பேருந்து ஓட்டுனரை ஹெல்மெட் போடச்சொன்னால் எப்படி...?

தலைக்கவசம் அணியாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நொய்டா போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதமாக விதித்தது கண்டு பேருந்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பேருந்து ஓட்டுனரை ஹெல்மெட் போடச்சொன்னால் எப்படி...?

தலைக்கவசம் அணியாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நொய்டா போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதமாக விதித்தது கண்டு பேருந்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நொய்டா செக்டர் 18 பகுதியைச் சேர்ந்தவர் நிராங்கர் சிங். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. பேருந்துகளைப் பள்ளிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இவரின் பேருந்து நாள்தோறும் ஏதேனும் போக்குவரத்து விதிமுறை மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்படும் என்பதால் அபராத ரசீதைப் பெற்று, அபராதம் செலுத்துவதற்கு தனியாக ஒருவரை நியமித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்து ஓட்டியதாக போக்குவரத்து போலீஸார் அளித்த அபராத ரசீதை ஊழியர் கொண்டுவந்து கொடுத்தார். அதைப் பார்த்த நிராங்கர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஏனென்றால், பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டுதான் நிராங்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக நிராங்கர் சிங் நிருபர்களிடம் கூறுகையில், "எனக்குச் சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் விதிமுறைகளை மீறி பேருந்து ஓட்டியதாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர்.

அந்த ரசீதைப் பார்த்தால், ஹெல்மெட் அணியால் பேருந்து ஓட்டியதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபோன்று காரணமின்றி அபராதம் விதிக்கின்றனர். இதற்கு முன் இதுபோன்று ஒரேநாளில் 3 அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறை மீறல் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால், அபராதத் தொகை மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் இருந்தார் என்பதற்காக ரூ.500 அபராதம் எப்படி விதிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹெல்மெட் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம் என்றனர்.

ஆனால், இந்த தவறை நான் சும்மாவிடப்போவதில்லை. போக்குவரத்துத் துறையினர் எவ்வாறு பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. எனக்குத் தீர்வு கிடைக்க நான் நீதிமன்றம் செல்லப் போகிறேன்" எனத் தெரிவித்தார்

இந்த அபராதம் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com