நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து அவசரச் சட்டத்தில் அவமானப்பட்டது போதாதென்று, இப்போது ஆதார் அட்டை விவாகரத்திலும் நீதிமன்றத்துக்கு எதிராகவே செயல்படுகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும் அதே நாளில், ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிப்பதெனவும், இதற்கான மசோதாவை குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வமான அதிகாரம் அளிப்பதன் மூலம், அரசு மானியம், அரசு சலுகைகள் எதுவும் ஆதார் அட்டை இல்லாமல் சாத்தியமில்லை என்பதை அரசு உறுதிப்படுத்துகிறது.
வேடிக்கை என்னவென்றால், ஆதார் அட்டைத் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடையாது. 2010-இல் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிராகரிக்கப்பட்ட திட்டம் இது.
தற்போது அரசு ஓய்வூதியம் பெறுவோரும் பி.எப். ஓய்வூதியம் பெறுவோரும் தங்கள் வங்கிக் கணக்கின் மூலம்தான் பணம் பெற்று வருகின்றனர். இதில் எந்தவிதமான நடைமுறைச் சிக்கலும் இல்லை. வருமான வரித் துறையிடம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து, பிடித்தம் செய்த வரியைத் திரும்பக் கோருபவர்களுக்கு, அவர்களுக்கான தொகை, வங்கி மூலமாக நேரடியாகச் செலுத்தப்படும் நடைமுறை தொடங்கியாகிவிட்டது. நிலைமை இதுவாக இருக்க, மானியம், சமூக நலப் பயன்கள் பெற அனைவருக்கும் ஆதார் அட்டையை இந்திய அரசு ஏன் வலியுறுத்த வேண்டும்?
எல்லாத் தொகையையும் நேரடியாக தாங்கள் கொடுப்பதாக மக்களை உணர வைப்பதற்கு காங்கிரஸ் செய்யும் முயற்சிதான் இது. வெள்ளச் சேதம், வறட்சி என்கிற பெயர்களில் அரசுப் பணத்தை நிவாரணமாக வழங்கி வாக்குகளைப் பெறும் உத்தி போன்றதுதான் இதுவும்.
அடுத்த மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்குள், குறைந்தபட்சம் சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் அனைவருக்கும் மானியத்தை ரொக்கப் பணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் கொடுத்துவிட வேண்டும் என்ற உந்துதலும், எப்படியும் அதை ஒரு சாதனையாகப் பட்டியலிட வேண்டும் என்ற எண்ணமும்தான் ஆதார் விவகாரத்தில் இத்தனை அவசரம் காட்டுவதற்கு காரணமாக இருக்க முடியும். இதுதான் அரசின் நோக்கம் என்றால், தற்போது சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றிருக்கும் நபர்களுக்கு, அந்தந்த சமையல் முகவர்கள் மூலமாகவே அடையாள அட்டை படம் எடுத்து அந்த மானியத்தை வழங்கி விடலாமே, ஆதார் அட்டை எதற்கு?
சென்ற ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டில் ஆதார் புகைப்படம் எடுத்தவர்கள் எண்ணிக்கை 66.8 லட்சம் பேர் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைத்துவிடவில்லை. இந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயம் என்று சொல்வதன் மூலம் தேவையற்ற மனக்கலக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எந்தப் பயனும் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை.
கைரேகை, கருவிழி அடையாளங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான அடையாள அட்டை (பயோ மெட்ரிக் அட்டை) அனைவருக்கும் வழங்கப்படுவதில், இன்னும் சில பிரச்னைகளும் உள்ளன. அனைத்து குடிமக்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அரசு சேகரித்து வைத்துக் கொள்வது என்பது, குடிமக்களைக் கண்காணிக்க அரசால் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்? குடிமகனின் தனிமனித சுதந்திரத்தை அது பறிப்பதாக ஆகாதா? அதில் என்ன தவறு என்று கேட்கும் நடுத்தரவர்க்க, பட்டணத்து, படித்த வர்க்கத்தினர், அவர்கள் கண்காணிக்கப்படும் நிலைமை வரும்போதுதான் அதன் கடுமையை உணர்வார்கள். நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வுடன் உலவும்போதுதான் அதன் தாக்கம் புரியும்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஊடுருவி இருக்கும் லட்சக்கணக்கான (கோடிக்கணக்கான?) பாகிஸ்தான், வங்கதேச குடிமக்கள், ஆதார் அட்டையைப் பெற்று, குடியுரிமை பெற இது வழிவகுக்கப் போகிறது. தேசியப் பாதுகாப்புக்கு "ஆதார்' அட்டை உதவும் என்பதைவிட இதுவே ஆபத்தாக முடியும் வாய்ப்புதான் அதிகமாகவே இருக்கிறது.
எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக, தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த அட்டைகள் வழங்கப்படும்போது, தனிமனிதர்களின் அத்தனை விவரங்களும் அந்தத் தனியார் நிறுவனத்திடமும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆதார் அட்டை கட்டாயம் என்பது முட்டாள்தனம். ஆதார் அட்டை என்பதும், நேரடி மானியப் பட்டுவாடா என்பதும் அரசியல்தானே தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை அல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

