கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரம் இந்த அளவுக்கு சர்ச்சையை எழுப்புகிறது என்பதே, நரேந்திர மோடி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள், கோவாவில் அன்று கூடிய செயற்குழுவில் வற்புறுத்தியபோது, நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருந்தவர் அத்வானி. இன்றைய நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவரும், அவரை குஜராத் முதல்வராக்கியதிலிருந்து கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கக் காரணமாக இருந்தவரும் அத்வானிதான். இப்போது, அதே அத்வானி நரேந்திர மோடி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாததுதான் வியப்பாக இருக்கிறது.
2004, 2009 இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அத்வானியை முன்னிறுத்திப் பிரசாரம் செய்தும், பாரதிய ஜனதாவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது ஊரறிந்த உண்மை. 85 வயதான அத்வானியால், பழைய உற்சாகத்துடன் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தலைமை தாங்கி நடத்த முடியாது என்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டிய உண்மை. இந்த நிலையில் பிரசாரக் குழுத் தலைமைப் பொறுப்பை அத்வானியே நரேந்திர மோடிக்கு அளித்திருந்தால், அவருக்கும் மரியாதையாக இருந்திருக்கும், கட்சியின் மானமும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
நரேந்திர மோடியை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நரேந்திர மோடி ஒரு மத வெறியர் போன்ற கருத்துகளும், குற்றச்சாட்டுகளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு வெளியே உள்ளவர்களும், அதன் எதிர்ப்பாளர்களும் எழுப்பும் பிரச்னைகள். குஜராத் கலவரத்துடன் மோடி தொடர்புபடுத்தப்படுவது போலவே, அயோத்தி பாபர் மசூதி இடிப்புடன் தொடர்புபடுத்தப்படுபவர் அத்வானி. இந்த இருவருக்கும் இடையில் சிறுபான்மையினர் பெரிய வித்தியாசம் காணப் போவதில்லை.
நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதால், சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸýக்குச் சாதகமாகத் திரும்பக்கூடும் என்று வேண்டுமானால் கருத இடமிருக்கிறதே தவிர பாரதிய ஜனதாக் கட்சிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்கிற வாதத்தில் அர்த்தமில்லை. மோடி முன்னிறுத்தப்பட்டாலும், படாவிட்டாலும் சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்காது என்பதில் சந்தேகம் வேண்டாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு முறைகேடுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்கு, "நரேந்திர மோடி' என்று பூச்சாண்டி காட்டி தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் திசைதிருப்பக்கூடும். நரேந்திர மோடியால் காங்கிரஸýக்குக் கிடைக்கப் போகும் பயன் அதுவாக மட்டுமேதான் இருக்கும்.
கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 170 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தனியாகப் போட்டியிடும் பலமோ, கூட்டணி வாய்ப்போ இல்லாத நிலையில் நரேந்திர மோடி பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதில் என்ன லாபம் ஏற்பட்டுவிட முடியும் என்று கேட்கலாம். ஏனைய 370 தொகுதிகளில், குறைந்தது 250 தொகுதிகளில் நரேந்திர மோடியின் தாக்கம் பாரதிய ஜனதாவின் பலத்தைக் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் பரவலாக பாஜகவின் பலத்தை நரேந்திர மோடியின் பிரசாரம் வலுவடையச் செய்யும்.
35 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்கள் இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதியினர் இருக்கிறார்கள். இவர்கள் ஊழல், முறைகேடுகள், காங்கிரஸின் வம்சாவளி அரசியல், துணிவான முடிவெடுக்காத தலைமை ஆகியவற்றால் சலிப்படைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நரேந்திர மோடி புதியதொரு நம்பிக்கையாகத் தெரிகிறார். அவர்களது நம்பிக்கையை எந்த அளவுக்கு நரேந்திர மோடியால் பூர்த்தி செய்ய முடியும் என்பது வேறு கேள்வி. ஆனால், அப்படி ஒரு நம்பிக்கையை ராகுல் காந்தியோ, வேறு யாராவதோ தராத நிலையில் மோடி நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார். அதை பாஜக பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது.
நரேந்திர மோடி கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை. நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில்தான் அவரது செல்வாக்கு. 2009 தேர்தலில் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க நகர்ப்புற வாக்குகள்தான் காரணமாக இருந்தன. காங்கிரஸ் கடந்த முறை பெற்ற வெற்றியை இந்த முறை நரேந்திர மோடி மூலம் அடையத் திட்டமிடுகிறது பாஜக, அவ்வளவே!
நரேந்திர மோடியின் எழுச்சிக்கும், 1969-இல் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று தன்னைப் பிரதமராக்கிய காமராஜ் உள்ளிட்ட தலைவர்களை ஓரங்கட்டி புதிய எழுச்சியைக் காங்கிரஸில் ஏற்படுத்தினார் இந்திரா காந்தி. இந்திரா காந்தியின் எழுச்சியால் இந்தியாவுக்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா என்பதைப்போல, நரேந்திர மோடியின் எழுச்சியால் பாஜகவும் இந்தியாவும் நன்மையடையுமா என்பது விவாதப் பொருளாகத்தான் இருக்கும். வருங்காலம்தான் விடையளிக்க வேண்டும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. இப்போது அகாலி தளம், சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய மூன்றே மூன்று கட்சிகள்தான் உறுப்பினர்களாக உள்ளன. ஒருவேளை பாஜக அடுத்த மக்களவைத் தேர்தலில் அதிகபட்சம் 200 இடங்களை அல்லது குறைந்தபட்சம் 140 இடங்களைப் பிடிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். 270 இடங்களுடன் பெரும்பான்மை பலம் கிடைக்க, நரேந்திர மோடி உதவமாட்டார். அவரை பெரும்பாலான கட்சிகள் பிரதமராக ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அத்வானி உதவக்கூடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், நரேந்திர மோடியேகூட அத்வானியை வழிமொழிவார் என்று நம்பலாம்.
அவசரப்பட்டுவிட்டாரே அத்வானி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.