ஏமாற்றம் தொடர்கிறது!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதைப் பற்றி...
பவுமாவுடன் - ஜஸ்ப்ரீத் பும்ரா.
பவுமாவுடன் - ஜஸ்ப்ரீத் பும்ரா.
Published on
Updated on
2 min read

கொல்​கத்​தா​வின் ஈடன் கார்​டன் மைதா​னத்​தில் நடை​பெற்ற தென்​னாப்​பி​ரிக்​கா​வுக்கு எதி​ரான முதல் கிரிக்கெட் டெஸ்​டில் இந்திய அணி 30 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் தோல்வி அடைந்​தி​ருப்​பது ரசி​கர்​க​ளுக்கு பெருத்த ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. கடந்த 15 ஆண்​டு​க​ளில் இந்​தி​யா​வில் பங்​கேற்ற ஓர் ஆட்டத்​தில்​கூட தென்னாப்​பி​ரிக்கா வெற்றி பெற​வில்லை என்​பது குறிப்பிடத்தக்கது.

2012-ஆம் ஆண்டு முதல் இந்​தி​யா​வில் நடை​பெற்ற 18 டெஸ்ட் தொடர்​க​ளில் தோல்​வியே காணா​மல் வெற்றி மீது வெற்றி பெற்று வந்த இந்​திய அணி, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்​டோ​பர் - நவம்​ப​ரில் இந்​தி​யா​வில் சுற்​றுப்​ப​ய​ணம் மேற்​கொண்ட நியூ​ஸி​லாந்து அணி​யி​டம் 3-0 என தொடரை முழு​மை​யாக இழந்​தது. இந்​திய அணி கிரிக்கெட் விளை​யா​டத் தொடங்​கிய பின்​னர், 91 ஆண்​டு​க​ளில் உள்​நாட்​டில் தொடரை 3-0 என முழு​மை​யாக இழந்​தது அதுவே முதல்​முறை.

20 ஓவர் போட்டி​கள் ஆதிக்​கம் செலுத்த தொடங்​கிய பின்​னர், டெஸ்ட் ஆட்டங்​க​ளில் நிலைத்து நின்று ஆடும் போக்கு படிப்​ப​டி​யாக குறைந்து வரு​கி​றது. ஆட்டத்​தின் முதல் பந்​தில் இருந்தே அடித்து விளை​யா​டும் போக்கு, ஆடு​க​ளங்​க​ளின் நிலை​யற்ற தன்மை ஆகி​யவை கார​ண​மாக டெஸ்ட் ஆட்டங்​கள் மூன்று நாள்களுக்கு மேல் நீடிப்​ப​தில்லை.

ஒரு டெஸ்ட் ஆட்டத்​தில் ஐந்து நாள்​க​ளில் குறைந்​தது 450 ஓவர்​கள் வீசப்​பட வேண்​டிய நிலை​யில் தென்​னாப்​பி​ரிக்​கா​வு​ட​னான இந்த டெஸ்ட் இரண்டே முக்​கால் நாள்​க​ளில் 206.2 ஓவர்​க​ளி​லேயே நிறைவு பெற்​றுள்​ளது. நியூ​ஸி​லாந்​துக்கு எதி​ரான தொட​ரி​லும் பெங்​க​ளூ​ரில் 250 ஓவர்​கள், புணே​யில் 255 ஓவர்​கள், மும்​பை​யில் 201 ஓவர்​க​ளி​லேயே ஆட்டங்​கள் முடி​வுக்கு வந்​தன.

கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற இப்​போ​தைய தென்​னாப்​பி​ரிக்​கா​வுக்கு எதி​ரான டெஸ்​டில் முதல் இரண்டு நாள்​க​ளில் 26 விக்​கெட்​டு​கள் சரிந்​து​விட்​டன. ஈடன் கார்​டன் மைதா​னத்​தில் சில பந்​து​கள் கால் முட்டிக்கு கீழும் சில பந்​து​கள் தலைக்கு மேலும் சென்​ற​தால் பேட்டர்​கள் திக்​குத்​தெ​ரி​யா​மல் திண​றி​னர்.

கடந்த சுமார் 30 ஆண்​டு​க​ளில் களம் கண்ட இந்​தி​யா​வின் சுநீல் காவஸ்​கர், சச்​சின் டெண்​டுல்​கர், விராட் கோலி, சேதேஷ்​வர் புஜாரா, ராகுல் திராவிட், விவி​எஸ்.​லட்​சு​மண், இங்​கி​லாந்​தின் ஜோ ரூட், நியூ​ஸி​லாந்​தின் கேன் வில்​லி​யம்​சன், ஆஸ்​தி​ரே​லி​யா​வின் ஸ்டீவ் ஸ்மித் போன்று பொறு​மை​யும், ‘டெக்​னிக்'​கும் உள்ள ஆட்டக்​கா​ரர்​கள் மட்டுமே இது​போன்ற மைதா​னங்​க​ளில் ரன்​கள் எடுக்க முடி​யும். அது​போன்ற பொறு​மையை தென்​னாப்​பி​ரிக்க கேப்​டன் டெம்பா பவுமா கடைப்​பி​டித்​தார் என​லாம்.

