குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைக்கெதிராக நேற்று வெளியான கட்டுரையின் இரண்டாம் பாகம் இது...
முதல் பாகத்துக்கான லிங்க்...
திருமதி டெய்ஸி இராணியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களில் வெளிவந்துள்ளது. ஆனால், சம்பவம் நடந்த சில தினங்களில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் டெய்ஸி. அவருடைய குடும்பம் நடந்த தவறை விட, அதை மறைப்பதற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், முதலில் செய்ய வேண்டியது தனக்கு நடந்த விஷயத்தை தைரியமாக வெளியே சொல்வதுதான். இதில் டெய்ஸி எந்த தவறுமே செய்யவில்லையே! பிறகு ஏன் தவறை மறைக்க வேண்டும்? குடும்பம், கெளரவம் போன்றவற்றை மனத்தில் கொண்டு டெய்ஸி குடும்பம் செய்த தவறு, நாசர் என்ற அந்த மனித மிருகம் கடைசிவரை தண்டிக்கப்படவேயில்லை. அவன் இன்னும் எத்தனை குழந்தைகளை சிதைத்தான் என்பது யாருக்கும் தெரியாது.
அன்று டெய்ஸிக்கு நடந்த தவறு நாளை நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு குழந்தைக்கும் நடக்கலாம். அதற்கு முன் இது போன்ற சூழலை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இது ஏதோ உங்களுக்கு தெரியாத விஷயங்களை பட்டியலிடுவதல்ல. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்கள் தான் மீண்டும் உங்கள் பார்வைக்கு.
தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக் கதையை படிப்போம்;
ஒரு தெரு நாய். அதற்கு ஒரு குட்டி. எங்கு சென்றாலும் குட்டியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். எப்படி வாழ வேண்டும், எவ்வாறு நல்லவனாக இருக்க வேண்டும்! என்றெல்லாம் அடிக்கடி குட்டிக்கு டிப்ஸ் கொடுத்தது.
‘நீ வீரனாக வாழவேண்டும். எந்தக் காலத்திலும் தீயவர்களுக்கு துணை போகக்கூடாது. நமக்கு உணவளிப்பவர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும்.’ என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே சென்றது.
ஒரு நாள், நாய் தன் குட்டியோடு சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு முரட்டு நாய் வந்தது. முரட்டு நாயைப் பார்த்தவுடன் தெரு நாய்க்கு பயம். அருகில் இருந்த புதரில் போய் மறைந்து கொண்டது. குட்டியும் பின் தொடர்ந்தது.
‘நாம் ஏன் புதருக்குள் ஒளிந்து கொள்கிறோம்? என்று கேட்டது குட்டி.
‘கொஞ்ச நேரம் பேசாம இரு', என்றது தெரு நாய்.
இருவரும் ஒளிந்திருந்த புதரை கடந்து சென்றது முரட்டு நாய். ‘அப்பாடா', என்று பெருமூச்சு விட்டது தெரு நாய். அதுவரை பொறுமையாய் இருந்த குட்டி சட்டென்று புதரைவிட்டு வெளியே வந்தது. முரட்டு நாயைப் பார்த்து ‘வள் வள்', என்று குரைத்தது. கோபமடைந்தது முரட்டு நாய். குட்டியை நோக்கி ஓடிவந்தது. பயந்து போன குட்டி, புதருக்குள் புகுந்து தெரு நாயின் பின்னால் ஒளிந்து கொண்டது.
குட்டியைத் துரத்தி வந்த முரட்டு நாய், புதரில் பதுங்கியிருந்த தெரு நாயைக் கடித்துக் குதறியது. வலி பொறுக்க முடியாமல் தெரு நாய் கத்திக் கொண்டே ஓடியது. பின் தொடர்ந்து குட்டியும் ஓடியது. நீண்ட தூரம் ஓடிய பின் சோர்ந்து போய் ஓரிடத்தில் நின்றது நாய். பின்னால் ஓடி வந்த குட்டியிடம் பேசியது.
‘அந்த முரட்டு நாயைப் பார்த்து ஏண்டா குலைச்ச?' என்று வலியோடு கேட்டது தெரு நாய்’.
‘அது கடிக்குமுன்னு எனக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செய்யனும்னு சொல்லிக்கொடுத்தியே, எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு ஒரு நாளாவது சொல்லிக் கொடுத்தியா? அப்படி சொல்லிக் கொடுத்திருந்தா இப்படி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடற நிலைமை வந்திருக்காதில்ல' என்றது குட்டி.
இதைத் தான் பழமொழியாக சொல்வார்கள். “குட்டி குலைத்து நாய் தலையிலே விழுந்தது” என்று.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போதே எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள அபாயகரமான சூழல்களையும் சொல்லிக் கொடுத்தல் அவசியம். எந்தெந்த விஷயங்கள் அவை என்பதை பார்ப்போம்.
