

நட்டத்தில் இயங்கி வரும் இந்திய ரயில்வேயில் 2015 நவம்பர் முதல் 2019 மார்ச் மாதம் வரை மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்வதன் மூலம் ரயில்வே பெற்ற வருவாய் ரூ.5,366 கோடியாகும்.
இதை எதற்காக சொல்ல வருகிறோம் என்றால், ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலமாகவே இத்தனை கோடிகளை வருவாயாக ஈட்டும் இந்திய ரயில்வே எப்படி நட்டத்தில் இயங்குகிறது என்று கேட்பதற்காக அல்ல.
ஒரு ரயில்வே டிக்கெட்டை ரத்து செய்வதற்காக ஏன் கட்டணத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்துக்கு விளக்கம் கொடுக்கவே. முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்வதாக இருந்தால் கூட பரவாயில்லை, காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டை ரத்து செய்யும் போது கூடவா கட்டணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆதங்கப்படும் மக்களின் மன வலி நன்றாகவேப் புரிகிறது.
இதற்கு ரயில்வே சொல்லும் காரணம், தற்போதிருக்கும் பயணிகளின் தேவைக்கு ஏற்ற அளவுக்கு ரயில் சேவையை அதிகரிக்க முடியாத நிலையில்தான் இந்திய ரயில்வே கட்டமைப்பு உள்ளது. அதே சமயம் ஒரு ரயிலுக்கு காத்திருப்புப் பட்டியலில் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதையும் அனுமதிக்க முடியாது. எனவே காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்ற காரணத்துக்காகவே, ரத்தாகும் என்று தெரிந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
ஒருவேளை காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்யும் முறையை இந்திய ரயில்வே நீக்கிக் கொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு ரயிலுக்கும் இத்தனை குறிப்பிட்ட வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.