இயேசு சிலுவையில் உதிர்த்த ஏழு வார்த்தைகள்

இயேசுவை பரியாசம் பண்ணி அவரை சவுக்கினால் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்த யூத மக்கள் அங்கு கூடி இருந்தார்கள். இவ்விதமான சூழ்நிலையில் இயேசு சிலுவையில் ஏழு வார்த்தைகளைச் சொல்லுகிறார்.
இயேசு சிலுவையில் உதிர்த்த ஏழு வார்த்தைகள்


இயேசுவை பரியாசம் பண்ணி அவரை சவுக்கினால் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்த யூத மக்கள் அங்கு கூடி இருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பாக ஓசன்னா என்று பாடிய மக்களும் இருந்தார்கள். இவ்விதமான சூழ்நிலையில் இயேசு சிலுவையில் ஏழு வார்த்தைகளைச் சொல்லுகிறார்.

இந்த வார்த்தைகள் ஏதோ தற்செயலாக சொன்ன வார்த்தைகள் அல்ல. இயேசு இந்த உலகில் செய்த ஒவ்வொன்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வேத வாக்கியங்கள் நிறைவேறேத்தக்கதாக நடந்த நிகழ்வாகும். இயேசு மரிப்பதற்கு முன்பாக சொல்லிய ஏழு வார்த்தைகளைக் குறித்து சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

முதல் வார்த்தை: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34). இயேசு கிறிஸ்து தம் கடைசிவேளை வரைக்கும் மன்னிப்பை பிரசங்கித்தார், கற்றுக்கொடுத்தார். கர்த்தருடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும், (மத்தேயு 6:12) “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று கற்றுக்கொடுத்தார். பேதுரு இயேசுவினிடத்தில் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபொழுது, (மத்தேயு 18:21-22) “அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழு தர மட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரம் மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” அளவில்லாமல் நாம் மன்னிக்க வேண்டும் என்பதை குறித்து இயேசு சொன்னார். என்னிடத்தில் மன்னிப்புகேட்டால் மன்னிப்பதல்ல. மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் மன்னிக்க வேண்டுமென்பதே ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.

இரண்டாவது வார்த்தை: “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 23:43). இயேசு கிறிஸ்துவின் வலது பக்கத்தில் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கள்ளன் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று சொன்ன வார்த்தையை கேட்டான். அவனுடைய வாழ்க்கையில் மெய்யான இயேசுவின் மன்னிக்கும் அன்பு அவனைத் தொட்டது. முதலாவது மற்ற கள்ளனைப் போலவே அவனும் இயேசு கிறிஸ்துவை நிந்தித்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மன்னிக்கும் வார்த்தையை கேட்டபொழுது, அவனுடைய கண்கள் திறக்கப்படுகிறது. அவன் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த நிலையில், ஆண்டவரிடத்தில் மனந்திரும்புகிறான். லூக்கா 23:42 இல் “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்”. “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்” என்று அவன் சொன்ன வார்த்தை அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளுகிறதைக் காண்பிக்கிறது. அந்த நேரத்தில் இயேசு அவனை நோக்கி, “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். அந்த கள்ளன் தன் பாவத்தை உணர்ந்து, தன்னை தாழ்த்தி மன்னிப்பு கேட்டபொழுது இயேசு அவனை மன்னித்தார்.

மூன்றாவது வார்த்தை: “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் (யோவான் 19:26-27) அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்”. இந்த இடத்தில் ஸ்திரீயே என்று சொல்லவது ஒரு மரியாதைக்குரிய பதமாய் இருக்கிறது. இந்த இடத்தில் மரியாளுடைய இருதயம் எவ்வளவாய் வேதனை பட்டிருக்கும் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தாம் சிலுவையில் தொங்கிகொண்டிருந்த வேளையிலும் தம்முடைய தாயை பார்த்துக்கொள்ளும்படியான பொறுப்பை தம்முடைய சீஷனான யோவானிடத்தில் ஒப்புவிக்கிறார். இதை நாம் பார்க்கும்பொழுது அவர் இந்த உலகத்தில் மனிதர்களை எவ்வளவு அதிகமாய் நேசித்தார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. முக்கியமாக தன்னை பாதுகாத்து பராமரித்து வந்த தன்னுடைய தாயை, யோவானிடத்தில் ஒப்புவித்து தம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவதை நாம் பார்க்கிறோம்.