இரண்​டா​வது நாள் ஆட்ட நேர இறு​தி​யில் தென்​னாப்​பி​ரிக்கா 7 விக்கெட் இழப்​புக்கு 93 ரன்​கள் எடுத்​தி​ருந்​த​போது, வெற்​றி​யின் விளிம்​பில் இந்​திய அணி என எல்​லோ​ருமே கரு​தி​னர். ஆனால், பவுமா கடைசி வரிசை ஆட்டக்​கா​ரர்​க​ளு​டன் சேர்ந்து 62 ரன்​கள் சேர்த்​தது தென்னாப்பிரிக்க அணி​யின் வெற்​றி​யில் பெரும் பங்​காற்​றி​யது. இன்​னொ​ரு​பு​றம், இந்​திய அணி​யின் தேர்​வும் விவா​தத்​துக்கு உரி​ய​தாக உள்​ளது. கோலி, ரோஹித் சர்​மா​வின் ஓய்​வுக்​குப் பிறகு பெரிய வெற்​றி​டம் உரு​வாகி உள்​ளது.

முதல் இன்​னிங்​ஸில் 100 பந்​து​க​ளுக்கு மேல் எதிர்​கொண்ட ஒரே இந்​திய பேட்டர் கே.எல்.​ரா​குல் மட்டுமே. கேப்​டன் ஷுப்​மன் கில் காய​ம​டைந்து வெளி​யே​றிய நிலை​யில், ஜெய்ஸ்​வால், வாஷிங்​டன் சுந்​தர், ரிஷப் பந்த், ஜடேஜா, துருவ் ஜுரேல், அக்​ஸர் படேல் என யாருமே டெஸ்ட் ஆட்டங்​க​ளில் நீண்ட நேரம் நிலைத்து நின்று உறு​தி​யாக விளை​யா​டக் கூடி​ய​வர்​கள் என்று சொல்​ல​ மு​டி​யாத நிலை​யி​லேயே இந்​திய அணி உள்​ளது.

இந்​திய அணி​யில் 13 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு முதல் முறை​யாக குல்​தீப், ஜடேஜா, அக்​ஸர், வாஷிங்​டன் என 4 சுழற்​பந்​து​வீச்​சா​ளர்​கள் களம் கண்​ட​னர். ஆனால், தென்​னாப்​பி​ரிக்​கா​வின் சைமன் ஹார்​மர் சிறப்​பா​கப் பந்​து​வீசி இரண்டு இன்​னிங்ஸ்​க​ளி​லும் தலா 4 விக்​கெட்​டு​கள் சாய்த்து ஆட்ட​நா​ய​கன் விரு​தை​யும் தட்டிச் சென்​று​விட்​டார். சுழற்​பந்​து​வீச்​சுக்கு பெயர் பெற்ற இந்​திய அணியை அந்த சுழற்​பந்​து​வீச்​சைக் கொண்டே தென்​னாப்​பி​ரிக்க அணி சாய்த்​து​விட்​டது.

முன்​பு​போல கோட்டை​வி​டும் அணி​யாக இல்​லா​மல், கடந்த ஓராண்​டுக்​கும் மேலா​கவே தென்​னாப்​பி​ரிக்க அணி சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​ப​டுத்தி வரு​கி​றது. பவுமா கேப்​ட​னான பிறகு, 11 டெஸ்​டு​க​ளில் 10-இல் அந்த அணி வென்​றுள்​ளது.

கடந்த ஜூனில் லார்ட்ஸ் மைதா​னத்​தில் நடை​பெற்ற டெஸ்ட் சாம்பி​யன்​ஷிப் போட்டி​யின் இறுதி ஆட்டத்​தில் முதல் இன்​னிங்​ஸில் 138 ரன்​க​ளுக்கு சுருண்​ட​போ​தும், நம்​பிக்கை இழக்​கா​மல் போராடி நடப்பு சாம்​பி​ய​னான ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ராக 282 ரன்​கள் என்ற கடி​ன​மான இலக்கை விரட்டி (சேஸ் செய்து) வென்றது.

அதே​போன்று, கடந்த அக்​டோ​ப​ரில் பாகிஸ்​தா​னுக்கு சென்​ற​போது, முதல் டெஸ்டை இழந்​தா​லும் போராடி இரண்​டா​வது டெஸ்டில் தென்​னாப்​பி​ரிக்கா வென்​றது.

வெற்றி வலம் வந்​து​கொண்​டி​ருந்த இந்​தியா பின்​ன​டை​வை​யும், தொடர்ந்து தோல்​வி​யைத் தழு​வி​வந்த தென்​னாப்​பி​ரிக்கா வெற்​றி​மு​கமும் காண்​ப​து​தான் கிரிக்கெட் விளை​யாட்​டில் சுவா​ரஸ்​யம். ஒரு​பு​றம் ஆட்டக்​கா​ரர்​க​ளின் உத்​தி​யில் மாற்​றம் தேவை என்​றால், ஆடு​க​ளத் தயா​ரிப்​பும் சர்ச்​சைக்​கு​ரி​ய​தாகி இருக்​கி​ற​து.​

இந்​தப் பின்​ன​ணி​யில், அணித் தேர்​வில் மாற்​றம், ஆடு​க​ளத்​தில் மாற்​றம், ஆட்டக்​கா​ரர்​க​ளின் உத்​தி​யில் மாற்​றம் மேற்​கொண்டு, குவா​ஹாட்​டி​யில் நவம்​பர் 22-இல் தொடங்​கும் இரண்​டா​வது டெஸ்​டில் இந்​திய அணி வெற்றி பெற்று தொட​ரைச் சமன் செய்ய வேண்​டும் என்​பதே ரசி​கர்​க​ளின் எ​திர்​பார்ப்​பா​கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com