுசெய்யப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகம்.

இந்த நிதி தரமான புத்தாக்க நிறுவனங்களைத் தேடுகின்றன. முதலீட்டை வழங்க காத்திருக்கின்றன. ஆனால், தமிழகத்திலிருந்து இந்த நிதியைப் பெற முறையாக விண்ணப்பிக்கத் தெரிந்த புத்தாக்க நிறுவனங்கள் மிகவும் குறைவு.

இந்த முதலீட்டைப் பெற நிறுவனம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும்; கணக்குகள் எப்படி பராமரிக்க வேண்டும்; யாருடன் ஒப்பந்தம் செய்யலாம் - செய்யக் கூடாது; செபி விதிகளின் கீழ் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பவனவற்றை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டுதல் தமிழகத்தில் புத்தாக்க தொழில்முனைவோரிடம் குறைவாக இருப்பதை உணரலாம்.

தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு புத்தாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று உறுதியளிக்கிறது. 2036-இல் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை வைத்திருக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உரிய முதலீடு சட்டத்துக்கு உள்பட்டு, சரியான கட்டமைப்பில், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். இதற்கு செபியின் விதிகளும், நிதிக் கட்டமைப்புத் தெரிந்தவர்களின் ஆலோசனை தேவையாகும். இன்றைய புத்தாக்க நிறுவனங்களில் இத்தகைய நிபுணத்துவக் குறைபாடுகள் நிலவுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

அமெரிக்காவில் சிலிக்கன் வேலியில் தமிழ் மென்பொறியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் தொழிலதிபர்கள் உள்ளனர். மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களின் சேமிப்புப் பணம் தமிழகத்தின் புத்தாக்க நிறுவனங்களில் முதலீடாக வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வெளிநாடுவாழ் தமிழர் ஒருவர் தமிழகத்திலுள்ள புத்தாக்க முதலீடு செய்ய நினைத்தால் மட்டும் போதாது. அந்த முதலீட்டை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றின் வழிகாட்டுதல், கட்டமைப்பு, விதிமுறைகள் போன்றவற்றைவை கடைப்பிடித்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இவை எளிமையாக்கப்படுவதும், அனைவரும் அறியும் விதத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில், வேறு நாடுகளுக்கு முதலீடுகள் செல்லும் நிலை ஏற்படும். எனவே, இந்த இடைவெளியை இணைக்க ஒரு பாலம் தேவை.

திருப்பூர், ஆம்பூர் போன்ற தொழில் நகரங்களிலுள்ள தொழிலை உலக அளவில் எடுத்துச் செல்லும் நவீன தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் இல்லை. பட்டாசு மற்றும் அச்சுத் துறையில் ஆழமான அறிவைக் கொண்டவர்கள் சிவகாசியில் இருந்தும், அதை தயாரிப்பு}தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றும் வழிகாட்டி இல்லை என்றே கூறலாம்.

இந்த நகரங்கள் தொழில்முனைவோரின் பாரம்பரியத்துடன் பிறந்தவை. இவர்களுக்கு யோசனைகள் இல்லை என்பதல்ல, இவர்களுக்கு நிதி ஞானம் உள்ள ஒரு கூட்டாளி இல்லை என்பதே உண்மை.

புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவும் தமிழக அரசின் அமைப்பு வெறும் பதிவு மையமாக மட்டும் இருக்கக் கூடாது; அது ஒரு நிதித் தளமாக மாற வேண்டும். புத்தாக்க நிறுவனங்களை நவீன தொழில்நுட்ப வலைத்தளங்களுக்கு இணைப்பது, செபி கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதிய பங்கு வெளியீட்டுப் பாதையில் தயார்படுத்துவது போன்ற பணிகளை முன்னெடுத்து வழிகாட்ட வேண்டும்.

புத்தாக்க நிறுவனங்களை புரிந்து கொண்டவராகவும், மூலதனச் சந்தைகளை அறிந்தவராகவும், தமிழக தொழில் பாரம்பரியத்தை மதிப்பவராகவும், நவீன தொழில்நுட்பத்தை திறம்பட கையாளத் தெரிந்தவர்கள் புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவும் தமிழக அரசின் அமைப்பில் இடம்பெற வேண்டும். அவர்கள் புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைத்தால் புத்தாக்க நிறுவனங்கள் யூனிகார்ன்களாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.