‘என்னமோ தெரியலை சார்! என் பொண்ணு முன்ன மாதிரி இல்லை. வித்தியாசமா நடந்துக்கிறா! நிறைய மாற்றங்கள் தெரியுது', என்று பதற்றத்தோடு புலம்புகிறார் ஒரு தந்தை.
தந்தையே! உங்கள் பயம் நியாயமானதுதான். பாலியல் பலாத்காரத்திற்குள்ளான குழந்தையின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை பொறுப்பான பெற்றோரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் பார்ப்பது ஒருவேளை உங்கள் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அறிகுறிகளாகவும் இருக்கலாம். விழித்துக் கொள்ளுங்கள்.
‘பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்னென்ன மாற்றங்களை தன்னையறியாமல் வெளிப்படுத்துகிறது', என்பதை பார்ப்போம்.
இவை மட்டுமே பலாத்காரத்திற்குள்ளான குழந்தைகள் வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்று நினைக்க வேண்டாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலானவர்கள் வெளிப்படுத்தியது என்ற அடிப்படையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால், அவர்கள் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் என்பது இன்று இந்தியாவில் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. ஏதோ இன்று தான் சீரழிந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இத்தகைய தவறுகள் நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. நடிகை டெய்ஸி இராணியின் எச்சரிக்கை வாக்குமூலமே இதற்கு உதாரணம். ஆனால், தற்போது அதிக அளவில் வழக்காகவும், செய்திகளாகவும் பகிரப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இது தொடர்பான சில புள்ளிவிவரங்கள் பார்போம்:
ஃ உங்களுக்குத் தெரியுமா! இந்தியாவில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.
ஃ வருத்தமான உண்மை என்ன தெரியுமா!, நாள் ஒன்றுக்கு எட்டு பாலியல் வன்முறை வழக்கு மட்டுமே பதியப்படுகிறது.
ஃ 53% சதவீத இந்தியக் குழந்தைகள் ஏதாவது ஒருவகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இத்தகைய கசப்பான சம்பவங்களைத் தாண்டி வளர்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
ஃ 2016ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி 106958 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 36022 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு 33052 வழக்குகள், 2012ம் ஆண்டு 38172 வழக்குகள், 2013ம் ஆண்டு 58224 வழக்குகள், 2014ம் ஆண்டு 89423 வழக்குகள், 2015ம் ஆண்டு 94172 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஃ இந்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டது வெறும் 2.4 சதவீதத்தினர் மட்டுமே. இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
ஃ உலகிலேயே இந்தியாவில் தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகம் நடப்பதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியில் சொல்வதில்லை என்றும், உண்மையான பாதிப்பு மிக மிக அதிகம் என்றும் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஃ ஐந்திலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளே அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஃ எண்பது சதவீத பாலியல் வன்முறையாளர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மிகவும் வேண்டியவராகவும், அந்தக் குழந்தையின் மீது அக்கறை காட்டுபவராகவும் இருக்கிறார்கள்.
ஃ பெரும்பாலான குழந்தைகள் நடந்த தவறை வெளியில் சொல்வதில்லை.
ஃ நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறை குற்றங்களில் ஐம்பது சதவீத பங்களிப்பை மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே தருகிறது.
ஃ பாலியல் வன்முறைக்கு ஆளான குடும்பங்களில் நான்கில் ஒரு குடும்பம், அதாவது 25 சதவீத குடும்பங்கள் வன்முறையைப் பற்றி வெளியே மூச்சுவிடுவதில்லையாம்.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கிறது.
முன்பெல்லாம் வழக்கைப் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட குழந்தையோடு பெற்றோர்களும் காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டும். பல நேரங்களில் வழக்குகள் பதியப்படாது, கேட்கப்படும் கேள்விகள் குழந்தையையும், பெற்றோர்களையும் நெளியவைக்கும். அப்படியே வழக்குகள் பதியப்பட்டாலும், கோர்ட் வளாகத்தில் குழந்தையும், பெற்றோர்களும் உட்கார வேண்டிய நிலை இருந்தது. வழக்குகள் காலவரையின்றி பலவருடங்கள் நடந்தன. இதனால் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்த குடும்பங்கள் பல.
இந்த நடைமுறைச் சிக்கல்களை மனத்தில் கொண்டு 2012 ல் போக்ஸோ சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி குழந்தைகள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. குழந்தையிடம் வாக்குமூலம் பெறவோ, அல்லது விசாரணை செய்யும் பெண் காவலர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் குழந்தையிடம் பேச வேண்டும். இதைத் தவிர குழந்தைகள் நல ஆணையம் குழந்தைக்கு உதவும் வகையில், வழக்கு முடியும் வரையில் ஒருவரை நியமிக்கும். இதனால், குழந்தை பயமில்லாமல், வழக்கை எதிர்கொள்ள முடியும்.