ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு, அந்தக் கட்சிக்கு அமோக ஆதரவை அளித்த தில்லி வாழ் மக்களுக்கும், அந்தக் கட்சியின் வளர்ச்சியை வியப்புடன் அண்ணாந்து பார்த்த இந்தியத் திருநாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.
தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வென்றதும், பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய அளவிலான செல்வாக்கு அலையையும் மீறி பா.ஜ.க.வைப் படுதோல்வி அடையச் செய்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆனால், அந்த வரலாறு காணாத வெற்றிதான், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அணுகுமுறையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி இந்திய அரசியலுக்குப் புதியதொரு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது. அதுவரை அரசியல் கட்சிகள், ஓர் அரசியல் தலைமையின் வழிகாட்டுதலின்படி நடந்துவந்த நிலைமையை மாற்றி, மக்களின் வழிகாட்டுதலின்படி அரசியல் தலைமை நடப்பது என்கிற புதிய பாணி அரசியலை ஆம் ஆத்மி கட்சிதான் அறிமுகப்படுத்தியது.
"மொஹல்லா சபா' என்கிற அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும், அவர்கள் எதிர்பார்க்கும் தேவைகளையும் நிறைவேற்றித் தருவது என்பதுதான் ஆம் ஆத்மி ஏற்படுத்த முற்பட்ட அரசியல் கலாசாரம்.
இன்னொரு வகையாக இதைக் கூற முற்பட்டால், மக்களைத் தலைமை வழிநடத்துவதற்குப் பதிலாக மக்களால் வழிநடத்தப்படும் தலைமை என்கிற, புதிய விளக்கத்தை மக்களாட்சிக்குத் தர முற்பட்டது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியின் அதிகரித்த செல்வாக்குக்கும், அமோக வெற்றிக்கும் இந்த அணுகுமுறைதான் காரணம்.
அதுமட்டுமல்ல, உள்கட்சி ஜனநாயகம் என்பதை உண்மையாகவே கடைப்பிடிக்க முற்பட்டது ஆம் ஆத்மி கட்சி. அரவிந்த் கேஜரிவாலைக் கட்சி முன்னிறுத்தியதே தவிர, ஆம் ஆத்மி கட்சியின் மேல்மட்ட, கீழ்மட்ட தலைவர்கள் அனைவருமே அரவிந்த் கேஜரிவாலை வழிநடத்தினார்கள் என்பதுதான் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்பு நடைபெறுவது வரையிலான நிலைமை. ஆனால், தேர்தல் வெற்றி, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்குப் பல புதிய நிர்பந்தங்களையும் சவால்களையும் ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் பதவி விலகலுடன் முடிவுக்கு வந்தது முதல், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் போன்ற ஒரு சிலரைத் தவிர, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஏனைய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை ஆட்சி, அதிகார போதை தன் வயப்படுத்தியது என்பதுதான் அடிப்படைப் பிரச்னை. அதன் வெளிப்பாடுதான் அரவிந்த் கேஜரிவாலின் கலைக்கப்படாமல் இருந்த முந்தைய சட்டப்பேரவையின் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவை ரகசியமாகப் பெற முயன்ற சம்பவம். காங்கிரஸ் கட்சி அரவிந்த் கேஜரிவாலின் ரகசியப் பேரத்தை அம்பலப்படுத்த முயன்றதுடன் அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்த முதல் பிரச்னை, எண்ணிக்கை. 67 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவை கட்சியில் ஒரு சிலரை மட்டுமே திருப்திப்படுத்தினால், ஏனைய உறுப்பினர்கள் பொறுமை இழந்து போர்க்கொடி தூக்கக்கூடும் என்கிற அச்சம் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுந்தது. வி.ஐ.பி. கலாசாரம், சிவப்பு விளக்கு வாகனங்கள் ஆகியவை கூடாது என்று அதுவரை கூறிவந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 21 உறுப்பினர்களை நாடாளுமன்றச் செயலாளர்களாகத் துணை அமைச்சர் அந்தஸ்துடன் நியமித்தது அதனால்தான்.
எந்த அரவிந்த் கேஜரிவால் அண்ணா ஹசாரே தலைமையில் "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் மூலம் "லோக்பால்' அமைப்பு வேண்டும் என்று போராடினாரோ, அதே கேஜரிவால் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் உள்கட்சிப் பிரச்னைகளை விசாரிக்க ஏற்படுத்திய லோக்பால் அமைப்பிலிருந்து முன்னாள் கடற்படைத் தளபதி எல். ராமதாஸைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டிருக்கிறார். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியில் பிளவு ஏற்படுத்தி கேஜரிவால் மீண்டும் ஆட்சி அமைக்க முயன்ற ரகசிய ஒலிநாடாவைக் கட்சி லோக்பாலான தளபதி எல். ராமதாஸ் விசாரித்து வந்தார்.
இதுவரை வெறும் போராளியாக மட்டுமே இருந்த அவர், இப்போதுதான், அரசியலைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார் என்பதைத்தான் இவையெல்லாம் காட்டுகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பார்வை மாறிவிட்டிருக்கிறது. மக்களால் வழிநடத்தப்படும் கட்சி என்பதுபோய், ஏனைய கட்சிகளைப் போலத் தலைவரால் வழிநடத்தப்படும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சியும் மாறிக் கொண்டிருக்கிறது. முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை முன்னிறுத்திப் பெற்ற வெற்றி என்பதால், அவர் தன்னை முழு அதிகாரம் படைத்த தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார்.
ஒரு சில அரசியல் தலைவர்கள் விலகியதாலோ, விலக்கப்பட்டதாலோ ஆம் ஆத்மி கட்சி வலுவிழந்துவிடாது. ஆனால், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் புதிய அணுகுமுறையினால், எல்லோரும் எதிர்பார்த்த புதிய அரசியல் கலாசாரம் ஏற்படாது. ஏனைய அரசியல் கட்சிகளைப்போல ஆம் ஆத்மி கட்சியும் செயல்படுவதில் தவறில்லை - அந்தக் கட்சிக்கு அமோக ஆதரவளித்த தில்லி மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் எதிர்கொள்ள முடிந்தால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.