நான்காவது வார்த்தை: “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” (மத்தேயு 27:45) “ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்”. இயேசு இந்த வார்த்தையை சொல்வதற்கு முன்பாக மூன்றுமணி நேரம் பூமி எங்கும் அந்தகாரம் உண்டாயிருந்தது என்று பார்க்கிறோம். அந்த மூன்று மணி நேரமும் இயேசு கிறிஸ்து தம்முடைய மக்களின் பாவங்களையும், அதினால் வரும் ஆக்கினைகளையும் சுமந்து தீர்த்தார். இயேசு ஒருநாளும் பிதாவினிடத்தில் இருந்து பிரிந்தது கிடையாது. பிதாவும் நானும் ஒன்று என்று சொன்னார். இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக பிதாவினிடத்தில், இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார். அதனுடைய மெய்யான அர்த்தம் என்னவென்றால் அவர் பிதாவோடு கொண்டிருந்த ஐக்கியத்தை இழந்து போக விரும்பவில்லை என்பதாகும். சீஷர்கள் அவரை விட்டு ஓடிப்போனார்கள். இயேசு கிறிஸ்து தனிமையை உணர்ந்தவராய் இந்த வார்த்தையை பேசினார்.

மரணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு பயங்கரமான வேளை. இந்த உலகத்தில் தேவனற்ற நிலையில் ஒரு மனிதன் மரிக்கும்பொழுது அவனுடைய நிலை ஏறக்குறைய இவ்விதமாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்துவின் பிள்ளையாக இருப்பவர்கள் தங்கள் மரண நேரத்திலும் எந்த பயமும் இல்லாமல் இருப்பதற்காக இயேசு கிறிஸ்து அவர்களுக்காக சிலுவையில் மரணத்தை வென்றார். (1 தீமோத்தேயு 2:5-6) “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது”. அவர் தம்மை முழு மனிதனாக தம்முடைய மக்களின் பாவங்களுக்காக இந்த மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

ஐந்தாவது வார்த்தை: “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்”. இயேசு கிறிஸ்து தம்முடைய சரீரத்தில் முற்றிலும் பெலவீனப்பட்டவராய் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார். (யோவான் 4: 13-14) “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”. ஜீவத் தண்ணீரை கொடுக்கிற இயேசுகிறிஸ்து அந்த வேளையில் தன் சரீரம் முற்றிலும் பெலன் இழந்தவராய் தாகமாய் இருக்கிறேன் என்று சொன்னார். மேலும் இதன் மூலமாய் நாம் கற்றுகொள்ளும் பாடம் என்னவென்றால் நம்மைப்போல முழுமையான மனிதனாகவே சிலுவையில் தம்முடைய மக்களுக்காக மரித்தார் என்பதைக் காட்டுகிறது.

ஆறாவது வார்த்தை: “முடிந்தது” (யோவான் 19:30) “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்”. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததின் நோக்கம் பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதை வேதத்தின் மூலம் நாம் அறிவோம். இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார். ஒரு பாவி இரட்சிக்கப்பட தேவையான எல்லாவற்றையுமே இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார். ஆகவேதான் அவர் முடிந்தது என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். இனி மனிதனுடைய பாவங்களுக்காக பலியிட வேறொரு பலி தேவையில்லை, செய்யவேண்டியது ஒன்றுமில்லை. 

ஏழாவது வார்த்தை: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46). 

“இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.’ பிதாவோடு கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் “என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்” என்றார். ஆனால் இப்போது மறுபடியும் பிதாவோடு கொண்டிருந்த தொடர்பு இணைக்கப்படுகிறது. பிதாவின் அருமையான கரங்களில் அவர் தம்மை ஒப்புவிக்கிறார். சங்கீதம் 31: 5 இல் “உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்”. பிதாவோடு இயேசு கிறிஸ்து கொண்டிருந்த தொடர்பை குறித்து இயேசு சொல்லும்போது யோவான் 10:30 இல் ‘நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இயேசு கிறிஸ்து மனிதனின் இரட்சிப்பிற்காக மகத்துவமான கிரயத்தை செலுத்தி வெற்றியுள்ளவராக மரணத்தை ஜெயித்தவராக பாவத்தை மேற்கொண்டவராக பிதாவினிடத்தில் சென்றார். இந்த நாளில் அவரது தியாகத்தை நினைவு கூற நாம் கடமைப் பட்டுள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com