புதிய கட்டடத்தில் மகாத்மா காந்தி, சாணக்கியர், சர்தார் வல்லபபாய் பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பித்தளைச் சிற்பங்களும், கோனார்க் சூரிய கோயிலின் தேர் சக்கர மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் இசை, நடனப் பாரம்பரியம், கட்டடக் கலைப் பாரம்பரியம், கைவினைப் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள், சுவர் அலங்கார பலகைகள், சிற்பங்கள், உலோக சுவர் சிற்பங்கள் என சுமார் 5,000 கலை வேலைப்பாடுகளை இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் பார்வைக்கு விருந்துபடைக்கின்றன. கடமை தவறாமல் நடப்பதற்கும், சேவையின் அடையாளமாகவும் திகழ்ந்த மாபெரும் சோழப் பேரரசின் செங்கோல், இந்தப் புதிய கட்டடத்தின் முக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
மூதறிஞர் ராஜாஜி, ஆதீனம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தச் செங்கோல் அதிகாரம் மாற்றத்தின் புனித சின்னமாக மாறியது. துறவிகள் ஆசீர்வாதத்துடன் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் பணிகளை மேற்கொள்வதில் நாடாளுமன்றவாதிகளுக்கு இருந்த சிரமங்களை கருத்தில்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் தற்போதைய புதிய கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களும் திறன்மிக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 150 ஆண்டுகள் வரை இந்த கட்டுமானம் பலமாக இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. உயர்தர சிமெண்ட் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சீதோஷ்ண நிலையைப் பராமரிக்கும் வகையில் வெளிப்புறப் பகுதியில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.