வரம்பு மீறும் போராட்டங்கள்!
போராட்டங்கள் வரம்பு மீறல்கள் ஏதும் இன்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாது- பொதுச் சொத்துகளுக்கு சேதம் இல்லாது நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும்.


அண்மையில தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் தங்கள் மேலாடையைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் கையொப்பமாகவுள்ள இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதை உணர்த்தவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது எனவும் இளைஞர் காங்கிரஸ் தலைமை நியாயப்படுத்தி உள்ளது.
ஆனால், ஐ.நா. சபை பொதுச் செயலாளர், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்வில் நடத்தப்பட்ட இந்தப் போராட் டம், இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக கண்டனம் தெரிவித்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்கள், போராடுவதன் பின்னணியில் இருந்த நியாயங்களை பிரிட்டிஷாருக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தன. சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி துப்பாக்கி ஏந்தி இருந்தால், அதற்கு எதிராக நாங்கள் பீரங்கிகளை நிறுத்தி இருப்போம். ஆனால், அவர் அகிம்சையை போராட்ட ஆயுதமாக ஏந்தியதால், அதை எதிர்த்துப் போராட எங்களிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் போனது' என பிரிட்டிஷார் கருத்துக் கூறியதாக சொல்லப்படுவதுண்டு.
உப்பு மீது பிரிட்டிஷ் அரசு விதித்த வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, மகாத்மா காந்தி 1930-ஆம் ஆண்டு மேற்கொண்ட தண்டி யாத்திரை புகழ்பெற்ற ஒன்று. அப்போது, அவரது வயது 60. குஜராத்தில் தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 387 கி.மீ. தொலைவில் உள்ள தண்டிக்கு 24 நாள்கள் நடந்தே சென்று அங்கு உப்பு சேகரிப்புப் போராட் டம் நடத்தினார். இது பிரிட்டிஷாரை நெகிழச் செய்தது; மேலும், அவர்களைப் பின்வாங்கச் செய்தது.
காந்தியவாதியான சங்கரலிங்கனார், சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கையை வலியுறுத்தி, 1956-ஆம் ஆண்டு சுமார் 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து இறுதியில் உயிர் நீத்தார்.
தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி, 1952-ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு, 58 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு உயிர் நீத்தார்.
இவ்வாறு அந்தக் காலத்தில் சமூக நலன்நாடி கட்டுப்பாடுகளுடன் எவ்வித வரம்பு மீறல்கள் இன்றி பொதுமக்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நடத்தியோர், பல ஆண்டுகள் கடந்த பின்னரும் தியாகிகளாக மக்கள் இன்றும் நினைவுகூரத்தக்க நிலையில் உள்ளனர். எனவே, போராட்டங்கள் நடத்துவோர் தமது போராட்டங்களை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்.
அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் சாலை மறியல் போராட்டங்கள், அதை நடத்தும் போராட்டக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறதோ இல்லையோ, சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து போன்ற பொதுமக்களுக்கான வாகனங்களில் பயணிப்போருக்கும் மிகுந்த சிரமத்தை அளிக்கிறது.
சாலையில் நடத்தப்படும் நாற்று நடும் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், ஒப்பாரி வைத்து அழும் போராட் டம் எனத் தம் கோரிக்கையை நிறைவேற்றுவோர் கவனத்தை ஈர்ப்பதற்காக புதுமையான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சில சமயம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் ஊடுருவும் சமூக விரோதிகளால் உயிரிழப்புகளும், பொதுச்சொத்துகளுக்கு சேதமும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வட இந்தியாவில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு சுமார் ரூ. 1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
2022-ஆம் ஆண்டு முப்படைகளில் வீரர்களைச் சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்த 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களின்போது ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் எரிக்கப்பட் டதால் ரயில்வே துறைக்குச் சொந்தமான சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் இத்தகு வன்முறைக்கு வித்திடும் போராட்டங்கள் வேதனைக்குரியவை.
பொதுவெளியில் மட்டுமன்றி, சட்டப் பேரவைகள், நாடாளுமன்றங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் நடத்தும் உள்ளிருப்பு உள்ளிட்ட போராட்டங்களும் பெரும் விவாதப் பொருளாகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் பல நாள்கள் முடக்கப்பட்டதால், மக்களின் பல கோடி ரூபாய் வரிப் பணம் வீணானது.
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், இடைக்கால நிதிநிலை அறிக்கை, பொது மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது என்பதைக் கேலியாக வெளிப்படுத்தும் வித ்மாக சட்டப்பேரவை வளாகத்தில் 'காது குத்தும் விழா அழைப்பிதழை வெளியிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டங்களை நடத்துவது அடிப்படை உரிமை என அரசமைப்புச் சாசனம் கூறுகிறது. எனினும், போராட்டங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்படடவை என நம் அரசமைப்பு சாசனப் பிரிவு 19 2), (3) வலியுறுத்துகிறது என்பதைப் போராட்டங்களை நடத்துவோர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
போராட்டங்களே இல்லாத சுமுக சமூகம் அமைவதற்கான வாய்ப்பே இல்லாத சூழலில், போராட்டங்கள் தவிர்க்க இயலாதது. ஆனால், அத்தகைய போராட்டங்கள் வரம்பு மீறல்கள் ஏதும் இன்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாது- பொதுச் சொத்துகளுக்கு சேதம் இல்லாது நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...