எரியும் இலங்கை: பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன தீர்வு? நேரடி ரிப்போர்ட்- 6

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வகட்சி கூட்டம் கடந்த மார்ச்-23 அன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் அதிபர் மாளிகையில் நடந்தது.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வகட்சி கூட்டம் கடந்த மார்ச்-23 அன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் அதிபர் மாளிகையில் நடந்தது.

இலங்கையில் தற்போது ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவிங்’  - வாழ்க்கச் செலவு - 36489.29 ரூபாய் என்கிறது ‘நம்பியோ (NUMBEO)’ இணைய தளம்.

“இது சரியான கணக்கீடுதான்” என்கிறார் இலங்கைத் திரைப்பட இயக்குநர் ஹசீன். மேலும், “பாலைவிட பால் மாவு பாவிப்பதுதான் இங்கே வழக்கம். ஒரு மாவு பாக்கெட் 300 ரூபாயாக உள்ளது. இதனால், தேநீர்க் கடைகளில் ஒரு டீ 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனாலும், லாபம் இல்லை எனப் பல தேநீர்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. 90 சதவிகிதம் அளவுக்கு ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன” என்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கஜமுகன், “இதுதான் இலங்கை முழுவதும் உள்ள நிலை. சாதாரண மக்கள், பாலுக்கும் பாணுக்கும் (ரொட்டிக்கும்) அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும் வரிசையில் காத்திருக்கிறார்கள். தமது அன்றாட வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் நெருக்கடியால் மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாத நிலை, விவசாயிகள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாத நிலை, மின்சாரம் இன்மையால் தமது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமை, இதனால் பயிர்கள் அழிவடையும் நிலை என பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் மக்கள்.

பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பேருந்துப் போக்குவரத்து. பொதுப் போக்குவரத்தை நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்தும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இது மிகப்பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது" என்கிறார்.

விலைவாசி தற்போது எப்படியிருக்கிறது?

எரிவாயு சிலிண்டர் 1 - 4,390 ரூபாய்

தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் - 750 ரூபாய்

பெட்ரோல் ஒரு லிட்டர் - 283 ரூபாய்

டீசல் ஒரு லிட்டர் - 213 ரூபாய்

அங்கர் பால்மா ஒரு கிலோ - 1960 ரூபாய்

கோதுமை மாவு ஒரு கிலோ - 180 ரூபாய்

சர்க்கரை ஒரு கிலோ - 185 ரூபாய்

தக்காளி ஒரு கிலோ - 330 ரூபாய்

உருளைக்கிழங்கு ஒரு கிலோ - 220 ரூபாய்

வெங்காயம் ஒரு கிலோ - 220 ரூபாய்

கேரட் ஒரு கிலோ - 290 ரூபாய்

முருங்கைக்காய் ஒரு கிலோ - 720 ரூபாய்

பீன்ஸ் ஒரு கிலோ - 240 ரூபாய்

தேங்காய் 1 - 100 ரூபாய்

பூண்டு ஒரு கிலோ - 450 ரூபாய்

புடலங்காய் ஒரு கிலோ - 180 ரூபாய்

பூசணிக்காயை ஒரு கிலோ - 220 ரூபாய்

மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் - 89 ரூபாய்

பருப்பு ஒரு கிலோ - 350 ரூபாய்

கோழி இறைச்சி ஒரு கிலோ - 900 ரூபாய்.

பொருளாதார ரீதியிலான பின்னடைவிற்கு எந்த தீர்வும் இல்லாமல் ஒரே தீர்வு இதுதான் என ஓடி ஓடி உலக நாடுகளிடம் கையேந்திக் கடன் வாங்கி ஒவ்வொரு தனி இலங்கையரையும் கடனாளியாக்கிக் கொண்டிருக்கிறது அரசு.

பஞ்சம், பசி, பட்டினி என பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்துதான் அரசின் மீதான எதிர்ப்பு உணர்வு அதிகளவில் வெளிப்படுவதால் அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் எழுபது வயதான இரண்டு பெரியவர்கள் எண்ணெய்க்காக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றதால் உயிரிழந்ததைப் போல பல துயர நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வகட்சிக் கூட்டம் கடந்த மார்ச் 23 அன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் அதிபர் மாளிகையில் நடந்தது.

அந்த கூட்டத்தில், குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதம் நடந்தாக தகவல் வெளியானது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸவிதாரண மற்றும்  வண. அத்துரலியே ரத்தின தேரர் ஆகியோர் 11 தோழமைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது. கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.

மேலும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவார்கள் என்பதை கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

முக்கியமாக, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.

இறுதியில், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் மீளாய்வு செய்வதற்குப் பொறிமுறை (mechanism) ஒன்றை உருவாக்கிப் பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் குழு ஒன்றை அமைக்க முடியும் என்பதையும் அதிபர் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபட்ச, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

                                                                                                                       - (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com