இதை அனுமதிக்கக் கூடாது!

கோயம்பேடு மார்க்கெட்டில் 15 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளியை ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு (பல்க் கன்ஸ்யூமர்) ஒரு கூடை ரூ.100 க்கு கொடுப்பார்கள். அதே கடையில் தனிநபர் வாங்கினால், ஒரு கிலோ தக்காளியை ரூ.15க்கு விற்பார்கள்.
Updated on
2 min read

கோயம்பேடு மார்க்கெட்டில் 15 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளியை ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு (பல்க் கன்ஸ்யூமர்) ஒரு கூடை ரூ.100 க்கு கொடுப்பார்கள். அதே கடையில் தனிநபர் வாங்கினால், ஒரு கிலோ தக்காளியை ரூ.15க்கு விற்பார்கள்.

இதுதான் உலக நடைமுறை. ஆனால், இந்திய எண்ணெய் கொள்முதல் நிறுவனங்களுக்கு எல்லாமே தலைகீழ். ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்வோருக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.11 கூடுதலாக்கினார்கள். பொதுச்சந்தையில் வெறும் 55 காசு உயர்த்தி இருக்கிறார்கள். இது என்ன வியாபாரமோ தெரியவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீசல் விலை குறித்த விவாதத்தின்போது, எஸ்யுவி (சூப்பர் யுடிலிட்டி வெகிக்கிள்) கார்களுக்கும், இன்ன பிற தனியார் வாகனங்களுக்கும், வணிக வளாகங்களில், குறிப்பாக மால்களில் ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசலுக்கும் சந்தை விலையை நிர்ணயிக்கவும், மற்றவர்களுக்கு அரசின் மானிய விலையில் டீசலை விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த ஆறு மாதத்தில் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்ற நிலைமை வந்தபோது, பொதுச் சந்தையில் டீசல் விலையை லிட்டருக்கு 55 காசு உயர்த்த முடிவு செய்த எண்ணெய் நிறுவனங்கள், ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்வோருக்கு டீசல் விலையை ரூ.11 கூடுதலாக்கி இருக்கின்றன.

ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்யும் 90 விழுக்காடு நிறுவனங்கள் அரசுத் துறை சார்ந்தவை. ரயில்வே, ராணுவம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், சிமென்ட் ஆலைகள், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருளைக்கொண்டு மின்உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகியன; பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களே.

இவற்றிலும்கூட நுட்பமாகப் பார்த்தால், ரயில்வே, போக்குவரத்து இரண்டும் பொதுமக்கள் பயன்படுத்துவன. இவைகளுக்கு வழங்கப்படும் டீசல் விலையை அதிகரிப்பதன் மூலம், ரயில் மற்றும் போக்குவரத்துப் பயணக் கட்டணத்தை உயர்த்த நெருக்குதல் தரப்படுகிறது. அல்லது, பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் அந்த இழப்பை மத்திய, மாநில அரசுகள் வேறு வருவாய்களின் மூலம் ஈடுகட்ட நிர்பந்திக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த டீசல் பயன்படுத்துவோர் (பல்க் கன்ஸ்யூமர்) டீசல் பயன்பாட்டில் 18% மட்டுமே. இவர்களுக்கு மட்டும் கூடுதலாக ரூ.11 விலை வைத்து, நஷ்டத்தை சரிகட்ட முடியாது என்பது ஒருபுறம் இருக்க, எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இதனால் ரயில், பேருந்து பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதைத் தவிர, வேறு வழியே கிடையாது. தமிழக போக்குவரத்துக் கழகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இந்த விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.750 கோடி இழப்பு அதிகரிக்கும்.

பொதுத்துறை வாகனங்களில் பயணக் கட்டணம் குறைவாக இருக்கும்போதுதான், மக்கள் அதிக அளவில் அதைப் பயன்படுத்த முனைவார்கள். டீசலில் அல்லது பெட்ரோலில் இயங்கும் கார் வைத்திருப்போரும்கூட பொதுத்துறை வாகனங்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தால், அவர்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதே உலக நடைமுறை.

தனிநபர் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளின் எண்ணிக்கையும் பெட்ரோல், டீசல் பயன்பாடும் அதிகரிக்கிறது. பொதுத்துறை வாகனங்களை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும்போது இவை குறைகின்றது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட எந்தவொரு அரசும், டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கும்போது, ஒட்டுமொத்தக் கொள்முதலுக்கு விலை குறைவாகவும், 80% வீதமாக இருக்கும் சில்லறை நுகர்வோர்களுக்கு விலை கூடுதலாகவும் நிர்ணயிக்கும். ஆனால், இங்கே தலைகீழாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு வேடிக்கை, தனியார் வாகனங்கள், வணிக வளாகங்களில், குறிப்பாக மால்களில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றுக்கு டீசல் விலை லிட்டருக்கு வெறும் 55 காசுதான் அதிகரித்திருக்கிறார்கள். இதுதான் இவர்களது "ஆம் ஆத்மி' கண்ணோட்டம், பலே!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் விலையும் தனியார் பேருந்துகளுக்கான டீசல் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்றால், பிறகு எப்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்க முடியும்? போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்குங்கள் என்பதுதான் இதன் மூலம் மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூறும் செய்தியா?

தனியார் பெட்ரோல் பங்க்கில் வரிசைகட்டி நிற்கின்றன அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் - விலை குறைவாக டீசல் பிடிக்கத்தான்! இதனால் காலதாமதம், தொழிலாளர் வேலைநாள் வீணாதல் ஆகியன மட்டுமே மிச்சம். இது தவிர, பிடித்த டீசலுக்கும் வாங்கிய ரசீதுக்கும் இடைவெளிகள் வேறு!

டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மாநில முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே! அவரைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவரும் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நியாயமாக கோபத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்தான். எதற்கெல்லாமோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கும் இவர்கள், இதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

இந்தப் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல. தமிழக அரசு அல்லது போக்குவரத்துக்கழகம் என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவின் சாமானிய மக்களின் பிரச்னை. இதற்காக அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் களத்தில் இறங்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், பொதுப் போக்குவரத்துதான் தலைவிதி என்றாகிவிட்ட பொதுமக்களும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com