ஒரு விடியோ வந்தது, அதில், ஒருவர் கையில் ஹெல்மெட் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க, யாரோ ஒருவர் அவரை தட்டி எழுப்பும் போது, உடனே அவர் எழுந்து கையில் இருந்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டு, பாக்கெட்டில் இருந்து சில காகிதங்களை எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் படுத்து உறங்கி விடுகிறார்.
வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவலர்கள் செய்யும் சோதனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இந்த விடியோ அமைந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் ஒருவருக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். ஏன் என்றால், ”இவரால் ஹெல்மெட் போட முடியாது” ஏன் தெரியுமா ?
குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல் போலீசாரிடம் பிடிபட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது தலைக்கு பொருந்தும்படியான ஹெல்மெட் கிடைக்காததாலேயே தான் அணியவில்லை என கூறி அபராதத்திலிருந்து தப்பியுள்ளார்.
போடேலி பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரியான ஜாகீர் மாமோன் என்பவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, போலீசாரிடம் விளக்கமளித்த அந்த பழ வியாபாரி, தனது தலை பெரிதாக உள்ளதால் தலை உள் நுழையும்படியான பொருத்தமான ஹெல்மெட் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அதனாலேயே தான் ஹெல்மெட் அணியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பழ வியாபாரியின் விளக்கத்தை கேட்ட போலீசார், செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர், அந்த நபரின் பிரச்சினையை புரிந்துகொண்ட போலீசார், அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பிவைத்துள்ளனர்.
வாகன ஓட்டியிடம் மற்ற ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்ததாலும், ஹெல்மெட் அணிய முடியாத சூழலில் அவர் உள்ளதாலுமே அவருக்கு இந்த அபராத விலக்கு அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.