

பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிலையற்ற தன்மையை முற்றிலுமாக இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு முடிவை நோக்கி நகர்த்தி இருக்கிறது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு. திடுதிப்பென்று இந்தியா மீதான அபராதத்துடன் கூடிய இறக்குமதி வரியை 50%-இல் இருந்து 18%-ஆகக் குறைப்பதாக அவர் தன்னிச்சையாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய திருப்பம்.
அறிவிப்புகள் மூலம் எதிர்தரப்புக்கு அழுத்தத்தையும், கட்டாயத்தையும் ஏற்படுத்துவது என்பது இரண்டாவது தடவை அதிபராகப் பதவி ஏற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் கையில் எடுத்திருக்கும் அஸ்திரம். அந்த வரிசையில் இந்த முடிவு இணைகிறது.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தில் இறக்குமதி வரியைக் குறைத்ததற்குப் பின்னால், அமெரிக்க அதிபருக்கு சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இறக்குமதி வரி விதிப்பால் அதிகரித்திருக்கும் உணவுப்பொருள்களின் விலைவாசியையும் கட்டுக்குள் கொண்டுவர வரிவிதிப்பைக் குறைத்தாக வேண்டும்.
அடுத்தபடியாக, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பிரிட்டன், நியூசிலாந்து என்று வரிசையாக இந்தியா செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க அரசை யோசிக்க வைத்திருக்கக் கூடும். அந்த ஒப்பந்தங்களால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதன் விளைவாகவும் அதிபரின் அறிவிப்பு இருக்கக்கூடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனமாற்றத்துக்கு மிகப் பெரிய காரணமாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவர் இந்தியா-அமெரிக்க உறவு தடம் புரண்டு விடாமல், மீண்டும் பழையபடி நட்புறவுடன் தொடர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
ஆசியாவில் உள்ள இந்தியாவின் ஏற்றுமதிப் போட்டியாளர்கள் அனைவரையும்விடக் குறைவான இறக்குமதி வரி இந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருப்பது ஏனைய உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் மீதும், வங்கதேசத்தின் மீதும் 19%, வியத்நாம் மீது 20% இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மீதான வரி 18% என்பதுடன் நின்றுவிடவில்லை; சீனா மீதான வரி விதிப்பு 31% என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு இறுதி முடிவா இல்லை, இதற்கு மேல் துறை சார்ந்த கூடுதல் வரி விதிக்கப்படுமா என்பது குறித்துத் தெளிவு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இறக்குமதி வரி 18% என்று டிரம்ப் அறிவித்திருக்கிறாரே தவிர, அதில் பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் இன்னும் இல்லை. இந்த வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வருமா, இல்லையா என்று தெரியவில்லை. இருதரப்பு ஒப்பந்தம் கையொப்பமானால்தான் அது குறித்த தெளிவு வரும்.
வரிக் குறைப்புக்காக, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்திருப்பது, எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை. படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, அடுத்த காலகட்டத்தில் அது நடக்கப்போவது இல்லை. நாளொன்றுக்கு 13 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட முடியாது. தனது உரிமையை இந்தப் பிரச்னையில் இந்தியா விட்டுக் கொடுக்காது என்பது தெளிவாக்கப்பட்ட முடிவு.
அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் இந்தியா 0% வரி விதிக்கும் என்கிற அறிவிப்பும், 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகளுக்கு உத்தரவாதம் அறிவித்திருக்கிறது என்பதும், அதிபர் டிரம்ப் தானாக முன்வந்து இந்தியா மீது திணிக்க முற்பட்டிருக்கும் நிபந்தனைகள். அமெரிக்காவில் இருந்தான இந்திய இறக்குமதி சுமார் 45 பில்லியன் டாலர் மட்டுமே என்கிற நிலையில், அதை 500 பில்லியன் டாலராக உயர்த்துவது என்பதுகனவிலும் நடக்காத கற்பனையில்லாமல் வேறென்ன?
எல்லாவற்றையும்விட, அமெரிக்காவின் வேளாண் பொருள்களுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்துவிட ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பது ஏற்புடையதல்ல என்பது மட்டுமல்ல, நம்ப முடியாததும்கூட. இந்தியாவின் வேளாண், பால் பொருள்கள் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதை வர்த்தகத் துறை அமைச்சர் மிகவும் தெளிவாகவே தெரிவித்திருக்கிறார். வெள்ளை மாளிகை அதிகாரிகள் எந்த அடிப்படையில் இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் வேலைவாய்ப்பில் விவசாயம் வெறும் 1.2% மட்டுமே. அதன் பங்கு ஜிடிபியில் 1%. ஆனால், இந்தியாவின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 16.3%. அது மட்டுமா? மொத்த வேலைவாய்ப்பில் வேளாண் துறையின் பங்கு 45%. நரேந்திர மோடி அரசு உள்பட யார் ஆட்சியில் இருந்தாலும், இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிராக, தடையற்ற வேளாண் இறக்குமதிக்கு அனுமதி அளித்தால், ஒட்டுமொத்த தேசமே கொந்தளித்துவிடும் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாதா என்ன?
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் கட்டாயத் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கட்டாயப்படுத்திஇந்தியாவை ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க நினைப்பது வேண்டாத வேலை. அதிபர் டிரம்ப்பின் சீண்டல்களுக்குப் பதிலளிக்காமல் அமைதி காத்து, அவரை வலிய வந்து நேசக்கரம் நீட்ட வைத்திருக்கும் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. ஒப்பந்தம் கையொப்பமாக இன்னும் இருக்கிறது காத தூரம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.