
திருப்பூரில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாதவருக்கு போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் விதித்திருப்பது வைரலாகியுள்ளது.
திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). பனியன் கம்பெனி உரிமையாளர். நேற்று இவர் தனது குடும்பத்துடன் பொங்கலூரில் இருந்து காரில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது திருப்பூர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. கார் பதிவெண் குறிப்பிட்டு பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. அதனால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இருந்தது.
மேலும் எஸ்.எம்.எஸ்.சில் திருப்பூர் போக்குவரத்து போலீசார் என்றும், இ-சலானில் தாராபுரம் போலீஸ் என்றும் குறிப்பிட்டிருந்தது. கார் ஓட்டும்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுக்கும் அபராதம் அதுவும், திருப்பூர் போலீசா? தாராபுரம் போலீசா? என்று குழப்பமடைந்த அவர் இது குறித்து திருப்பூர் போலீசாரிடம் விபரம் கேட்க உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, எனது கார் எண்ணை திருடி மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பொருத்திருயிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் என்று போக்குவரத்துக் காவலர்கள் கூறுகிறார்கள். ஒன்று வண்டி எண் மாறியிருக்க வேண்டும், அல்லது குற்றப்பதிவு தவறாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தவறான நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அபராதத் தொகை ரத்து செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.