நீட் தேர்வில் கேரள மாணவியிடம் கெடுபிடி: 4 ஆசிரியர்கள் இடைநீக்கம்
மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின்போது கேரள மாநிலம், கண்ணனூரில் மாணவி ஒருவரிடம் நடைபெற்ற கெடுபிடி காரணமாக


மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின்போது கேரள மாநிலம், கண்ணனூரில் மாணவி ஒருவரிடம் நடைபெற்ற கெடுபிடி காரணமாக, பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெற்றது.
அப்போது, தேர்வு எழுத வந்த மாணவர்களின் முழுக்கை சட்டைகள் கிழிக்கப்பட்டு அரைக்கை சட்டைகளாக்கப்பட்டன. மாணவிகளைப் பொருத்தவரை தாவணி, மூக்குத்தி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலம், கண்ணனூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மாணவி ஒருவரிடம் மேல் உள்ளாடையை அகற்றிவிட்டு தேர்வு எழுதுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, நாடு முழுவதும் பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
4 ஆசிரியர்கள் இடைநீக்கம்: இந்நிலையில், மாணவியின் உள்ளாடையை அகற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படும் 4 ஆசிரியர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு நடைபெற்ற பள்ளியின் முதல்வர் கே.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஜமாலுதீன் மன்னிப்புக் கோர வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவர் ஆர்.கே.சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.
பேரவையில் கண்டனம்: இந்த விவகாரம், கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. கட்சி பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
கண்ணனூரில் உள்ளாடையை அகற்றுமாறு கூறப்பட்ட மாணவியையும், அவரது பெற்றோரையும் சந்திக்குமாறு பெண் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் காட்டப்பட்ட கெடுபிடிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் பினராயி விஜயன்.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர்.
சிபிஎஸ்இ மீது வழக்குப் பதிவு: இதனிடையே, கண்ணனூரில் மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மீது கேரள மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.
சிபிஎஸ்இ வருத்தம்: இந்நிலையில், கண்ணனூர் சம்பவம் தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்தது.
இதுதொடர்பாக, அதன் செய்தித் தொடர்பாளர் ரமா சர்மா தில்லியில் கூறுகையில், 'தேர்வு நடைமுறை குறித்து பொறாமை கொண்ட சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தேர்வின்போது மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...