ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரியமான உணவு இருக்கும். எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அந்த உணவும், ருசியும் மாறவே மாறாது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு வகைகள் என்றால் அது மக்கன் பேடா தான். மக்கன் பேடா என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நமது நாவில் எச்சில் ஊறும்.
மக்கன் பேடா பெயர்க் காரணம்?
மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்றும் பேடா என்றால் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் இனிப்பிற்கு பேடா என்று கூறப்படுகிறது. நாம் சாப்பிடுகின்ற இனிப்பு நயமாக தொண்டை குழிக்கு செல்வதால் அதனை மக்கன் பேடா என்று அழைத்துள்ளனர்.
தேவையான பொருள்கள்
சர்க்கரை கலக்காத பால்கோவா, மைதா, சர்க்கரை சமையல் எண்ணெய், நெய், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதம்பருப்பு, பிஸ்தா, அக்ரூட், பேரீச்சம் பழம், அத்திபழம், ஜாபத்ரி, ஜாதிக்காய் தர்பூசணிவிதை, வெள்ளரி விதை, சோடா மாவு, நெய்.
செய்முறை
பால்கோவா, மைதா ஆகியவை கொண்டு சம அளவு எடுத்துக்கொண்டு நெய் ஊற்றி சிறிதளவு சோடாமாவு சேர்த்து ஏலக்காயை பொடி செய்து தூவிவிட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் உருண்டையாக உருட்டி அதில் முந்திரி, திராட்சை, பாதம்பருப்பு, பேரிச்சம்பழம், பிஸ்தா, அக்ரூட், அத்திப்பழம், பேரீச்சை, ஜாதிக்காய் போன்றவைகளை துண்டாக்கிக்கொண்டு உருண்டையில் பூரணம் போல் வைத்துக்கொண்டு சூடான எண்ணெயில் போட்டு பொறிக்கவேண்டும். பின்னர் அதனை எடுத்து நன்கு காய்ச்சிய சர்க்கரை பாகில் (ஜீராவில்) போட்டு சுமார் நான்கு முதல் 5 மணி நேரம் வரை நன்றாக ஊறவைக்கவேண்டும்.
இப்போது தரமான சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார். மக்கன் பேடா வெளிப்புறம் சற்று கடினமாக இருந்தாலும் உள்புறம் மென்மையாக இருக்கும்.
இது குறித்து ஆற்காடு நகரில் 80 ஆண்டுகளாக உள்ள புதிய மிட்டாய்கடை உரிமையாளர் கே.ராஜா கூறியதாவது, திருப்பதி, லட்டுக்கு சிறப்பு பெற்றது. அதேபோல் மக்கன் பேடாவிற்கு ஆற்காடு தான் பேமஸ். இன்று வரையும் ஆற்காடு நகரில் மக்கன் பேடா தரமும், சுவையும் மாறாமல் நாங்கள் தயாரிக்கிறோம். தந்தை பெரியார், ஆற்காடு மக்கன் பேடாவை விரும்பி சாப்பிடுவாராம்.