பெருகும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் அருகிவரும் நிலத்தடி நீர்

அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களினால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சுரங்கத்தில் பொக்லைன் மூலம் எடுக்கப்படும் சுண்ணாம்புக் கல்
சுரங்கத்தில் பொக்லைன் மூலம் எடுக்கப்படும் சுண்ணாம்புக் கல்


அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களினால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர் மாவட்டம். மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகள் டெல்டா பகுதியாகவும், அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் வறட்சி பகுதியாகவும் உள்ளன.

இம்மாவட்டம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமியாகும். கால்சியம், இரும்பு, அலுமினியம், வேதிப்பொருள், கலவையான கடல் அடிவண்டல் இன்று சுண்ணாம்புக் கல் ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிகவகை பாறையும், அதனிடையில் பாசில் என்ற தொல்லுயிரிகளும் நிறைந்த மாவட்டமாகும். அரியலூர் பகுதியில் சுமார் 60 கோடி டன் சுண்ணாம்பு படிவு, 1 கோடி ஜிப்சம் படிவு இருப்பதால் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் சிமெண்ட் ஆலைகள் உருவாகியுள்ளன.

ஒருகாலத்தில் கொத்தமல்லிக்குப் பெயர்போன மாவட்டமான அரியலூர் அது மறைந்து  தற்போது சிமென்ட் நகரமாக மாறியுள்ளது. கனிமங்கள் அதிகமாக உள்ளதால் சிமெண்ட் ஆலை நிறுவனங்கள் இங்குள்ள விவசாயிகளிடம் நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதில் கனிமங்களை எடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஹெக்டர் வரை கனிம சுரங்கங்களாக உள்ளன. கொத்தமல்லி சாகுபடியே இல்லாமல் போனது.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினாலும், சிமெண்ட் ஆலைகளாலும் இன்று அரியலூர் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் ஆலைகளால் அதில் வரும் மாசு கலந்த தூசியினால் பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கனரக வாகனங்களால் சாலை விபத்தும் அதிகம். இதை உணர்ந்த அரியலூர் மக்கள், தற்போது பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து உண்மை கண்டறியும் குழுவின் தலைவரும், தமிழக மக்கள் முன்னணி தலைவருமான அரங்க. குணசேகரன் கூறுகையில், 

"கனிம வளக் கொள்ளையில் முதல் பலியானது அரியலூர் மாவட்டம்தான். மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷெல்கேஸ் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதற்கு முன்பே 1990-களிலிருந்து மிகப் பெரிய கனிமவள கொள்ளை அடிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான்.

ஆனால் அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் வாய்மூடி இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது அரசு சிமெண்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் இங்குள்ள 11 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆலையை விரிவுபடுத்தப் போவதாகவும் சொல்கிறார்கள். இன்னும் எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பார்கள் என்று தெரியவில்லை. கோடைக்காலம் வந்தால் இங்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகளும், 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. அப்படியெனில் ஆண்டிற்கு எத்தனை லட்சம் டன் மண்ணை வெட்டுவார்கள். எவ்வளவு தண்ணீரை உறிஞ்சுவார்கள், இப்படி எடுத்தால் என்ன ஆகும் இந்த மாவட்டம்?

நாங்கள் குழுவாக ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், துளார், பெரியாகுறிச்சி என்று ஐந்து பஞ்சாயத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கள ஆய்வு செய்தோம். ராம்கோ, சங்கர், இந்தியா சிமெண்ட் போன்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் இங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலையில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தின.

அப்போது, இந்த மாவட்ட மக்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கத்தையும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளார்கள். இதில் காலாவதியான சுரங்கங்கள் மூடப்படாமலே உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலம், திருச்சி, நகரத்தை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது அரியலூரை மையப்படுத்தி வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் தனியார் சிமெண்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடு இல்லை.

ஒரு சுரங்கம் இருந்தால் அடுத்த சுரங்கம் 500 அடி தள்ளித்தான் தோண்ட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இங்கு ஐந்து அடிக்கும் பத்தடிக்கும் அருகில் சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் எவ்வளவு விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன.

எங்கு பார்த்தாலும் பள்ளங்களாகக் காட்சியளிக்கிறது இம்மாவட்டம். இந்தப் பகுதியில் நிலநடுக்கம் கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி வந்தால் அரியலூர் என்ற ஊரே இல்லாமல் போய்விடும் என்று தகவல் அளித்துள்ளனர். மக்கள் நோய்வாய்பட்டு வீதியில் சாகிறார்கள். எவ்வளவு வேதனையான விஷயம்" என்று வேதனை தெரிவித்தார்.

சுண்ணாம்புக் கல் அனைத்தையும் எடுத்த பிறகு மூடப்படாமல் உள்ள சுரங்கம்
சுண்ணாம்புக் கல் அனைத்தையும் எடுத்த பிறகு மூடப்படாமல் உள்ள சுரங்கம்

இது குறித்து அப்பகுதி இளைஞர் அருள்மொழி வர்மன் கூறியது: 

ஆலையில் இருந்து வெளிவரும் சுண்ணாம்புக் கல் கலந்த நீர், புகையால் பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஊர் முழுக்கவே 400 அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகவும் வாய்ப்புள்ளது.

கேரளத்தில் 45-க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து மண்ணை எடுக்காமல் மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல் இம்மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் கிடைக்கிறது என்பதற்காக கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளிமாநிலத்துக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்புகிறோம்.

இங்கு உற்பத்தி செய்வதை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்துங்கள். சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் மக்கள், கால்நடைகள், விவசாயத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றன. இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இவ்வளவு விதி மீறல்கள் இம்மாவட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன. வாழவே தகுதியில்லாத மாவட்டமாக மாறியுள்ளது அரியலூர். எனவே சுண்ணாம்பு சுரங்கங்களை மூட வேண்டும். ஆலைகளை விரிவுபடுத்தக் கூடாது, சிமெண்ட் ஆலைகளை மூடவேண்டும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com